Pages

Tuesday, September 28, 2010

சரித்திரவீரன் சங்கிலி (பாகம் 29 –துவண்ட கொடி)

பறங்கி வீரர்களால் சிறையில் தள்ளப்பட்டிருந்த சங்கிலி இரத்தம் அதிகமாக வெளியேறியதால் நினைவற்று மயங்கிக் கிடந்தான். இக்கொடுமையை காணச் சகிக்காத பகலவனும் தன் ஒளியை சிறிது சிறிதாகக் குறைத்துக் கொண்டு மேற்றிசையில் மறைந்து விட்டான். மெல்ல இருள் ஏறியதும், ஓர் உருவம் மெதுவாக சங்கிலியிருந்த சிறைக்கதவை ஓசைப்படாமல் திறந்து உள் வந்தது.

அங்கு, சங்கிலியனை கொஞ்ச நேரம்; வைத்த கண் வாங்காது பார்த்துக் கொண்டிருந்தது. பின்னர் குருதியில் தோய்ந்த அவன் ஆடைகளை உடல் வலிக்காதவாறு மெதுவாகக் கழற்றியது. வீரஞ்செறிந்த அவன் உடலின் நிலை கண்டு அவ்வுருவத்தின் கண்களில் இருந்து நீர் வழிந்தது. மெல்ல சங்கியது காயங்களை சுடுநீர் கொண்டு சுத்தப்படுத்தி பின் காயங்களுக்கு மருந்திட்டுக் கட்டியது. தான் கொணர்ந்த மாற்றுடையை அவனுக்கு அணிவித்து, உயர்ந்த மது வகை ஒன்றை அவன் வாய்க்குள் ஊற்றியது. சங்கிலியின் கடைவாயால் வழிந்தோடிய மதுவை ஆசையுடன் துடைத்து விட்டது. பின் நீண்ட நேரம் அங்கேயே உட்கார்ந்திருந்தது.

இந்த உபசாரங்களால் சிறிது சுய நினைவுக்கு வந்த சங்கிலி மெல்லக் கண் விழித்தான். உடம்பு, உயிரே போய்விடும் அளவிற்கு வலித்தது. தன் வாயருகே மது மணப்பது போல உணர்ந்ததால் சற்று அங்கும் இங்கும் கண்களைத் திருப்பியவன், பக்கத்தில் இருந்த உருவத்தைப் பார்த்ததும் “நீயா?” என வினவியதுடன் எழுந்திருக்கவும் முற்பட்டான். அது முடியாமல் போகவே மீண்டும் படுத்துக் கொண்டான்.
“ஆம் நானே தான்”
“இங்கு எப்படி வந்தாய்?”
“இதென்ன கேள்வி, என்னிடத்தில் நான் சுற்றித்திரிய யார் தடுப்பார்கள்?” என்று கூறியது அவ்வுருவம். அப்பொழுது தான் சங்கிலி, தன் காயங்கள் சுத்தப்படுத்தப்பட்டு மருந்திடப்பட்டு உடை மாற்றியிருப்பதை கவனித்தான். இதனால் சங்கடப்பட்ட சங்கிலி,
“எலியானா! இந்த உடைகளை மாற்றியது யார்?”
“ஏன்.. நான் தான்…”
“உனக்கு வெட்கமாக இல்லையா?”
“எதற்கு?”
“ஒரு ஆடவனின் உடையை மாற்றுவதற்கு”
“இதில் வெட்கமென்ன இருக்கின்றது. உங்களை என்றோ நான் கணவனாக வரித்து விட்டேன். ஒரு கணவனுக்கு மனைவி இதைக் கூடச் செய்யக் கூடாதா?” என நகைத்தாள்.
“விளையாடாதே எலியானா!”
“நீங்கள் விளையாடும் நிலையிலா இருக்கிறீர்கள்”
“உன் வேடிக்கைப் பேச்சுக்களை நிறுத்து, அது ரசிப்பதாக இல்லை”
“அப்படியானால் ருசிக்கும் படியாக ஒன்று தருகின்றேன்” என அவன் இதழ்களை தன்னிதழ்களால் அழுத்தி முத்தமிட்டாள்.
சிறிது நேரத்தில் நிகழ்ந்து விட்ட இந்தச் சம்பவத்தால் நிலை தடுமாறிய சங்கிலி, “என் நிலை தெரியாமல் விளையாடுகின்றாய். இது தகாது” எனக் கூறினான். “நன்றாகவே தெரியும். நீங்கள் உறங்குங்கள். நாளை உங்களை விடுவிப்பதற்கான ஏற்பாடுகளைச் செய்கின்றேன்” எனக் கூறிவிட்டுச் சென்றாள். சங்கிலி பேச சக்தியற்று வாயடைத்து நின்றான்.

