Pages

Friday, August 20, 2010

சரித்திரவீரன் சங்கிலி பாகம் 26 - சூது

உலகம் உறங்கிக் கொண்டிருந்தது. ஆனால் யாழ் நகர் உறங்கவில்லை. வெற்றி மகிழ்ச்சியால் உறங்காமல் திளைத்திருக்க வேண்டிய மக்கள் மீண்டும் ஒரு போருக்காக படைகள் விரைவாக ஆயத்தமாக்கிக் கொண்டிருந்ததால் கவலையால் விழித்திருந்தார்கள். வலிந்து வரும் போரையும், அதனால் ஏற்படப் போகும் அழிவுகளையும் எண்ணி யாழ் மக்கள் கலங்கினார்கள். தெருக்களில் ஜன நடமாட்டமே இல்லை. வீடுகளில் விளக்குகள் அணையவில்லை. மாட மாளிகைகளிலும் கூட கோபுரங்களிலும் வானளாவப் பறந்து கொண்டிருந்த கொடிகள் கம்பீரமாகப் பறந்து கொண்டிருந்தாலும், அவற்றின் கீழே செய்யப்பட்டிருந்த அலங்காரங்கள் அலைந்து, குழைந்து, கலைந்து கிடந்தன. எங்கும் ஒருவித அவசயமான நீர்த்தன்மை புழுக்கமிட்டுக் கொண்ருந்தது.

இங்கே குறுகிய கால அவகாசத்தில் போருக்கான ஆயத்தங்களைச் செய்து கொண்டு சங்கிலியும் பூரண போர்க்கவசமணிந்து போருக்குத் தயாராகியிருந்தான். இதற்கிடையில் பரநிருபசிங்கன் ஓர் உபாயம் செய்தான். ஓர் ஒற்றனைச் சேனாதிபதி இமையாணனைச் சந்திக்கும் படி ஏற்பாடு செய்தான். இதற்கமைய அவன் இமையாணனை அடைந்து, “பறங்கிய ஒற்றனொருவன் கீழைக் கோபுர வாயிலிற் காத்திருக்கின்றான்” என்றான்.
“என்ன விடயம் என்று கேட்டாயா?”
“இல்லை. அவன் தளபதியைச் சந்திக்க வேண்டுமென்று கூறினான். அத்துடன் போர் பற்றிய முக்கிய விடயம் என்றும் கூறினான்”
‘போரை நிறுத்துவதற்காக பறங்கிகள் தூதனுப்பியிருப்பார்களா?’ என சிந்தித்த இமையாணன், ‘அவ்வாறெனின் எவ்வளவு நல்லது. மீண்டும் ஒரு பேரழிவைத் தடுக்கலாம்’ என்ற நினைப்பால் “நான் இதோ வருவதாக அவனிடம் போய்க் கூறு” என தனக்கு எதிராக விரித்திருக்கும் மாயை வலை பற்றி அறியாமல் சொல்லி அனுப்பினான்.

