Pages

Monday, March 29, 2010

சரித்திரவீரன் சங்கிலி (பாகம் 3 - காதலுடன்)


அப்பாமுதலியின் வீட்டுக்கு பின்னால் உள்ள தென்னந்தேப்புக்கு அப்பால் அமைந்த ஓர் அழகிய சோலை. அச்சோலையில் மனிதரின் முயற்சியால் விளைந்தது என்று சொல்லக்கூடிய எதுவுமே இல்லை. சிறிதளவும் செயற்கை மரக்கன்றுகள் ஊன்றப்படாமல் எல்லாம் இயற்கையால் இயற்கையாகவே அங்கு ஜனித்து வளர்ந்து சர்வாலங்கார கோலத்துடன் விளங்கின. அழகும் பயனும் அற்ற எந்தவொரு செடி, கொடி, மரமும் அந்த இயற்கைச் சோலையில் இல்லாமலிருந்தது ஒரு பெரும் விந்தையாகவே இருந்தது. தோட்டக்கலையில் தேர்ந்த ஒருவன் பல படியாகப் பரிசோதித்து ஒவ்வொரு செடி, கொடி, மரமாகத் தேர்ந்தெடுத்து அதற்குரிய பண்பு உணர்ந்து அந்தந்த இடத்தில் அதையதை கவனச் சிரத்தையுடன் நட்டு பயிராக்கி வளர்த்து வைத்ததைப் போல அந்தக் காட்டுச் சோலை ஓர் ஒழுங்கு முறையுடன் வளர்ந்து நின்றன. ஒரு முட்செடியோ ஒரு நாகதாளியையோ அந்த வனச்சோலையெங்கும் தேடினாலும் காணமுடியாது. உயர்தரமான மலர்ச்செடி, கொடி, மரங்களும் கனிவகை தருக்களும் மட்டுமே அங்கு செழிப்புடன் வளர்ந்திருந்தன.


“சே! இந்த ஆண்கள் தான் எத்தனை மோசம். நேற்று வந்த சங்கிலி இருக்கிறாரே, அவருக்கு மனதில் என்ன மகாராஜா என்ற நினைப்பா? ஒரு பெண்ணை கண்களால் இவ்வாறு எல்லாம் அளவெடுப்பதா? இது தான் அரச குடும்பத்தாரின் பண்போ?” என்று நினைத்தாள். ஆனால் அவள் உள் மனது இவ்வாறு கூறியது ‘உனக்குத் தான் அவர் உன்னையே வைத்த கண் வாங்காமல் பார்க்கின்றார் என்று தெரிந்ததல்லவா? பானத்தை வைத்து விட்டு வீட்டினுள் போக வேண்டியது தானே? ஏன் அவர் கண்களால் அளவெடுக்கும் வரை அங்கேயே நின்றாய். உன்னை அங்கம் அங்கமாக அவர் அளவெடுப்பதை பெரிதும் விரும்பினாய். அதனால் தானே அப்பாவின் பக்கத்தில் சிறிது நேரம் நின்றாய்?’ எனக் கேட்டது.

அவள் உள்ளம் இவ்வாறான போராட்டத்தில் இருந்தாலும் உண்மை அதுவல்ல. சங்கிலி அரசகுமாரனைப் பற்றி தனது தகப்பன் வந்து கூறும் போதெல்லாம் அவர் அப்படி இருப்பாரா? அல்லது இப்படியிருப்பாரா? ஏன மனதிலேயே ஒரு சங்கிலியின் போலியான உருவத்தைக் கற்பனை செய்து கொள்வாள். நாளாக நாளாக அவரைக் காண வேண்டும் என்ற அவா அவளிடத்தே உண்டானது. அவளையறியாமலே அவள் மனம் சங்கிலி பால் லயித்துவிட்டது.

அன்றும் வீடு வந்த வாலிபன் அழகாய் இருந்தபோதும் யாரெனத் தெரியாததால் அவன் தன்னை அப்படிப் பார்க்கின்றானே என நினைத்து கூனிக்குறுகிப் போனாள். ஆனால் அவன் தான் சங்கிலி என தந்தை மூலம் அறிந்த போது எவ்வளவு சந்தோஷப்பட்டாள். ‘இப்படியென்றால் நான் நன்றாக நிமிர்ந்து பார்த்திருப்பேனே?’ என எண்ணமிட்டாள். இவ்வாறு நடந்த சம்பவங்களை நினைத்து சிரித்த வடிவழகியை செங்கமலத்தின் குரல் நிஜ உலகிற்கு கொண்டு வந்தது.

