Pages

Monday, March 29, 2010

சரித்திரவீரன் சங்கிலி (பாகம் 15-பறங்கிகள் சந்திப்பு)


சங்கிலி, அப்பாமுதலியின் மகள் வடிவழகி மீது ஒரு கண்ணை வைத்திருப்பதை அறிந்த பரநிருபசிங்கன் பெரிதும் வெகுண்டான். “இவனெல்லாம் ஒரு அரசனா? நல்ல படியாக ஆட்சி செய்வான் எனக்கருதி எனது அரசுரிமையை அவனிடம் ஒப்படைத்தும் பிரயோசனமில்லாமல் போய்விட்டதே! எமது குலத்திற்கே அபகீர்த்தி தேடித்தரப் போகிறானே!” என்று கடுஞ்சினங் கொண்டு, ஊர்காவற்துறையில் அரசாட்சி செலுத்திக் கொண்டிருந்த காக்கைவன்னியனுக்கு ஒரு ஓலை எழுதி முத்திரையிட்டு தனது அந்தரங்கத்திற்கு பாத்திரமான ஒரு தூதனிடம் இரகசியமாகக் கொடுத்தனுப்பினான்.

ஏற்கனவே சங்கிலி மீது பகைபூண்டிருந்த காக்கைவன்னியன் பரநிருபசிங்கனின் தூதுவனை சிறப்பாக வரவேற்று அவன் கொணர்ந்த ஓலையை ஆவலாகப் பிரித்துப் படித்தான். அது கீழ்க் கண்டவாறு இருந்தது.

காக்கைவன்னியனுக்கு,
சங்கிலி முறைதவறி ஆட்சி நடத்துகின்றான். அவன் ஆட்சியில் மக்கள் சந்தோசமாகவே இல்லை. அவன் ஆட்சியை ஒழிக்க வேண்டும். ஆனால் அது கடினம். மந்திரிகளும் பிரதானிகளும் அவன் பக்கம் இருக்கின்றார்கள். நாட்டில் ஏற்பட்ட பல கலகங்களையும் அடக்கி விட்டான். ஆதலால் அவனை நானோ, நீயோ வெற்றி காண முடியாது. இதனால் நீ பறங்கிகள் உதவியை நாடு. விரைவாக இதற்கான முடிவைக்காண்.

பரநிருபசிங்கன்.

ஓலையைப் படித்த காக்கைவன்னியன் உடனடியாகவே பறங்கித் தளபதிகளை சந்திப்பதற்காக மரக்கலமேறித் தரங்கம்பாடியை அடைந்தான். அவனை வரவேற்ற பறங்கியத் தளபதி பிரகன்ஸா
“என்ன சகோதரரே! திடீர் விஜயம். ஏதேனும் எங்களால் ஆதாயம் கிடைக்க வேண்டுமா?” என்றான்.
“ஆதாயம் வேண்டும் தான். ஆனால் அதனால் என்னைவிட உங்களுக்கு தான் பயன் அதிகம்” என்றான் வன்னியன்.
“என்ன கூறுகிறாய்… எமக்கு ஆதாயமா?”
“ஆம்…”
“விளக்கிக் கூறு பார்ப்போம்”
“நீங்கள் யாழ்ப்பாணம் மீது படையெடுத்து வரவேண்டும்”
“வேண்டவே வேண்டாம். சங்கிலியைப் பற்றி எங்களுக்கு உன்னைவிட நிறையவே தெரியும். அவனை எதிர்க்க முடியாது. எங்களை நீ கட்டாயப்படுத்தாதே. எங்களுக்கு எங்கள் உயிர் முக்கியம். பேராசைப்பட நாம் தயாராக இல்லை” எனத் தீர்மானமாகக் கூறினான்.
“நீங்கள் நினைப்பது போலில்லை. அங்கு இப்பொழுது அவனுக்கு பல எதிர்ப்பலைகள் கிளம்பியுள்ளன. அவன் அண்ணன் தான் எங்களுக்கு இந்த திட்டத்திற்கான அனுமதியையே தந்தான். உங்களுக்கு பல முனைகளில் ஆதரவு கிடைக்கும். யாழ்ப்பாணத்தைக் கைப்பற்றுவதற்கு உங்களுக்கு இதைவிட சிறந்த சந்தர்ப்பம் கிடைக்காது” எனப் பறங்கியர்களின் மனதை மாற்றினான். இதனால் அவர்களும் யாழ்ப்பாணத்திற்கு வரச் சம்மதித்தனர்.

“எப்பொழுது யாழ் வருவீர்கள்?” ஆவலுடன் வன்னியன் கேட்டான்.
“சீக்கிரமே புறப்பட்டு விடுவோம். எப்படியும் அடுத்தவாரமளவில் வருவதற்கு முயற்சிக்கின்றோம். சங்கிலி அண்ணனிடம் யாழில் எங்களுக்கு சுமுகமான சூழலை ஏற்படுத்தச் சொல்லு” என பிரகன்சா கூறினான்.
இந்த சந்தோச செய்தியை காக்கை வன்னியன் ஊர்காவற்துறை திரும்பிய உடனேயே ஒரு தூதுவனிடம் கூறி பரநிருபசிங்கனிடம் அனுப்பினான்.