மறுநாளும் இரவு எலியானா சங்கிலி சிறைக்குள் வந்தாள். கூடவே கையில் ஓர் உடையையும் கொண்டு வந்தாள்.
“கிளம்புங்கள்”
“எங்கு?”
“உங்கள் ஊருக்குத் தான்”
“தளபதி கருணை அடிப்படையில் விடுவித்து விட்டானா?”
“தளபதியாவது விடுவிப்பதாவது”
“பிறகெப்படி செல்வது. தப்பிப் போகச் சொல்கிறாயா?”
“வேறு வழியில்லை”
“நான் மாட்டேன். நான் என்ன கோழையா?”
“இனியும் தாமதிப்பது எம் இருவருக்குமே ஆபத்து. உங்களை அவர்கள் நேர்மையாகவா பிடித்தார்கள். நீங்கள் தப்பிச் செல்வதில் எந்தவித தப்பும் இல்லை”
“நான் அதை விரும்ப மாட்டேன்”
“நீங்கள் இங்கிருந்து உயிரை விடுவது தான் மிச்சம். அங்கு உங்களுக்காக காத்திருக்கும் உங்கள் நாட்டு மக்களுக்காகவேனும் நீங்கள் தப்பிச் செல்லுங்கள்” எனக் கூறிய எலியானா முக்காடுடைய ஒரு சட்டையை எடுத்து சங்கிலியிடம் கொடுத்து அணிவித்தாள். சுpறையில் இருந்து மெதுவாக வெளியேறிய இருவருக்கும் காவலர்கள் தடை விதிக்கவில்லை. காரணம் எலியானா பிரகன்ஸாவின் காதலி. முக்காடிட்ட உருவம் யாரென்பது காவலாளிகளுக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை. சங்கிலியை மெதுவாக கோட்டையின் பின்புறம் அழைத்து வந்த எலியானா, அங்கு தயாராக இருந்த ஒரு குதிரை வண்டியில் அவனை ஏற்றி விட்டு குதிரை ஓட்டுபவனிடம், “வீரனே, இவரை கவனமாக நான் கூறியது போல கொண்டு போய் சேர்” என்றாள்.

பின்னர் சங்கிலியைப் பார்த்த போது, அவள் கண்களில் தெரிந்த ஏக்கத்தை அவன் கவனித்தான்.
“எலியானா! நீயும் என்னுடன் வந்து யாழிலே தங்கியிருக்கலாமே!”
“அது தவறு”
“எது?”
“நான் உங்களுடன் வருவது”
“ஏன்?”
“நீங்கள் திருமணமானவர். அத்துடன் காதலியும்…” என இழுத்தாள்.
“பரவாயில்லை! ஒரு உற்ற தோழியாக என் அரண்மையில் தங்கியிரு”
“நீங்கள் என் மீதுள்ள இரக்கத்தால் என்னை அழைக்கிறீர்களே தவிர, உங்களுக்கு என் மீது எந்தவித தனிப்பட்ட பற்றும் இல்லை” என கூறினாள். அதனைக் கேட்ட சங்கிலி பேசாதிருந்தான். அவள் விழிகளில் இருந்து நீர் வழிந்தது. அவள் கையை ஆதரவுடன் பற்றிய சங்கிலி அவள் நெற்றியில் முத்தமிட்டு, “எலியானா நீ நிச்சயம் வரலாறுகளில் பேசப்படுவாய். நீ செய்திருக்கும் உதவியை என்றுமே நான் மறக்க மாட்டேன்” எனக் கூறினான்.