இதேவேளை அரண்மனையில் ஒரு வாயிற்காவலன் சங்கிலியை அணுகி “ஊர்காவற்துறை அரசன் உங்களைக் காண வந்துள்ளார்” என்றான். இதனைச் சிறிதும் எதிர்பார்க்காத சங்கிலியன் “யார் காக்கை வன்னியனா?” என மகிழ்ச்சியுடன் வினவினான்.
“ஆம்”
“ஏன் அவனைக் காக்க வைத்துள்ளீர்கள். சீக்கிரம் அவனை உள்ளே அனுப்புங்கள்” எனக் கட்டளையிட்டான்.
“காக்கை வன்னியனுடன் சில வீரர்கள் வந்திருக்கிறார்கள். அவர்களை என்ன செய்வது”
“எல்லோரையும் உள்ளே விடு!” சங்கிலி கூறினான்.
இதனால் காக்கை வன்னியன் தலைமையிலான பத்துப் பன்னிரண்டு வீரர்கள் சங்கிலியன் இருந்த இடத்திற்கு வந்தனர். காக்கை வன்னியனைக் கண்ட சங்கிலி, அவன் ஆருயிர்த் தோழனாதலால் ஓடோடிச் சென்று கட்டியணைத்து வரவேற்றான்.
“என்ன நண்பா திடீர் விஜயம்?” சங்கிலி கேட்டான்.
“மண்டை தீவுக்கு ஒரு அலுவலாக வந்தேன். அவ்வாறே உன்னையும் பார்த்துச் செல்லலாம் என இங்கு வந்தேன்” என சிறிதும் குழப்பம் அடையாமல், தான் வந்த எண்ணம் சங்கிலிக்கு தெரியக்கூடாது என்பதற்காக நிதானமாகக் கூறினான்.
“நீ வருவாய் என அறிவித்திருந்தால், எவ்வளவு ராஜ மரியாதையுடன் வரவேற்றிருப்பேன். யாழ்பாணம் முழுவதும் முறைசறைவித்திருப்பேன். இப்பொழுது திருடன் மாதிரி வந்திருக்கிறாயே?” என நகைச்சுவையாகக் கூறினான்.
சங்கிலியின் நகைச்சுவையைக் கேட்டு பயந்த காக்கை வன்னியன் சிறிது தன்னை ஆசுவாசப்படுத்திக் கொண்டான்.
“வா நண்பா! இப்படி உட்கார். நான் உனக்கு எவ்வளவு உபகாரங்களைச் செய்ய வேண்டும். அதற்கெல்லாம் இப்போது நேரமில்லாது போய் விட்டது. நீ அறிந்தாயோ தெரியாது. வயிற்றுப் பிழைப்புக்காக வந்த பரதேசிப் பறங்கிகள் என்னையே ஏமாற்றி என் மீதே போர் தொடுத்தார்கள். நான் அவர்களை புறமுதுகிட்டு ஓடச்செய்தும் மீண்டும் எம் மீது படையெடுத்து வருகின்றார்கள். எவ்வளவு நெஞ்சழுத்தம் பார்த்தாயா? இதற்கு யாரோ எம்முடன் நெருங்கிப் பழகுபவர்கள் ஆதரவு வழங்குகிறார்கள். அது தான் எனக்கு கவலையாக இருக்கின்றது” என அவனை இருக்கையை நோக்கி சங்கிலி அழைத்துச் சென்றான்.
“ஆ… அப்படியா? எனக்குத் தெரியாமற் போய்விட்டதே! இனியும் தாமதிக்கக் கூடாது. உனக்குத் துணையாக நானிருக்கின்றேன். நீ கவலைப் படாதே” என கட்டியணைத்து சங்கிலிக்கு தெரியாமலே சற்று இறுக்கிக் கொண்டான். அத்துடன் தன் முன்னால் நின்ற வீரர்களுக்குக் கண்ணைக் காட்டினான்.

அன்று சங்கிலிக்கு பின் தலையில் மாத்திரம் ஒரு கண்ணிருந்தால் யாழ்ப்பாணத்திற்கு நேர இருந்த அவலம் தடுக்கப்பட்டிருக்கும். விதி விளையாடியது. காக்கை வன்னியன் கண்ணசைப்பால் முன்னேறிய வீரர்கள் சங்கிலியின் இடையிலிருந்த வாளை அகற்றினார்கள். இதனால் திணறிய சங்கிலி சுதாகரிப்பதற்குள் பின் தலையில் ஓங்கி ஒரு அடி விழுந்தது. சங்கிலி மயங்கிச் சரிந்தான். அவன் குரலைக் கேட்டு ஓடிவந்த காவலர்கள் காக்கை வன்னியன் வீரர்களுடன் போரிட ஆயத்தமான போது, அங்கு வந்த பரநிருபசிங்கன் அவர்களைத் தடுத்தான். “தளபதி இல்லாமல் நாங்கள் போரிடக் கூடாது” என கூறினான். பரநிருபசிங்கனது வஞ்சகத்தை அறியாத வீரர்களும் பேசாமல் நின்றனர். நினைவிழந்து கிடந்த சங்கிலியை காக்கை வன்னியன் வீரர்கள் தூக்கிச் சென்றனர்.