திட்டமிட்டபடியே உரிய காலத்தில் பறங்கியர்கள் வர்த்தக வேடமிட்டு விநோத பண்டங்களுடன் பண்ணைத்துறையில் வந்திறங்கினார்கள். அவ்வாறே யாழ் கோட்டைக்கும் வந்து சங்கிலியைச் சந்தித்தான் பிரகன்சா. அவனுடன் பறங்கிகளின் உயர்மட்ட தலைவர்களும் வந்திருந்தனர். இவற்றைவிட பிரகன்சாவின் காதலியான ஒரு வெள்ளைக்காரப் பெண்ணும் சங்கிலி அரசசபைக்கு வந்திருந்தாள்.

பார்த்த மாத்திரத்திலேயே ஆண்களைக் கவர்ந்திழுக்கும் நீலக்கண்களுடனும், பொன்னிற முடியுடனும் காணப்பட்ட அவளைப்பார்த்த சங்கிலியே ஒருமுறை நிதானம் தவறிப்போனான். முழங்காலுக்கு மேல் தொடையின் அரைப்பகுதிவரை ஏறியிருந்த வெள்ளைநிறக் கவுனுடன் கழுத்திலிருந்து மார்புவரை அர்த்த சந்திர வடிவமாக வெட்டிவிடப்பட்ட கவுனின் மேற்பகுதியும், அறவே கைகளற்ற தோள்வரை மட்டுமே தழுவி நின்ற அந்தக்கவுனினால் அவளது திண்ணிய பருத்த மார்பகத்தின் பெரும்பகுதி வெளிப்படையாகவே தெரிந்தது. விலையுயர்ந்த இரத்தினக்கல் பதிக்கப்பட்ட சங்கிலியொன்று அவர் மார்பைத் தழுவியிருந்தது. இவற்றை ஓர் பார்வையிலேயே அளவெடுத்த சங்கிலி “இரத்தினத்திற்கு அடித்த யோகம்” என ஆதங்கத்துடன் மனதில் கூறியதோடு தன் மனதையும் திடப்படுத்திக் கொண்டான்.

பேச்சை ஆரம்பித்த பிரகன்சா, “வணங்குகிறோம் பிரபு! உங்கள் நாட்டின் வளம் பற்றி கேள்விப்பட்டோம். இங்கு வந்து வியாபாரம் செய்தால் நிறையச் சம்பாதிக்கலாம் என்ற நோக்கத்தில் இங்கு வந்து இறங்கினோம். நாங்கள் உங்கள் நாட்டில் வியாபாரம் செய்ய நீங்கள் அனுமதி தரவேண்டும்” எனக் கோரினான்.

அவனைக்கண்களாலேயே அளவெடுத்த சங்கிலி “நீங்கள் கூறுவதை எவ்வாறு நம்புவது. வியாபார நோக்கோடு வந்த நீங்கள், உங்களை வளப்படுத்திய பிறகு எங்களுக்கு எதிராகத்திரும்புவீர்கள்” என தனது ஐயத்தைத் தெரிவித்தான்.

இதற்கிடையில் அவையிலிருந்த பரநிருபசிங்கன் “சங்கிலி! இவர்கள் மன்னாரில் வந்திறங்கிய பறங்கிகள் அல்ல. இவர்களது நோக்கமும் எங்களுக்கெதிரானது அல்ல. பாவம்! வயிற்றுப்பிழைப்புக்காக வந்திருக்கிறார்கள். அவர்கள் வயிற்றில் அடிக்கலாமா?” எனக் கூறினான். அப்பாமுதலியும் அவன் கூற்றை ஆதரித்தார். இதனால் மனம் மாறிய சங்கிலி பறங்கித் தளபதியைப் பார்த்து “நீங்கள் கூறவது உண்மையானால் பகற்காலத்தில் மட்டுமே, நகர்வந்து வியாபாரம் செய்ய வேண்டும். இரவில் மீண்டும் உங்கள் கூடாரங்களுக்கு திரும்பிவிட வேண்டும். இதற்குச் சம்மதமானால் எங்கள் நாட்டில் தங்குங்கள்” என்று கூறினான்.

அதற்கு உடன்பட்ட பறங்கிகள் அவ்வாறே செய்வதாகக் கூறிச்சென்றனர். பறங்கிகளுக்கும் தனக்குமிடையே இடம்பெற்ற பேச்சுவார்த்தயின்போது அவர்களுடன் வந்திருந்த தங்க விக்கிரகம் தன்னையே ஏறெடுத்துப் பார்த்துக் கொண்டிருந்ததை அவதானித்த சங்கிலி ஏக்கப்பெருமூச்சொன்றை வெளிவிட்டான். அண்ணன் பேச்சைக் கேட்டு பறங்கிகளை குடியமர்த்தியதன் விளைவை சிறிது காலத்திலேயே சங்கிலி உணர்ந்தான். அது நாட்டின் தேசிய பாதுகாப்பிற்கே வில்லங்கமாகிவிட்டது.