பெருகி வந்த அழுகையை அடக்கிக் கொண்ட எலியானா, “நேரமாகிறது. புறப்படுங்கள்” எனக் கூறினாள். இதனால் சங்கிலி வண்டியும் மெல்ல மெல்ல நகர்ந்தது. அவன் வண்டி கண்ணிலிருந்து மறைந்ததும் அழுகையை அடக்க முடியாது வாய்விட்டழுதாள். பின்னர் மெல்லத் திரும்பி கோட்டையினுள் அடியெடுத்து வைக்க திரும்பிய போது, பின்னால் நின்ற பிரகன்ஸாவை கண்டு அதிர்ச்சியுற்றாள்.

“என்ன உன் காதலனை தப்புவித்து விட்டாயா? நல்லது. நான் அன்றே சந்தேகப்பட்டேன். இன்றும் சந்தேகத்தில் சிறை சென்று பார்த்த போது அவனைக் காணவில்லை. அவன் இப்போது எங்கள் கண்ணிலிருந்தே மறைந்து விட்டான். அவனைப் பிடிக்க எவ்வளவு கஷ்டப்பட்டோம் என்பது நீ அறியாததுமல்ல”
“அவர் வீரர். உன்னை மாதிரி கோழையல்ல முதுகில் குத்துவதற்கு”
“ஓகோ! அப்படியா சங்கதி. சந்தோஷம்! அவனைத் தப்புவித்ததற்கு உனக்கு நல்ல பரிசை நான் தர வேண்டாமா?” எனக் கூறிய படி பிரகன்ஸா தன் இடையில் செருகியிருந்த குறுவாளை எடுத்து அவள் மார்பில் ஓங்கிக் குத்தினான். எலியானா துவண்டு நிலத்தில் விழுந்தாள். அவளது வெள்ளை மேனியையும், பூமியையும் செந்நிறம் ஆட்கொண்டது. இது சங்கிலிக்கு தெரிய வாய்ப்பில்லை.

இதேவேளை, ஆவேசத்துடன் சங்கிலி யாழ்ப்பாணத்தின் கதியை நிர்ணயிப்பதற்காக கோட்டை நோக்கி சென்று கொண்டிருந்தான்.

சாதிக்க வருவான்…

Friday, September 17, 2010

சரித்திரவீரன் சங்கிலி (பாகம் 28 -சிறையில் சங்கிலியன்)

மயக்கத்திலிருந்து விழித்த சங்கிலிக்கு தான் ஓர் புதிய இடத்தில் இருப்பதை உணர முடிந்தது. தலையை உயர்த்தி எதையும் பார்க்க முடியாமல் இருந்தது. உடலெங்கும் பயங்கரமாக வலியெடுத்தது. எழுந்திருக்க மனமில்லாமல் கல்மேடையிலேயே மல்லார்ந்து படுத்துக் கிடந்தான். சிறிது நேரத்தில் வெளியே ஆரவாரப்படுவதை அவனால் உணர முடிந்தது. 'அவன் வழித்து விட்டான்" என வெளியில் யாரோ சத்தமிடுவது சங்கிலியின் காதில் கேட்டாலும், அதை கணக்கிலெடாது பேசாமல் படுத்திருந்தான். சிறிது நேரத்தில் சிலர் தன்னை நோக்கி வருகின்றார்கள் என்பதை உணர்ந்து கொண்டான்.