இதேவேளை எந்தவித பாதுகாப்பும் இல்லாமல் சாதாரணமாக வழமை போன்று தூதனைச் சந்திப்பதற்காக கோட்டை கோபுர வாயிலுக்கு வந்த தளபதி இமையாணன், அங்கு ஒருவரையும் காணாததால் சிறிது நேரம் அங்கும் இங்கும் பார்த்து விட்டு உள்ளே செல்லத் திரும்பினான். அக்கணத்தில் எங்கோ இருந்து பறந்து வந்த குறுவாள் ஒன்று அவன் கழுத்தில் புதைந்து நின்றது. தளபதி அலறித்துடித்துக் கொண்டு நிலத்தில் வீழ்ந்தான். யாழ்ப்பாணம் ஒரு சிறந்த தளபதியை இழந்தது. மறைந்திருந்த பல பறங்கி வீரர்கள் வெளிவந்து தளபதியின் உடலை எடுத்துச் சென்றார்கள்.

கோட்டைக்குள் இருந்த சங்கிலியின் வீரர்கள் எந்தவித வழிநடத்தலும் இல்லாது திணறி நின்றனர். பரநிருபசிங்கன் கோட்டைப் பொறுப்பைப் பெற்றுக் கொண்டான். சங்கிலியின் மயங்கிய உடலும், தளபதியின் உயிரற்ற சடலமும் பறங்கிக் கோட்டை கொண்டு செல்லப்பட்டது. மக்கள் திகைத்து நின்றனர்.

சாதிக்க வருவான்….

Wednesday, August 11, 2010

சரித்திரவீரன் சங்கிலி (பாகம் 25 காக்கை வன்னியன்)

சங்கிலியனின் வழி நடத்தலின் கீழான படைகளுக்கு முகம் கொடுக்க முடியாத பறங்கித் தளபதி பிரகன்ஸாவும் ஏனைய போர் வீரர்களும் ஊர்காவற்துறையில் நிலை கொண்டிருந்த காக்கை வன்னியனிடம் சென்றார்கள்.

“வலிய வந்து எங்களுக்கு மண்ணாசை காட்டிவிட்டு, இப்படி இங்கு சகல சௌபாக்கியங்களுடனும் ராஜா மாதிரி இருக்கிறாயே! உன் பேச்சை நம்பி, நாம் அடைந்த கதியைப் பார்த்தாயா?” எனப் பிரகன்ஸா சீறினான்.
“தளபதியாரே! சற்று அமைதியாக இருங்கள். எல்லாவற்றிற்கும் ஒரு காலம் உண்டு” எனச் சமாதானப்படுத்த முயன்றான் வன்னியன்.
“இவ்வாறு தான் அன்றும் கூறினாய், இன்று என் நிலையைப் பார்த்தாயா? எங்கள் சேனையில் பதினொராயிரம் வீரர்களும் சிறந்த கோட்டைத் தலைவனும் மாண்டது தான் நாம் கண்ட முடிவு”
“போர் ஏற்படின் உயிரிழப்புக்கள் ஏற்படுவது வழமை தானே!”
“ஏன் கூற மாட்டாய் வன்னியா? போரில் உயிரிழப்புக்கள் சகஜம் தான். ஆனால் எந்தவொரு பிணக்குகளுக்கும் போகாமல் அமைதியாக இருந்த எங்களை உங்கள் பிணக்கிற்கான நடுவில் இழுத்துப் பந்தாடி விட்டீர்களே! உதவிக்கு கூட ஒருவரும் வரவில்லை”
“பெரும் படை பலம் பொருந்திய நீங்கள் சமாளிப்பீர்கள் என எண்ணியிருந்தேன். நீங்கள் மண் கௌவி விட்டீர்களே! உங்கள் பீரங்கிக் குண்டுகளுக்கு கூட அவர்கள் பயப்படவில்லையா?”
“சங்கிலியின் படைகளின் கவண் கல்லுக்கும், எரியம்புகளுக்கும் முன் எங்கள் பீரங்களில் எந்த மூலைக்கு? அவர்களின் போர் தந்திரம் தான் என்ன!”
“நீங்கள் எமக்கு அறிவித்திருக்கலாமே! உதவியுடன் விரைந்து வந்திருப்போம்”
“நாங்கள் அறிவிக்கும் நிலையிலா இருந்தோம். அப்பா! அந்த சங்கிலி இருக்கிறானே, அவனைப் போல் ஒரு சுத்த வீரனை நான் இதுவரை கண்டதில்லை. உன்னைப் போல் கோட்டையில் அடைந்து கிடக்காமல் வீரர்களுடன் வீரர்களாக நின்று போரிடுகின்றான். பயமென்பது துளியும் அவன் உடம்பில் இல்லைப் போலும்”
“க்கும்… அது தெரிந்த விடயம் தானே!”
“இதை முன்பே கூறி அனுப்புவதில்லையா வன்னியா?”
“உங்கள் போர்த்திறனுக்கு முன் அவன் படை சுருண்டு விடும் என எண்ணினேன்”
“இப்பொழுது என்ன செய்வதாக உத்தேசம். எங்களுடன் நீயும் எங்களுர் வந்து விடுகிறாயா?” என பிரகன்ஸா இகழ்ச்சியுடன் வினவினான்.