சாதிக்க வருவான்…

சரித்திரவீரன் சங்கிலி (பாகம் 14 கலகங்கள்)


வாழ்க்கை என்பது ஒரு வட்டத்தைப் போன்றது. அதில் பருவகாலங்களைப் போல மாறி மாறி இன்பமும் துன்பமும் மாறி மாறி வந்துகொண்டே இருக்கும். ஆனால் சங்கிலியின் வாழ்க்கையில் சோதனைகளும் வேதனைகளுமே நிறைந்திருந்தன.

மந்திரி பிரதானிகள் சூழ சங்கிலி யாழ்ப்பாணப் பாதுகாப்பு பற்றிய கலந்துரையாடலில் சபா மண்டபத்தில் ஈடுபட்டிருந்தான். தனிநாயக முதலியைப் பார்த்த சங்கிலி “என்ன முதன் மந்திரியாரே! நாடு சற்று குழப்பமடைந்து காணப்படுகின்றதே… என்ன நடக்கின்றது என்று சற்று விபரியுங்கள் பார்க்கலாம்” என்றான்.
“மறவன்புலவிலுள்ள மறவர்கள் அயற் கிராமங்களுக்குள் புகுந்து கொள்ளையிடுகின்றனர்”
“என்ன? மறவன்புலவில் கொள்ளையா?... நம் ஆட்சியில் கொள்ளையா? ஏன் என் மக்களுக்கு என்ன குறை? ஏதற்காக அவர்கள் இப்படியொரு காரியம் செய்கின்றார்கள்”.
“அரசே! அவர்கள் பரம்பரையினர் தென் இந்தியாவின் இராமநாத புரத்தைச் சேர்ந்தவர்கள். அவர்கள் உமது மூதாதையர் ஆட்சியில் இங்கு குடியேறினார்கள். இப்பொழுது நமது அரசிற்கு நாலாபக்கத்திலிருந்தும் பகை கிளம்புகின்றது. அதைச் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டு கலகம் விளைவிக்கும் நோக்குடன் சூறையாடல்களில் பரவலாக ஈடுபட்டு வருகின்றனர். அரசே, இவர்களை அடக்காவிடின் கொள்ளையும், களவும் குறைய மாட்டாது” என்றார் முதன்மந்திரி.

சங்கிலி தனது தளபதியாரைப் பார்த்து “தளபதி இதற்கொரு முடிவு கட்ட வேண்டும். இவ்விடயத்தை நீர் கவனித்துக் கொள்ளும்” என்றான்.
“ஆகட்டும் அரசே! சின்ன விடயம். எங்கள் வீரர்களை அனுப்பி அவர்களுக்கு தக்க பாடம் புகட்டுகின்றேன்” என்றான் இமையாணன்.
அதன்படி தளபதியின் கட்டளையின் பேரில் சென்ற வீரர்கள் சூறையாடல்களில் ஈடுபட்டிருந்த மறவர்களை சிறை செய்தனர். பயந்தோடிய மறவர்கள் காட்டுப்பகுதிகளில் ஒழிந்து கொண்டனர். இந்தக் காலப்பகுதிகளில் தொண்டைநாட்டிலிருந்து பன்னிரண்டு கருணீகரும் தம் குடும்பங்களுடன் வந்து யாழ்ப்பாணம் சேர்ந்தனர். இவர்கள் வருகை ஏதாவது சூழ்ச்சியுடன் இருக்குமோ என சங்கிலி ஐயப்பட்டான். அதனை தன் அரச சபைக்கும் தெரியப்படுத்தினான்.
“அரசே! அவர்கள் இயற்கையாகவே அறிவை நிரம்பப் பெற்றவர்கள். அவர்கள் இங்கிருப்பதால் நமக்குத் தான் பெருமை. அவர்கள் இப்படியான சிறுமையான, கீழ்த்தரமான செயல்களில் ஈடுபடமாட்டார்கள்” என எல்லோரும் ஆதரவு கூறினார்கள். அதன்படி அவர்களுக்கு காடாயிருந்த கரணவாய் எனும் பிரதேசத்தை சங்கிலி கொடுத்தான். அதனை அவர்கள் பண்படுத்தி நீண்ட காலம் சீரும் சிறப்புமாக வாழ்ந்து வந்தார்கள்.

இதன் பின்னர், சிறிது காலத்தில் வடமராட்சிப் பகுதியில் கலகம் ஏற்பட்டது. இது பற்றி சங்கிலி கேட்டறிந்த போது தனிநாயக முதலி கூறினார் “கோப்பாய் தலைமைக்காரனும், அவன் ஆட்களும் வடமராட்சி கோயில் திருவிழா ஒன்றிற்கு சவாரி வண்டியில் போயிருக்கிறார்கள். புறாப் பொறுக்கியில் சிறிது தங்கிய போது, அவ்வூர் சிறுவன் ஒருவன் வண்டி மாட்டின் குஞ்சத்தை கழற்றியிருக்கின்றான். இதனை அவதானித்த கோப்பாய் தலைமைக்காரன், சிறுவனைப்பிடித்து தண்டித்து அனுப்பிவிட்டான்.