'பார்த்தீரா தளபதியாரே! தன் பள்ளியறைப்பஞ்சணை போல் எவ்வளவு நிம்மதியாக உறங்குகின்றான். பயம் என்பது இவன் முகத்தில் கொஞ்சமாவது தெரிகின்றதா?" என்றான் ஒருவன். அவன் குரலை அடையாளம் கண்டு கொண்ட சங்கிலி, தன்னருகே காக்கை வன்னியனும், பறங்கித்தளபதி பிரகன்ஸாவும் நிற்பதை உணந்து கொண்டான். மெல்ல எழுந்து உற்கார்ந்தும் கொண்டான்.
நிமிர்ந்து வன்னியனைப் பார்த்த சங்கிலி, 'நண்பா! நீ இப்படி கயவர்களுடன் சேர்ந்து என்னைக் காட்டிக் கொடுப்பாய் என நான் கனவிலும் நினைத்திருக்கவில்லை" என்றான்.
'நீ என் இனத்திற்கு செய்த கெடுதலுக்கு உன்னை விட்டு வைத்ததே பெரிய விடயம். வன்னியர்களை யாழ்ப்பாணத்தில் இருந்து ஓட ஓட விரட்டினாய் அல்லவா? அதற்கான பலனை இப்போது அனுபவி" என்றான் காக்கை வன்னியன்.
'கோழைத்தனமாக என்னை கைது செய்திருக்கிறீர்களே! இது முறையா?"
'உன்னை மடக்குவதற்கு இதை விட வேறு வழி எங்களுக்குத் தெரியவில்லை"
'பிற்கால சந்ததி உன்னைத்தூற்றுமே! அதையாவது நினைத்துப் பார்த்தாயா?"
'இக்கால சந்ததி பற்றியே எனக்கு கவலை இல்லை. இதில் பிற்கால சந்ததி பற்றி நான் ஏன் கவலை கொள்ள வேண்டும்"
'நாங்கள் தமிழர்கள். இனத்தால் ஒன்று பட்டவர்கள். ஒரே இரத்தம். ஒரே உறவுகள். அடித்தாலும் பிடித்தாலும் அண்ணன் தம்பிகள் தான். ஆனால் நீ எங்கிருந்தோ வந்த பறங்கிகளுடன் உறவு வைத்திருக்கிறாயே. இது தகுமா?"
'யார் கூறியது நாங்கள் அண்ணன், தம்பியென? நீ அவ்வாறு நினைத்திருந்தால் அன்று எங்களை விரட்டியிருக்கமாட்டாய். இன்று இவ்வளவு கஷ்டத்தை எதிர்நோக்க வேண்டிய தேவையும் இல்லை"
'அன்று நடந்த சம்பவத்தை சரிவர விளங்கிக் கொள்ளாமல் முட்டாள் தனமாக உளறாதே! வன்னியர்கள் அன்று நாட்டினுள் கலகமூட்டினார்கள். ஒரு நாட்டுக்கு தலைவன் என்ற ரீதியில், அந்நாட்டின் நன்மை கருதி அவர்களை வெளியேற்ற வேண்டியதாயிற்று" என்றான் சங்கிலி.