“மகாராணிக்கு அப்படியென்ன சிரிப்பு?” “அதொன்றும் இல்லையடி. நான் உன்னை ஒன்று கேட்பேன். எனக்கு விளக்கம் தருவாயா?” “விளக்குவதற்குத் தானே நான் இருக்கின்றேன். தாராளமாகக் கூறலாம்” “ஒரு ஆடவன் ஒரு பெண்ணை இமைக்காமல் கண்களால் அங்கம் அங்கமாக அளவெடுத்தால் அதற்கு என்ன அர்த்தம்?” “வேறு என்ன? காதல் தான். ஏன் யாராவது உன்னை அவ்வாறு பார்த்தார்களா?” செங்கமலத்தின் பதிலைக் கேட்டதும் மனதுக்குள் பேருவகை எய்தினாலும் அதை வெளிக்காட்டாது “அப்படியொன்றும் இல்லை. நேற்றொருவர் நம் வீடு வந்தார். தண்ணீர் கொடுக்க வந்த என்னை கண்வெட்டாமல் பார்த்தார். அது தான்…” “யாரவன்? கிழவனா… குமரனா?” அறியும் ஆவலில் கேட்டால் செங்கமலம். “குமரன் தான்….” இழுத்தாள் வடிவு. “குமரனா…, யாரடி அவன்? எனக்குக் கூற மாட்டாயா? நான் உன் உயிர்த்தோழியல்லவா… கூறு … கூறு….” மன்றாடினாள்.

“சங்கிலி… தான்…” “என்னடி சங்கிலியா….? சங்கிலி என்று சாதாரணமாகச் சொல்கிறாய். அவர் யாழ்ப்பாண இளவரசன். ஆரம்பத்தில் நான் உன்னை மகாராணி என்று கூறியது உண்மையாகப் போய்விட்டது.” சந்தோசத்தில் கத்தினாள் செங்கமலம். “சும்மா உந்தக் கதைகளை விடடி… அவருக்குத் தான் திருமணமாயிற்றே” தனது ஏமாற்றத்தை மறைத்துக் கொண்டு கூறினாள் வடிவு. “அரச குடும்பத்தில் இதெல்லாம் சகஜம் வடிவு. அவர் திருமணம் செய்திருந்தாலும். அவர் மனமும் உன்னை நாடுவது போல் படுகின்றது” சமாதானம் கூறினாள் செங்கமலம்.
இது இவ்வாறு இருக்க சோழியர்புரம் முழுவதும் சங்கிலியின் குதிரை சுற்றிக் களைத்துவிட்டது. “இந்த வழி போயிருப்பாளோ? இருக்காது… வாசனை எதுவும் இல்லையே! அவள் போகும் வழியெல்லாம் பூ மணக்குமே!” என்று எண்ணமிட்டவாறு எங்கெங்கெல்லாம் வழி தெரிகின்றதோ, அங்கெல்லாம் குதிரையை விட்டான் சங்கிலி. ஓரிடத்தில் இரு பெண்கள் அளவளாவிக் கொண்டிருந்தார்கள். அவர்களைப் பார்த்த சங்கிலி சந்தோசப்பட்டான். “ஓ! வடிவழகி. நான் தேடி வந்த திருமலரா இவள்?” வேகமாகக் குதிரையைத் தட்டி அவள் இருந்த இடம் நோக்கி வந்து சட்டென்று தரையில் குதித்துக் கடிவாளத்தை குதிரை மீது விட்டெறிந்து அவன் கிட்;ட வந்த போது… “ஓ! நீங்களா?...” என்றாள் வியப்புடன் வடிவழகி. “நானே தான்…” “ஏது இந்தப்பக்கம்?” “ வேட்டை…. வே..ட்டைக்கு…” மென்று விழுங்கினான். “வில்லுமில்லாமல், அம்புமில்லாமல் வேட்டைக்கு வந்த முதல் வீரர் நீங்களாகத் தான் இருப்பீர்கள்” தோழிகள் இருவரும் சிரித்தார்கள். சங்கிலி முகத்தில் அசடு வழிந்தது. அதை மறைப்பதற்காக “நான் வந்தது மான் வேட்டைக்கு. அதைக் கொல்ல இஷ்டமில்லை. ஆதலால் உயிரோடு பிடித்துப் போக வந்தேன்” என்று தனது இலக்கியப் புலமையை வெளிப்படுத்தினான். “இவரை உனக்கு முன்னமே தெரியுமா வடிவு?” செங்கமலம் கேட்டாள். “தெரியும்” “எப்படி?” “இவர் தான் சங்கிலி… எங்கள் வீட்டிற்கு….” “ஓ! இவர் தான் அவரா?.... ம்…. உங்களுக்குள் கதைக்க ஆயிரம் இருக்கும். நான் ஏன் குறுக்காக நிற்பான். நான் போய் வருகின்றேன். வடிவழகி உன்னை நான் மீண்டும் வீட்டில் சந்திக்கின்றேன்” பறந்தாள் செங்கமலம். “ஏய்! நில்லு செங்கமலம் நில்லு…”