அந்தச் சிறுவன் உடுப்பிட்டி தலைமைக்காரனது மகன். இதனால் ஆத்திரமடைந்த உடுப்பிட்டி தலைமைக்காரனும், அவனது ஆட்களும் சம்பவ இடத்திற்கு வந்து கோப்பாய் தலைமைக்காரனையும் அவனது ஆட்களையும் நையப்புடைத்து அனுப்பினர். இதனால் வெகுண்ட கோப்பாய் காரர்கள் நல்லதொரு சந்தர்ப்பத்துக்காக காத்திருந்து மீண்டும் உடுப்பிட்டிக்காரரை பழிவாங்கினார்கள். இதனால் மீண்டும் மீண்டும் அவர்களுக்குள் கலகம் ஏற்படுகின்றது. இதனால் அந்தப்பகுதிகள் எதொடர்ந்தும் பதற்றமாகவே காணப்படுகின்றன.”

“இரு தலைமைக்காரர்களையும் இங்கு வரவழைத்து விசாரிப்போமா?” என தளபதி இமையாணன் கேட்டான்.
“இல்லையில்லை, நானும் அங்கு அடிக்கடி செல்வதில்லை. இம்முறை அங்கு விஜயம் செய்து நிலைமைகளை நேரில் கண்டு தீர்ப்பதற்கு முடிவெடுத்துவிட்டேன்” எனச் சங்கிலி கூறினான்.

அதற்கமைய வடமராட்சி சென்ற சங்கிலி, அங்கு மக்களுடன் கலந்தாலோசித்து நிலமைகளை சுமூகமாக்கிவிட்டு மீண்டும் யாழ் நோக்கி வந்தபோது, கள்ளியங்காட்டெல்லையில் அவன் வண்டி தடுத்து நிறுத்தப்பட்டது. இதனால் சினமுற்ற சங்கிலி காரணம் என்னவென வினவினான்.

அங்கு நின்ற காவலர் தலைவன் “இது பரநிருபசிங்கன் எல்லை, அதுதான் நிறுத்தும்படியாயிற்று” என தாழ்ந்த குரலில் கூறினான்.
“எப்பொழுதிலிருந்து?” சங்கிலி வினவினான்.
பதில் கூறமுடியாது காவலர் தலைவன் திணறினான். பின் சங்கிலியை தொடர்ந்தும் தடுக்க முடியாது என்பதால் அங்கிருந்து செல்லுமாறு கூறினான்.

அப்பாமுதலியின் வாக்குப்படி சங்கிலி மீதிருந்த வெறுப்பினாலேயே பரநிருபசிங்கன் அப்படியொரு கட்டளையை இட்டிருந்தான். இந்த சம்பவங்களால் ஆத்திரடைந்த சங்கிலி அரண்மனை சென்றதும் இதற்கெல்லாம் ஒரு முடிவு கட்டுவது எனத் தீர்மானித்துக் கொண்டான். அரண்மனையில் இருக்கவே அவனுக்கு பிடிக்கவில்லை. உடம்பெல்லாம் எரிந்தது. உள்வீட்டிலிருந்து இப்படியான எதிர்பை அவன் எதிர்பார்க்கவில்லை. மனமுடைந்த அவன் நல்லூர் வடக்கெல்லையில் உள்ள குடிசையொன்றில் தங்கி இளைப்பாறினான்.

மாலைவரை யாரும் அவனைத் தேடி வரவில்லை. இரவு நெருங்க வீரனொருவன் விளக்கை மட்டும் குடிசையில் வந்து வைத்துச் சென்றான். இரவு ஏறியதும் பாயை விரித்துப்படுத்த சங்கிலி சிறிது நேரத்தில் உறங்கி விட்டான். நள்ளிரவு வந்தது, அவன் எதையோ நினைத்துப் சற்றுப் புரண்டான். புரண்டவன் சட்டென்று மலைத்தான். எழுந்திருக்கவும் முயன்றான். ஆனால் அவனை எழுந்திருக்க விடாமல் அழுத்தின இரு பூங்கரங்கள்.

“நீ எப்பொழுது வந்தாய் வடிவழகி?” அவன் கைகள் அவள் பூவுடலை வளைத்தன. அவள் புஷ்பம் போன்ற கைகளாகிய மாலை அவன் கழுத்தைச் சுற்றிச் சுழன்றது.
“இவ்விடம் உனக்கு எப்படித் தெரிந்தது?”
“உங்கள் நண்பர் கூறினார்”
“என்ன விடயத்திற்கு வந்தாய்?”
“நீங்கள் அரசாங்க அலுவல்களில் மூழ்கியிருப்பதால் என்னை மறந்து விட்டீர்கள். ஆனால் இந்தப் பேதையால் அவ்வாறு இருக்க முடியவில்லை. எந்நேரமும் உங்கள் நினைப்புத்தான்” எனக் கூறிய வடிவு, அவன் முரட்டு இதழ்களை தன் முல்லைப்பற்கள் இரண்டால் பற்றினாள்.