இவர்கள் சம்பாஷணையை பார்த்துக் கொண்டு பேசாமல் இருந்த பிரகன்ஸா இடையில் புகுந்து, 'சவாலா விட்டாய் என்னிடம், இப்போது பார்த்தாயா உன் உயிர் என் கையில்" என்றான்.
'என் உயிரைத் தான் உன்னால் எடுக்க முடியும். என் மக்களின் அன்பையும், தேசப்பற்றையும் உன்னால் ஒருபோதும் பெற முடியாது" என சங்கிலி ஆவேசமாகக் கத்தினான்.
'சிங்கம் கூட்டில் இருந்தாலும் கர்ச்சிக்கின்றது" என கொக்கரித்தான் பிரகன்ஸா. பின், 'உன் திமிர் என்றும் உன்னை விட்டுப் போகாது. உனக்குத் தகுந்த பாடம் புகட்டுகின்றேன்" என்றான்.
'வீரமும், தேச பக்தியும் எம் இரத்தத்தில் இரண்டறக் கலந்துள்ளன. நாங்கள் சந்தர்ப்பவாதிகள் அல்ல. என் போன்ற ஆயிரமாயிரம் பேர் இன்னும் யாழ்ப்பாணத்தில் இருக்கின்றார்கள். அவர்கள் இருக்கும் வரை ஒரு துரும்பைக் கூட உன்னால் அசைக்க முடியாது"
'உன் அண்ணன், அங்கு எனக்கு கட்டுப்பட்டு ஆட்சி நடத்துகின்றான்"
'காலம் வரும்போது மக்கள் அவனுக்கு தக்க பாடத்தைப் புகட்டுவார்கள். பறங்கிகளே! நீங்கள் மீண்டும் ஓடத்தான் போகிறீர்கள். இது நிச்சயம்;" என சங்கிலி முழங்கினான்.
'நீ இருந்தால் தானே இதெல்லாம் நடக்கும். உனக்கு தக்க தண்டனை தருகின்றேன் பார்!" எனக் கூறிய பிரகன்ஸா வாயிலைப்பார்த்து, 'யாரங்கே?" என கூவி அழைத்தான். அவன் அழைப்பின் பேரில் ஐந்தாறு பறங்கி வீரர்கள் சட சட என ஓடி வந்தார்கள்.
'இவனை இழுத்துச் சென்று தூணில் கட்டி நூறு கசையடி கொடுத்து மீண்டும் சிறையில் அடையுங்கள். நீர் கூடக்கொடுக்க கூடாது" எனக் கட்டளையிட்டான்.

அதற்கமைய வீரர்களும் சங்கிலியை தர தரவென நிலத்தால் இழுத்துச் சென்று தூணில் கட்டினார்கள். ஒரு பறங்கி வீரன் நீண்ட சவுக்கொன்றால் தாறு மாறாக சங்கிலியை அடித்தான். எந்தவித எதிர்ப்பையும் காட்டாதிருந்த சங்கிலியின் உடலின் பல இடங்கள் வெடித்து அதிலிருந்து இரத்தம் வழிந்தோடியது. அவன் அணிந்திருந்த உடை இரத்தத்தினால் தெப்பமாக நனைந்திருந்தது. தலை துவண்டு தொங்கியது. விதிக்கப்பட்ட தண்டனை நிறைவடைந்ததும் சங்கிலி இழுத்துச் செல்லப்பட்டு மீண்டும் சிறையில் வீசப்பட்டான்.

மயங்கிய நிலையில் பல மணி நேரம் சிறையில் உறங்கிக் கிடந்த சங்கிலி, மயக்கம் தெளிந்து எழுந்ததும் தன்னருகே இருந்த உருவத்தைப் பார்த்து திகைப்படைந்து 'நீயா?" என்ற சொற்கள் அவன் வாயிலிந்து வெளிவரத் தொடங்கியது.

சாதிக்க வருவான். ..

Saturday, September 4, 2010

சரித்திரவீரன் சங்கிலி (பாகம் 27- பரராசசேகரன் நிலை)

சங்கிலியை இழந்த யாழ்ப்பாணம் தலையிழந்த முண்டம் போல் தத்தளித்தது. பறங்கியரின் வழி நடத்தலின் கீழ் வாழ விரும்பாத, சுகவீனமுற்றிருந்த சங்கிலியின் தந்தையான பரராசசேகரன், ‘அரண்மனை வாழ்கையிலும் விட இனி காடே சிறந்தது’ என எண்ணி வன்னிக் காட்டுக்குள் ஓடி மறைந்து கொண்டான்.