பறங்கித் தளபதியின் இகழ்ச்சியை கவனித்த காக்கை வன்னியன் தன் நிலைமையை எண்ணி ஏதும் சொல்ல இயலாதவனாக இருந்தான். அதனால் மீண்டும் தளபதி,
“என்ன வன்னியா வருகிறாயா?”
“அதில்லை… நாம் மீண்டும் அங்கு செல்ல வேண்டும்”
“எங்கு?”
“யாழ்ப்பாணம் தான்”
“ஐயோ, நாம் வாழ வழிகேட்டால்.. நீ சாக வழி சொல்கிறாயே. நாங்கள் அங்கு வரவில்லை”
“நீங்கள் பயப்படும்படி எதுவும் இல்லை. இம்முறை போரிடத் தேவையில்லை. சமயோசிதமாக அவனைக் வெல்ல திட்டம் தீட்டியிருக்கின்றேன். யாழ்ப்பாணத்தில் இருந்து ஒரு தூதனை எதிர்பார்த்திருக்கின்றேன். அவன் வந்த பின் தான் எனது முடிவைக் கூற முடியும்” என்றான்.

அச்சமயம் யாழ்ப்பாணத்திலிருந்து தூதன் ஒருவன் வந்திருக்கின்றான் என்ற செய்தி காக்கை வன்னியனுக்கு அறிவிக்கப்பட்டது. இதனால் ஓடிச் சென்று அவனை பிரகஸா இருக்குமிடம் அழைத்து வந்தான். அவன் முன்னிலையில் காக்கை வன்னியனது விசாரணை தொடர்ந்தது.
“என்ன விடயமாக வந்திருக்கின்றாய்”
“பரநிருபசிங்கன் ஓலை ஒன்றை அனுப்பியிருக்கின்றார்.”
“அப்படியா? நல்லது கொடு” என அவன் ஓலையை வாங்கிப் படித்ததும் அவன் முகம் பிரகாசமானது. அவ்வோலையை பறங்கித் தளபதிக்கும் காட்டினான்.

இதுவரையும் வெளிப்படாது இருந்தோம். இனி வெளிப்பட்டு கருமம் முடித்தல் வேண்டும். ஆயத்தமாக வருக.
பரநிருபசிங்கன்

மேற்கண்டவாறு குறிப்பிட்டு பரநிருப சிங்கனது இரகசிய முத்திரை குறிப்பிடப்பட்டிருந்தது.

ஓலையைக் காட்டிய வன்னியன் “பார்தாயா பிரகன்ஸா! நமக்கு காலம் கனிந்து வந்து விட்டது. இதற்காகத் தான் இவ்வளவு நாளும் காத்திருந்தோம். நீ மட்டும் சங்கிலியுடன் வாக்குவாதப் படாது இருந்திருந்தால் இந்நேரம் யாழ்ப்பாணம் எங்கள் வசம் வந்திருக்கும்” என்றான்.
“இப்போது என்ன செய்வது?”
“மீண்டும் போரிட வேண்டும்”
“என்னிடம் படை இல்லையே!”
“எனது படையின் சிறு பகுதியையும், உனது படையின் எஞ்சிய பகுதியையும் சேர்த்து யாழ்ப்பாணம் அழைத்து வா. ஆனால் அதற்குத் தேவை இருக்காது என நினைக்கின்றேன். இதில் ராஜ தந்திரங்கள் நிறையவே இருக்கின்றன” என்று காக்கை வன்னியன் கூறினான்.