அவள் பூவுடல் வலிக்கும்படியாக சங்கிலி இறுக அணைத்துக் கொண்டான். அந்த வலியிலும் இன்பம் இருப்பதை உணர்ந்த வடிவழகி “ஆனாலும் நீங்கள் ரொம்ப மோசக்காரர்” என்றாள்.
“எவ்விடயத்தில்?...”
“பெண்கள் விடயத்தில்….”
“ஏன்?...”
“தனித்திருக்கும் பெண்ணை அணைக்கத்தான் தெரிகின்றது” எனக் கூறிய அவள் வெட்கத்தால் குனிந்தாள். அத்துடன் மல்லாந்து படுத்த நிலையில் ஒரு மோகப்புன்னகையில் சங்கிலியை பார்த்தாள். அப்புன்னகையில் அழைப்பிருந்தது.

அந்த இன்பமயமான வேளையில் யாழ்ப்பாணத்தின் தலையெழுத்தையே மாற்றக்கூடிய புயல் ஒன்று யாழ் கரையை வந்தடைந்தது.

சாதிக்க வருவான்…

சரித்திரவீரன் சங்கிலி (பாகம் 13 நம்பிகள்)


நல்லூர் அரசிலே சிறப்புற்று விளங்கியது யாதெனில் சட்டநாதர் ஆலயத்திற்கு சற்றுத் தெற்காக வரலாற்றைப் பறைசாற்றும் வகையில் அமைக்கப்பட்ட மந்திரிமனையாகும். இக்கட்டடத்தின் அமைப்பும், மரத்தாலான சிற்ப வேலைப்பாடுகளும் நூதனமான கலைப்பண்பை வெளிப்படுத்துகின்றன. அதில் நம் சுதேச மரபு கலந்திருந்தது.

மந்நிதிமனைக்கு உள்ளிருந்து வெளியே யமுனா ஏரிக்கு வந்து சேரும் வகையில் மிக நுட்பமாக ஒரு சுரங்க வழி அமைக்கப்பட்டிருந்தது. இது நல்லூர்க் கோட்டைக்கு மிகவும் பாதுகாப்பாக விளங்கியது. சுரங்கவழியின் பாதுகாப்பையும் உறுதியையும் ஆராயவென தளபதி இமையாணனும், சங்கிலியும் சுரங்க வழிக்குள் இறங்கி நின்றனர்.

இந்த வேளையில் சங்கிலியைப் பல இடங்களில் தேடிய வீரமாப்பாணன், கடைசியாக சுரங்க வழிக்குள் வந்து சங்கிலியைச் சந்தித்தான்.
“என்ன மாப்பாணா! புரபரப்புடன் வருகின்றாய்? உன்னுடன் என்றுமே ஒரு தகவலைக்கூட வைத்திருப்பாயே! இன்று என்ன கூற வந்தாய்… என்னை எங்காவது கூட்டிக்கொண்டு போகப்போகின்றாயா? நான் பாதுகாப்புப் பற்றிய ஆலோசனைகளில் இருக்கின்றேன். நாளை போவோமா?” என மாப்பாணன் வந்த விடயத்தை தானாக ஊகித்துக் கூறினான்.


நிலமை தெரியாமல் சங்கிலி கூறியதைச் செவிமடுத்த தோழன்
“நான் வந்திருக்கும் விடயம் சந்தோஷமானதல்ல, துக்கமானதாகும்” எனக் கூறினான்.
“என்ன! என்ன விடயம்?” சுதாகரித்துக் கொண்டான் சங்கிலி. “நம்மிடம் புதிதாக இணைந்த வன்னியன் இறந்துவிட்டான்”.
“யார்… நம் தளபதிகளில் ஒருவனான கரைப்பிட்டி வன்னியனா?”
“ஆம் அரசே!”
“என்ன விடயம் என விசாரித்தாயா?”
“இல்லை, ஆனால் அவன் கீழ் வேலை செய்யும் நம்பி ஒருவன் தான், அவனை யுத்த நெறிமுறைகளுக்கு புறம்பாகக் கொன்றான்”.
“நம்பியா கொன்றான்! நம் படைத்தலைவன் என்று தெரிந்தும் நம்பிக்கு எவ்வாறு அவனைக் கொல்ல தைரியம் வந்தது”
“தெரியவில்லை மன்னா!”
சங்கிலி கோபம் கண்களில் கொப்பளிக்க தளபதி இமையாணனைப் பார்த்து “சங்கிலி படைத்தளபதி ஒருவனை அடிமை ஒருவன் சாய்த்து விட்டான். அவனுக்கு தக்க தண்டனையை நாம் வழங்க வேண்டும். நம்பரை வீரரை அனுப்பி அந்த நம்பியை கொல்லும் படி ஆணையிடு” எனக் கூறினான்.
“அரசே! எதையும் தீர விசாரித்து அறியாமல் ஒரு முடிவுக்கு வருவது தப்பு” என மாப்பாணன் ஆலோசனை கூறினான். ஆனால் ஏற்கனவே வெளிநாட்டவர் மீது ஆத்திரம் கொண்டிருந்த சங்கிலி அவனது ஆலோசணையை ஏற்கவில்லை. இதனால் அநியாயமாக ஒரு உயிரை எடுக்க வேண்டியதாயிற்று.