கூடவே போக எத்தணித்த வடிவழகியின் கையைத் தடுத்து நிறுத்தியது சங்கிலியின் கை. அத்துடன் “குறிப்பறிந்த தோழி…” என அவன் உதடுகள் கூறின. தான் மனத்தால் மணாளனாக வரித்த இளவரசன் தன் அருகாமையில் உள்ளான் என்ற சங்கடத்தாலும் இன்ப பூரிப்பாலும் அவள் உடலில் ஆயிரம் மின்னல்கள் பாய்ந்தன. அவற்றையெல்லாம் மறைத்துக் கொண்டு.

“எடுங்கள் கையை…” என்றாள் கோபமாக. தடுத்த கை இறுகப் பற்றியது. திடீரென நடந்து விட்ட இந்தச் சம்பவத்தால் சங்கடப்பட்ட வடிவழகி “ என்ன இது! இப்படித்தான் முன்பின் தெரியாத பெண்களிடம் தமிழ் வீரர்கள் நடந்து கொள்வார்களோ?” என அவனின் பிடியில் இருந்த தன் கையை விலக்காமலே கேட்டாள். “முன் பின் தெரியாதவளா? நான் என்னவளின் கையைத் தானே பற்றினேன்” “ஓ! நல்ல அழகு. ஏன்னவளது கையா? நான் என்ன உங்கள் முறைப்பெண்ணா? அல்லது நீங்கள் என்ன என் மாமனா? மச்சினனா?” “அவற்றை விட மேலானவன்.” “ அப்படி என்றால் விபரியும் பார்க்கலாம்” அவன் வாயால் அப்படி ஒரு சொல்லை கேட்க வேண்டும் என்ற ஆவலில் கூறினாள்.

அவள் காது மடல்களுக்கு அருகாமையில் சென்று “காதலன்….” இந்த வார்த்தையால் திக்குமுக்காடிப்போன வடிவழகி தன் பின் பக்கமாக மிகவும் நெருங்கி வந்துவிட்ட சங்கிலியை உணர்ந்து கொண்டாள். பின்புறமாக வந்த சங்கிலி தனது நீண்ட கைகளால் அவளை அணைத்துக்கொண்டான். அவன் அணைப்பில் இருந்து விலகாமல் “உறவைப் பிரயோகிக்கத் தொடங்கி விட்டீர்கள் போலிருக்கின்றதே” எனக் குழைந்தாள்.

அவனது முரட்டு இதழ்கள் காதை வருடி கழுத்தில் புதைந்தது நீண்ட நேரம் மெய்மறந்து இருந்த இருவரில் வடிவழகியே சட்டென விலகி “ஆசை மோசத்தை உண்டு பண்ணிவிடும். எல்லாம் திருமணத்திற்கு அப்புறம் தான்” எனக்; கூற சங்கிலி சிணுங்கினான். பின் இருவருமே மிகுந்த ஆசையுடன் ஒருவரை பற்றி ஒருவர் தங்கள் ஆசைகளையும் விருப்பங்களையும் பரிமாறிக் கொண்டனர். சோழியர்புரம் தோப்புக்களில் சங்கிலி தனது குதிரையின் முன்பக்கமாக வடிவழகியை இருத்தி இன்பமயமாக எல்லாவற்றையும் மறந்து உலாவந்தான். இவ்வாறான பொழுதில் ஒரு துக்கம் அவனை நோக்கி நண்பன் வடிவில் வந்தது.

சாதிக்க வருவான்…

0 comments:

Post a Comment