இதனால் வெகுண்ட பறங்கிகள், நாட்டு மக்களுக்கு ஓர் அறிவிப்பை விடுத்தார்கள். “பரராசசேகரனைக் கண்டுபிடித்துக் கொடுப்பவர்களுக்கோ, அவன் இருப்பிடத்தை அறிவிப்பவர்களுக்கோ இருபத்தையாயிரம் இறைசால் பரிசாக வழங்கப்படும்”. பரராசசேகரன் மீது மிகுந்த மதிப்பும், பாசமும் வைத்திருந்த நாட்டு மக்கள், இந்த அறிவிப்பை ஒரு பொருட்டாகவே கருதவில்லை. ஆனால் பரராசசேகரனிடம் முன்பு முதன் மந்திரியாக இருந்த கன்னெஞ்சப்பார்ப்பாண் எனும் கொடியவன், பொருளெனும் பேய்க்கு ஆசைப்பட்டு பரராசசேகரனைத்தேடி வன்னிக் காட்டுக்குள் சென்றான். அங்கு கையில் இளநீரும், தேசிக்காயும் சகிதமாக அலைந்தான்.

மறுபுறம் யாழ்ப்பாணத்தில், சங்கிலியன் ஆட்சியை வெறுத்த அப்பாமுதலி, பரநிருபசிங்கன் போன்ற ஆட்கள், பறங்கியருடன் இணைந்து வீதியெங்கும் மகிழ்ச்சி ஆரவாரம் செய்தார்கள். இனிப்புப்பண்டங்களையும் வழங்கினார்கள். இவை எவற்றிலும் அக்கறை காட்டாத மக்கள் வீடுகளுக்குள் முடங்கிக் கிடந்தார்கள். அரண்மனைக்கு வேலைக்கு வரவும் விருப்பவில்லை.

காட்டினுள் பரராசசேகரனைத் தேடித்திரிந்த பார்ப்பாண், மிகுந்த சங்கடமடைந்தான். எங்கு தேடியும் அரசனைக் காண முடியவில்லை. இதனால் தனக்கு பரிசுத்தொகை கிடைக்காதோ என ஏக்கமடைந்து அங்குமிங்கும் புலம்பித் திரிந்தான். காட்டினுள் கேட்ட கூச்சலை மறைவிடத்தினுள் இருந்து அவதானித்த பரராசசேகரன் அது என்னவாக இருக்கம் என அறியும் ஆவலில் எட்டிப்பார்த்தான். தனக்கு மிகவும் நெருக்கமான மந்திரி துயரத்துடன் அங்குமிக்கும் அலைவதைக் கண்டு குரல் கொடுத்தான்.
“பார்ப்பாண்… பார்ப்பாண்…!”