சில நாட்களின் பின்பே உண்மை நிலையைச் சங்கிலி அறிந்தான். இதனால் பெரிதும் வருந்தினான். நம்பிகளுக்கு ஏதாவது நல்ல விஷயங்களை செய்ய வேண்டும் என்ற நல்லெண்ணத்தில் நம்பிகள் இருந்த இடத்தைத் தேடிச் சென்றான். சங்கிலியின் தண்டணையால் பெரிதும் மனமுடைந்த நம்பிகளில் பலர் யாழ்ப்பாணத்திலிருந்து புறப்பட்டுச் சென்று விட்டனர். அவர்கள் யாழ்ப்பாணத்தில் காலூன்றி பல சொத்துக்களைச் சேர்த்து வைத்திருந்ததால் அந்த அனாதைச் சொத்துக்களை எல்லாம் அரச உடமை ஆக்கினான். தன் மனநிம்மதிக்காக பல ஆலயங்களில் விசேட பூஜைகள் பலவற்றை ஏற்பாடு செய்தான்.

தன் ஆத்திரப்புத்தியை மிகவும் நொந்து கொண்டு அந்தப்புரம் சென்றான். கவலைகளை மறக்கடிக்கும் அவ்விடமும் அவனுக்கு சுமையாகவே தோண்றியது. தோழிகளுடன் சிரித்துப் பேசிக் கொண்டு பஞ்சணையில் உட்கார்ந்திருந்த மாதேவி, சங்கிலியைக் கண்டதும் வழக்கமான நாணத்துடன் பெரிய எதிர்பார்ப்புடனும் மெல்லிய திரைச்சீலையால் சுற்றவரக் கட்டப்பட்டிருந்த அந்தத் திரு மஞ்சத்தில் உட்கார்ந்திருந்தாள். சங்கிலியை கண்ட தோழிகள் தலைதாழ்த்தி வணக்கம் தெரிவித்து விட்டு மெதுவாக வெளியேறினார்கள். மஞ்சம் நோக்கி வந்த சங்கிலி பஞ்சணையில் இருந்த பைங்கிளியை ஏறெடுத்தும் நோக்காமல் பஞ்சணையின் ஒரு ஓரத்தில் இருந்தான்.

சங்கிலியின் கொஞ்சல்களையும், குழாவல்களையும் எதிர்பார்த்திருந்த மாதேவி சிறிது நேரம் எந்தவித சலனத்தையும் காணாததால் விரக்தியடைந்து, ஏமாற்றத்துடன் பஞ்சணை முகப்பிலிருந்த மெல்லிய திரையை விலக்கிக் கொண்டு தலையை நீட்டி “என்ன நடந்தது? ஏன் குழம்பிய மனத்துடன் காணப்படுகின்றீர்கள். வழமையாக நான் உங்களை இப்படிக் கண்டதே இல்லையே” என சோகமாக வறட்சியான குரலில் கூறினாள்.

அவளுக்கு உடனடியாகப் பதில் சொல்லாத சங்கிலி திரைகளுக்கு இடையே தெரிந்த அவள் சுந்தர முகத்தையும், விலகிய சேலையின் விளைவாக தெரிந்த மேல் அழகுகளையும் சில வினாடிகள் உற்று நோக்கினான். “இந்த சௌந்தர்யங்களையெல்லாம் ஆள இப்போது என்னால் இயலாது” என மனதுக்குள் சொல்லிக் கொண்டு பஞ்சணையை அணுகி மாதேவியை அப்படியே தனது கைகளில் அள்ளித் தூக்கித் தனது இதழ்களை முரட்டுத்தனமாக அவள் கழுத்தில் பதித்தான். அங்கிருந்து மீண்ட உதடுகள் அவள் செவ்விய அதரங்களுடன் ஒரு வினாடி இழைந்தது. அடுத்து எந்த சரசத்திலும் ஈடுபடாத சங்கிலி வெடுக்கென எழுந்திருந்தான்.

“தேவி! ஏன்னால் இன்று இன்பமாக இருக்க முடியாது. என் மனம் இன்று ஒரு நிலையில் இல்லை. சங்கடப்பட்டுக் காணப்படுகின்றது” எனக் கூறினான். தரையில் நின்றபடி அவன் உடல் மீது சாய்ந்து தனது உடலை அவன் உடலுடன் முற்றும் இழைத்துக் கொண்டாள் மாதேவி. அந்த ஒரு வினாடி அவன் மனதை மாற்றியது அந்த அணைப்பு. அவளை அணைத்துக் கொண்ட சங்கிலி “தேவி! என் அவசரப்புத்தியால் அநியாயமாக ஒரு உயிரைப்பறித்து விட்டேன்” என சோகமாகக் கூறினான்.