இதன்படி படையை செப்பனிடும் பணியைப் பிரகன்ஸா கவனத்துக் கொண்டான். படையைப் பின்னால் வருமாறு கூறிவிட்டு காக்கை வன்னியன் விரைந்து நல்லூரையடைந்து மாறு வேசத்தில் பரநிரபசிங்கனிடம் வந்தடைந்தான்.
“யார்? காக்கை வன்னியனா?”
“ஆம்”
“அடையாளமே தெரியவில்லையே”
“அது தான் மிகவும் நல்லது”
“உடனடியாகப் புறப்பட்டு வந்து விட்டாயே”
“இதற்குத் தானே காத்திருந்தோம்”
“ஆம்.. ஆம்”
“இப்போது என்ன செய்வதாக உத்தேசம்”
காக்கை வன்னியனை அருகில் அழைத்த பரநிருபசிங்கன் அவன் காதில் ஏதோ கூறினான். அதைக் கேட்ட வன்னியன் “ஆகா திட்டமென்றால் இதுவல்லவா திட்டம்” என்று பரநிருப சிங்கனைப் பாராட்டினான். பிறகு மாறுவேடத்திலேயே மீண்டும் மரக்கலமேறிச் சென்று பின்வந்த பறங்கியர் படைகளுடன் கலந்து கொண்டான்.

காக்கை வன்னியன் நகருக்கு வந்து சென்ற விடயம் யாருக்கும் தெரிய வாய்ப்பில்லை. ஆனால் பறங்கிப் படைகள் மீண்டும் வருவதை ஒற்றர்கள் வாயிலாக அறிந்த சங்கிலி கடுஞ்சினமடைந்து உடனடியாக அரச உயர்மட்டத்தனைக் கூட்டி சபா மண்டபத்தில் சந்தித்தான்.
“கோழை! புறமுதுகிட்டு ஓடிவிட்டு மீண்டும் வருகின்றான் பிரகன்ஸா. இவனை அன்றே தொலைத்திருக்கலாம். மானங்கெட்டவன். ஓடிவிட்டான்” என சங்கிலி சினந்தான்.
“அவன் ஆயுள் ரொம்பவே குறைவு போலிருக்கின்றது. அது தான் நம்மீது படை எடுக்கின்றான். இறந்தால் வீரனின் கையால் இறக்க வேண்டுமென அவன் நினைக்கிறான் போலிருக்கின்றது” எனக் கூறிய இமையாணன் இடியென நகைத்தான்.
“தளபதி அவர்களே! அவர்கள் மீண்டும் நம்மிடம் கண்ட தோல்விகளையெல்லாம் மறந்து வருகின்றார்கள் என்றால் அவர்களுக்கு ஒரு பெரிய துணையொன்று இருக்கின்றது. அவர்களை நாம் மட்டமாக எடை போடக் கூடாது. எதற்கும் மிகக் கவனமாக இருக்க வேண்டும்” என்றான் சங்கிலி.
“எது எவ்வாறாக இருந்தாலும் நம்மிடத்தில் வந்து போரிட்டு எவனும் மீண்டதாக சரித்திரமே இல்லை. நாம் பயப்பட வேண்டிய அவசியமில்லை” என்றான் வீரமாப்பாணன்.
“பரவாயில்லை. என்றாலும் தளபதியாரே! மீண்டும் நம்படைகளை பழைய பொழிவுடன் விரைவாகக் கட்டியெழுப்பும்” எனச் சங்கிலி கூறினான்.

படையணிகளோடு தனக்கு நடக்கவிருக்கும் ஆபத்தை அறியாத சங்கிலி கோட்டை வாயிலை வந்தடைந்தான். அங்கு அவனுக்கு அதிர்ச்சி மேல் அதிர்ச்சி காத்திருந்தது.

சாதிக்க வருவான்….