குரல் வந்த திசையை நோக்கிய பார்ப்பாண், மிகுந்த மகிழ்ச்சியடைந்தான். தான் காடு மேடெல்லாம் தேடிய பொருள் இப்படி வலிந்தே சிக்குமென அவன் கனவிலும் நினைக்கவில்லை. இதனால் எழுந்த மகிழ்ச்சியை முகத்தில் குறைத்துக் கொண்டு, ஓடோடிச் சென்று மன்னன் காலில் விழுந்தான்.
அவனை ஆதரவுடன் தூக்கிய அரசன், “ஏன் பார்ப்பாண்? என்ன விடயம்? ஏன் இவ்வளவு சோகத்தில் அலைந்து திரிகிறாய். அதுவும் காட்டில்…?”
“காடா… இதுவா காடு? காடென்பது இதுவல்ல. நீங்கள் இல்லாத நாடே காடு. இது அரண்மனை” என போலிக் கண்ணீர் வடித்தான்.
“அது சரி, இங்கு நீ ஏன் வந்தாய்?”
“நீங்கள் இல்லாத இடத்தில் எனக்கு இருக்கப்பிடிக்கவில்லை. அங்கு பரநிருபசிங்கன் பறங்கியரின் கையாளாக இருந்து கொண்டு கொடுங்கோலாட்சி புரிகின்றான். மக்களால் தாங்கிக் கொள்ள முடியவில்லை”
“பறங்கிகளால் அழைத்துச் செல்லப்பட்ட சங்கிலி பற்றி ஏதாவது அறிய முடிந்ததா?”
“இல்லை. இல்லவே இல்லை… ஆனால் பறங்கிகள் சங்கிலியை உயிரோடு விடுவார்கள் என்று நான் கருதவில்லை”
“அரண்மனையில் மந்திரிகள், அமைச்சர்கள் எல்லோரும் என்ன செய்கிறார்கள்?”
“பரநிருபசிங்கனது அதட்டலுக்குப் பயந்து வேண்டா வெறுப்பாக, அவன் கீழ் ஊதியம் செய்கிறார்கள். அவர்களுக்கும் வயிற்றுப்பிழைப்பு என்று ஒன்று உண்டு தானே!”
“அதுவும் சரி!”
“அரசே! நீங்கள் மிகவும் களைத்துள்ளீர்கள். அடியேன் கொண்டு வந்திருக்கும் இளநீரைக் குடியுங்கள்” என அரசன் முன் தான் பத்திரமாக வைத்திருந்த இளநீரை நீட்டினான். ஆவலுடன் அதை வாங்கிய அரசன், தன் உடை வாளால் அதைச்சீவி பருகத் தொடங்கினான். சமயம் பார்த்துக் காத்திருந்த பார்ப்பாண் “அரசே இந்த தேசிப்பழத்தை பிழிந்து இளநீரினுள் விடுங்கள். உடல் ஆரோக்கியமாக இருக்கும்” எனக் கூறினான். தான் இளநீரை அருந்துவதால், அதை வெட்டி விடுப்படி பரராசசேகரன் பார்ப்பாணுக்கு கண்ணைக்காட்டினான். காரியம் கைகூடுவதை நினைத்து மகிழ்ந்த பார்ப்பாண், அரசன் வாளை எடுத்து ஒரு கணத்தில் அரசன் சிரசைக் கொய்தான். அரசனின் தலையற்ற உடல் பூமியில் சாய்ந்தது.

துண்டாக விழுந்த சிரசை பத்திரமாக பொதி செய்து யாழ் நகர் நோக்கி வந்தான் பார்ப்பாண். அங்கு பறங்கித் தளபதியைச் சந்தித்து, தான் கொண்டு வந்த பொருளைக் காட்டி பரிசுத்தொகையை பெறவேண்டும் என்ற ஆவலில் கோட்டைக்குள் சென்று தளபதியைச் சந்தித்தான். பார்ப்பாண் கொண்டு வந்த பொதியைப் பிரித்துப் பார்த்த பறங்கித் தளபதி பிரகன்சா
“என்ன இது?” எனக் கேட்டான்.
“பரராசசேகரனது தலை” என மகிழ்ச்சியுடனும் பேராவலுடனும் கூறிய பார்ப்பாணை நோக்கிய தளபதி
“என்ன செய்தாயடா மூடா” எனக் கத்தினான்.
“நீங்கள் தானே கூறினீர்கள்”
“என்னவென்று?”
“பரராசசேகரனை பிடித்துத்தரும்படி”
“நீ என்ன செய்திருக்கிறாய்?”
“கொணர்ந்துள்ளேன்”
“எதை?”
“தலையை!”
“நான் தலை கேட்டேனா?”
“நான் அவரைக் கொண்டு வந்தால், நீங்கள் சிரச்சேதம் செய்வது உறுதி. ஆதை நானே செய்துவிட்டேன். எனக்குரிய பரிசைத் தாருங்கள்”
நொடியும் யோசிக்காத பிரகன்ஸா “உனக்குரிய பரிசு இது தான்” என தன் இடையில் இருந்த உடைவாளை எடுத்து பார்ப்பாணின் சிரசைக் கொய்தான். பார்ப்பாணது பேராசை, பெரும் தரித்திரமாகப் போய்விட்டது.

இதேவேளை பறங்கிகளால் அழைத்துச் செல்லப்பட்ட சங்கிலியின் நிலையோ, பரிதாபத்துக்கிடமாகப் போய்விட்டது.

சாதிக்க வருவான்…