நடந்ததைக் கேட்டறிந்து கொண்ட பட்டத்து ராணி, அவனை ஆதரவாக அணைத்து அவன் மார்மேல் தலையைச் சாய்த்துக் கொண்டு “நீங்கள் என்ன தெரிந்தா இப்படிச்செய்தீர்கள். மேலே கடவுள் என்று ஒருவன் இருக்கி;ன்றான். அவனுக்கு எல்லாம் தெரியும். நீங்கள் வீணாக மனதைப் போட்டுக் குழப்பிக் கொள்ளாதீர்கள்” என அவன் மனப்பாரத்தை இறக்க முயன்றாள்.

ஆனால் சங்கிலி மனம் ஆறுவதற்கு நீண்ட காலம் பிடித்தது. அதற்குள் சங்கிலிக்கு சவால் விடும்படியாக உள்நாட்டில் சிக்கலான சூழ்நிலை உருவானது.

சாதிக்க வருவான்…

சரித்திரவீரன் சங்கிலி (பாகம் 12 கரைப்பிட்டி வன்னியன்)


யாழ் நல்லூர்க் கோட்டை பகுதியெங்கும் மக்கள் சுறுசுறுப்புடன் இயங்கினர். சட்டநாதர் கோயிலும், வீராகாளியம்மன் கோயிலும் பக்தர்களால் நிரம்பி வழிந்துகொண்டிருந்தன. பல அரண்மனை வாசிகளும், அரச குடும்பங்களை சேர்ந்தவர்களும் இக்கோயிலை வழிபடுவர். இது தவிர யாழ் வீதிகளில் வீணாக பொழுதைப் போக்குபவர்களைக் காண்பதே அரிதாக இருந்தது. எல்லோரும் சுறுசுறுப்புடன் எப்போதும் இயங்கிக் கொண்டிருந்தார்கள். இவற்றையெல்லாம் கவனித்துக் கொண்டுவந்த கரைப்பிட்டி வன்னியன் ‘வாழ்ந்தால் இவ்வாறான ஒரு இடத்தில் தான் வாழவேண்டும்’ என தனக்குள்ளே சொல்லிக் கொண்டான்.

கோட்டையை அண்மித்த வன்னியன் அதன் அழகைக் கண்டு சிறுவர்களைப்போல் அண்ணார்ந்து பார்த்துக்கொண்டு நின்றான். இந்தியக் கோட்டைகளைப்போல் எதிரிகளை இலகுவாகச் சமாளிக்கும் வகையில் மிக நுட்பமாக கட்டப்பட்டிருந்த நல்லூர்க் கோட்டையையும் பக்கத்திலேயே ஓடிக்கொண்டிருக்கும் ஜமுனா ஏரியின் அழகையும், அதன் குழுமையால் கோட்டையைச்சுற்றி வளர்ந்திருந்த மரஞ்செடி கொடிகளையும் கண்ட கரைப்பிட்டி வன்னியன் ‘யாழ் மக்கள் கலாரசனையுடையவர்கள் தான்’ என நினைத்தான்.

அந்தநேரத்தில் அவ்வழியால் வந்த வீரமாப்பாணன் கோட்டையையே துருவித்துருவி பார்க்கும் வன்னியனைக் கண்டதும் சந்தேகம் கொண்டு அவ்விடத்தில் பணியிலிருந்த காவலாளிகளிடம் கண்ணைக்காட்டினான். உடனே இருவர் ஓடிவந்து ஈட்டி முனையில் அவனைத் தடுத்து நிறுத்தினர். அந்த திடீர் கைதால் வெலவெலத்துப் போன கரைப்பிட்டி வன்னியன் மிரள மிரள விழித்தான். அவனிடம் வந்த மாப்பாணன் அவனை நோக்கி “யார் நீ எனக் கேட்டான்” . நடுங்கியபடியே “நான் வன்னியன், அரசவேலை தேடி இங்கே வந்தேன்” எனக் கூறினான். அவன் நடத்தை மீது சந்தேகம் கொண்ட மாப்பாணன் அவனைக் கைது செய்து சங்கிலி இருக்குமிடம் கொண்டு சென்றான்.

சங்கிலி அந்தப்புரத்திலிருந்ததால் அவனை நந்தவனத்திற்கு வரும்படி மெய்க்காப்பாளனை மாப்பாணன் அனுப்பினான். சிறிது நேரத்தில் அங்கு வந்த சங்கிலி மாப்பாணனுடன் கூடவே ஒருவன் நிற்பதைக் கண்டு “என்ன மாப்பாணா! சிறிது காலம் நான் உன்னுடன் ஊர்சுற்ற வரவில்லை. அதற்குள் கோபம் கொண்டு நண்பனை மாற்றி விட்டாயே” எனச் செல்லமாகக் கடிந்து
கொண்டான். “அவ்வாறில்லை அரசே! இவன் அரண்மனைக்கு வெளியே சந்தேகத்திற்கு இடமான முறையில் நடமாடினான். விசாரித்ததில் இவன் வன்னியன், இந்தியாவிலிருந்து வந்திருக்கின்றான். பெயர் கரைப்பிட்டி வன்னியன் என்றும் அறியமுடிந்தது” என்றான். “ஓகோ! அப்படியா?” எனக் கூறிக்கொண்டு வன்னியன் மீது விழிகளை நாட்டி “நீ எப்பொழுது இங்கு வந்தாய்?” என சங்கிலி வினவினான்.

