Pages

Monday, March 29, 2010

சரித்திரவீரன் சங்கிலி (பாகம் 5 – மதமாற்றம்)


செந்தணல் கொட்டும் நட்ட நடுப்பகல் எங்கும் ஒருவித வாட்டத்தன்மை விரவியிருந்தது. சூரிய வெளியெங்கும் கானல் பறிந்து கட்புல வேதனையளித்தது. வீசும் காற்றின் வெம்மையும் கானலும் காட்சிகளில் கனலும் தெறித்துக்கொண்டிருந்தது.

இவ்வேளையில் தனது அன்றைய அரசியல் அலுவல்களை முடித்துக்கொண்டு நந்தவனத்தில் ஆறுதலாக இருந்த சங்கிலியிடம் வாயிற்காப்பாளன் வந்து “அரசருக்கு வணக்கம்! தங்களைக் காண்பதற்காக ஒற்றர் படைத்தலைவர் மன்னாரில் இருந்து வந்திருக்கின்றார்” என்று கூறினான். “சரி வரச்சொல்!” என்று கூறிய சங்கிலி, என்ன விடயமாக வந்திருப்பான் எனச் சிந்தித்தான். அதற்குள் உள்வந்த ஒற்றர் படைத்தலைவன் “வணக்கம் அரசே!” என்றான். “ஆகட்டும்! பல்லவராஜா, என்ன விஷயமாக இங்கு வந்தாய்?” “மன்னா! நம் இந்து மதத்திற்கு அழிவு வரப்போகின்றது. மன்னாரில் பறங்கிகள் பலரை இந்து மதத்திலிருந்து தமது அற்ப சலுகைகளுக்காக கிறிஸ்தவ மதத்திற்கு மாற்றுகிறார்கள்” எனக் கூறினான். இச்செய்தி கேட்ட சங்கிலி மிகவும் கொதித்தெழுந்தான். ஏனெனில் மன்னார் அப்பொழுது யாழ்ப்பாணத்திற்கு உட்பட்ட பிரதேசமாக இருந்தது.
---------------------------------------------------

கி.பி 1505 இல் போர்த்துக்கேயர் இலங்கையில் காலித்துறைமுகத்தை வந்தடைந்தனர். அப்பொழுது தென்னிலங்கையை தர்மபராக்கிரமபாகு மன்னன் கோட்டைக்காடு எனும் நகரத்தில் இருந்து ஆண்டுவந்தான். போர்த்துக்கேயர் கொழும்பிலே ஒரு கோட்டையைக் கட்டி அரசாண்டு வந்தனர். கி.பி 1520 ஆம் ஆண்டுக்குப் பின்னர் தமது ஆதிக்கத்தைப் பரப்பிய போர்த்துக்கேயர் தமது மதத்தையும் பரப்பத்தொடங்கினர். இதற்காக சிங்கள அரசனாகிய புவனேகபாகுவின் மகன் தர்மபாலனைக் கிறிஸ்தவன் ஆக்குவதற்காக புவனேகபாகுவை தற்செயலாகக் சுட்டது போல் சுட்டு அவன் மகனுக்கு அடைக்கலம் கொடுத்து அவனைக் கிறிஸ்தவன் ஆக்கிஅ வன் மூலமாக இலங்கையில் தமது மதத்தை பரப்புவதில் தீவிரமாக முனைந்திருந்தனர். பறங்கிகள் மெல்ல மெல்ல அனேக இடங்களைக் கவர்ந்து தமதாக்கி தம்மர செலுத்தினர். 1543 இல் மன்னாருக்கு ஒரு கிறிஸ்தவப் பாதிரியாரை அனுப்பி அங்குள்ள பலரைக் கிறிஸ்தவர்கள் ஆக்கினர்.
--------------------------------------

நல்லூர் அரசவையில் தன் அருகில் நின்ற தனது மெய்க்காவலனும் நண்பனுமாகிய வீரமாப்பாணனையும் தளபதி இமையாணனையும் நோக்கிய சங்கிலி “நாம் உடனடியாக மன்னார் சென்றே ஆகவேண்டும்” எனக் கூறினான். “நானும் அவ்வாறு தான் நினைத்திருக்கின்றேன். உங்கள் உத்தரவு கிடைத்தால் நாம் இங்கிருந்து இப்பபொழுதே புறப்படலாம்” என தளபதி கூறினான். இதைக்கேட்ட சங்கிலி உடனடியாக பயணத்திற்கு ஏற்பாடு செய்யும்படி கூறி பயணத்திற்கு சித்தமானான். அதன்படி விரைவாக மன்னார் சென்றடைந்து அங்குள்ள அரச மாளிகையில் தங்கினான். அத்துடன் போர்த்துக்கேய கிறிஸ்தவ மதகுருவை தம்மை வந்து சந்திக்கும்படி தளபதியிடம் ஒரு ஓலையைக் கொடுத்தனுப்பினான்.

யாழ்ப்பாணத்து மாளிகைகள் போலவே விசேடமாக அமைக்கப்பட்ட அரச மாளிகையின் சபா மண்டபத்தில் அடுத்தநாள் கிறிஸ்தவ குருவை சங்கிலி சந்தித்தான். “ஒரு மனிதனின் சொந்த விருப்பத்திற்கு மாறாக அவர்களை ஒரு மதத்தில் இருந்து இன்னோர் மதத்திற்கு மாற்றுவது மிகவும் கொடிய பிழையாகும் மதமானது தாய் போன்றது . இரு பெண்களை பெற்ற தாயாகக் கருத முடியாது. தாயென்பவள் ஒருவர் தான். அந்தப் பத்து மாதம் சுமந்து பெற்ற தாயைப்போன்றது தான் மதமும். அதைக் கேவலப்படுத்தக் கூடாது. உங்கள் மதம் உங்களுக்கு எவ்வளவு முக்கியமோ அதைப்போல எங்கள் மதமும் எங்களுக்கு முக்கியம். இனிமேல் இது போன்ற காரியங்களைச் செய்யாதீர்கள்” என ஆவேசமாகக் அக்குருவபை; பார்த்து சங்கிலி கூறினான்.

சங்கிலியது ஆவேசப்பேச்சுக்களால் அடியோடு பயந்துவிட்ட குரு இனி தாம் அவ்வாறு செய்யவில்லை என சத்தியம் செய்து மன்னார் பிரதேசத்தில் இந்ந்து மீண்டார். இதன் பின் அற்ப சலுகைகளுக்காக மதம் மாறிய அனைவரையும் தண்டித்து யாழ்ப்பாணம் வந்து சேர்ந்தான் சங்கிலி.

இதன்பின் சிறிது காலப்பகுதியில் மீண்டும் தூத்துக்குடியில் இருந்து ஒரு குருவானவர் வந்த மன்னாரில் கிறிஸ்தவ மதத்தைப் பரப்புகிறார் எனக் கேள்விப்பட்ட சங்கிலி கோபாவேசம் கொண்டு சிறுபடையுடன் மீண்டும் மன்னார் சென்றான். அங்கு எவ்வளவு தேடியும் அந்தக்குருவை காணமுடியவில்லை. இதனால் அவ்விடத்து மக்களைச் சந்திப்பதற்கான ஒரு ஏற்பாட்டைச் செய்தான்.

“மகாஜனங்களே! நூன் எனது மதத்தைக் காப்பாற்ற எவ்வளவோ முயற்சிகளை எடுத்தேன். நீங்கள் அதற்கு ஒன்றுக்குமே இசையவில்லை. எடுப்பார் கைப்பிள்ளை போல எல்லோர் பக்கமும் தாவுகிறீர்கள். என் சொல்லைக்கேட்டு உங்கள் மதத்தை அழியாமல் கப்பாற்றுங்கள். இல்லையேல் கடுமையான பின்விளைவுகளை சந்திக்க வேண்டிவரும். என்ற சங்கிலி மன்னாரில் சிறிது காலம் தங்கி, அங்கு இடம்பெறும் நிகழ்வுகளை அவதானித்து வந்தான். அரசசபையில் ஒருநாள் தளபதியுடன் மன்னார் நிலைமைகளை பற்றிக் கலந்தாலோசித்தபோது இமையானண் கூறினான் “மதம் மாறியவர்களில் சிலபேர் போர்த்துக்கேயரின் உதவியுடன், அவர்கள் இருக்கிறார்கள் என்ற தைரியத்தில் எங்களையே எதிர்த்துப்பேசுகிறார்கள். பறங்கிகளுடன் இணைந்து தாமும் மதத்தைப்பரப்புகிறார்கள்” என்று சலிப்படைந்தான்.

இதைக்கேட்ட சங்கிலி இனியும்தாமதிப்பதில் பயனில்லை என்று கருதியதால் நாட்டு நன்மைக்காக, மதத்தின் நன்மைக்காக தனக்கு சிறிதும் விருப்பமில்லாத காரியமொன்றைச் செய்தான். “எதிர்க்கும் ஒவ்வொரு தலையையும் சீவுங்கள்” எனக் கட்டளையிட்டான். இதனைக்கேட்ட வீரமாப்பாணனும் இமையாணனும் திகைப்படைந்தனர். வேறு வழியின்றி தம்முடன் அழைத்துவந்த படைக்கு அரசனின் கட்டளையைத் தெரிவித்தனர். இதனால் மன்னாரிலே அன்று நிந்தம் புரிந்த அறுநூறு பேருக்கு கொலைத்தண்டனை வழங்கப்பட்டது. இதனால் மன்னார் வாசிகள் பயந்து அரசனது சொல்லைக் கேட்டு ஒழுகி நடந்தார்கள். அறுநூறு பேர் கொலையுண்டதை அறிந்த பறங்கிக் குருவானவர், இனித்தனது கருத்துக்கள் மன்னார் மக்களிடையே எடுபடாது என்ற காரணத்தால் தனது தலை பிழைத்ததே பெரும் புண்ணியம் என நினைத்து கடல் மார்க்கமாக கோவைக்கு தப்பியோடினார்.

பெருத்த மனநிம்மதியுடன் சங்கிலியும் அவன் பரிவாரமும் யாழ்ப்பாணத்திற்கு மீண்டது. யாழ்ப்பாணத்தை வந்தடைந்ததும் பிறிதொரு கவலை சங்கிலியை வாட்டத் தொடங்கியது.

சாதிக்க வருவான்…

0 comments:

Post a Comment