தனது நிலையை அழுகையுடன் ஒருவாறு கரைப்பிட்டி வன்னியன் கூறிமுடித்தான். அவன் கதையைக் கேட்ட சங்கிலி ஆதரவாக அவன் தோளைத்தட்டி “வீரனே! பயப்படாதே, அடைக்கலம் தேடிவந்தவரை காப்பது எம் கடமை. நான் உனக்கு அரண்மனையிலேயே வேலை ஒன்றுக்கு ஏற்பாடு செய்கின்றேன்”. எனக் கூறினான். இதைக்கேட்ட கரைப்பிட்டி வன்னியன் பெரிதும் சந்தோசமடைந்தான். மன்னனைத் தலைதாழ்த்தி வணங்கிக் கொண்டான். மன்னன் ஆணைப்படி கரைப்பிட்டி வன்னியனுக்கு சங்கிலி படையில் ஒரு பதவி வழங்கப்பட்டது. இந்த சம்பவங்களையெல்லாம் இருப்பிடம் சென்று தன் மனைவி அம்மை நாச்சியிடம் கூறிச் சந்தோசமடைந்தான் வன்னியன்.

நாட்கள் நகர்ந்து செல்ல கரைப்பிட்டி வன்னியன் மனதில் தீய எண்ணங்கள் குடிகொண்டது. தான் அரச பதவியில் இருந்ததால் அதைத் தவறாகப் பயன்படுத்த நினைத்து, தாழ்த்தப்பட்ட மக்களுக்கு துன்பங்களை விளைவித்தான். தன் கட்டளைக்குப் பணியாதவர்களை தண்டித்துவந்தான். அதுமட்டுமல்லாமல் பெண்களுடனும் தகாத முறையில் நடந்து கொண்டான். ஒருமுறை தன் சூழலில் வசித்து வந்த நம்பி ஒருவருடைய மகளின் அழகைக் கண்டு மயங்கி அவள் பின்னாலேயே அலைந்தான். அரசாங்கப் பதவியைக்காட்டி அவளை மயக்க முயன்றான். ஒன்றுக்குமே அவள் மசியாததால் தனது அதிகாரத்தைப் பாவித்து அவளை அச்சுறுத்தி வந்தான். அவள் பற்றிய தவல்களை அறிந்த போது அவள் தம் குலத்தில் ஒரு ஆடவனைக் காதலிப்ப தெரிய வந்தது. இதனால் வெகுண்ட வன்னியன், அவள் காதலனை அறிந்து, அவனைச்சிறைப்பிடித்துச் சித்திரவதை செய்தான். அவன் இருக்கும் நிலை பற்றி நம்பியின் மகளுக்குச் சொல்லியனுப்பினான்.

தன் காதலன் நிலையறிந்து, சொல்லமுடியாத கவலை அடைந்த அவள், ஓடோடி வன்னியன் சிறையிலிருந்த காதலனைக் கண்டாள். கடுமையாகத் தாக்கப்பட்டதால் நினைவிழந்து மயங்கிச் சரிந்த அவனைப் பார்த்து கதறியழுதாள். அவன் தலையைத்தூக்கி தன் மடியில் வைத்தாள். அவன் “தண்ணீர்! தண்ணீர்!” என முனகினான். அவ்வேளை அங்கு வந்த கரைப்பிட்டி வன்னியன், அவ்விடத்திலிருந்து நம்பி மகளை பலாத்காரமாகத் தூக்கிச் சென்று தன் பஞ்சணையில் எறிந்தான். கதறக்கதற அவள் கற்பைச் சூறையாடினான். நாயைப் போல கடித்துக்குதறி அவளைச் சின்னாபின்னமாக்கினான். பின் அவளையும், அவள் காதலனையும் அங்கிருந்து அடித்துத் துரத்திவிட்டான்.

தள்ளாடித்தள்ளாடி இருவரும் தம்மிடம் வந்து சேர்ந்தனர். கற்பிழந்து உருக்குலைந்து தன் முன் வந்து நின்ற மகளைப்பார்த்த நம்பி, செய்வதறியாது பித்துப்பிடித்துப் போனார். இதற்கெல்லாம் காரணமான வன்னியனைப் பழிவாங்கியே தீருவது என்று சபதமெடுத்துக் கொண்டார். அரச பதவியில் இருக்கும் அவனைப் பழிவாங்குவது அவ்வளவு இலேசான காரியமல்ல என்பதை அறிந்த நம்பி, குறுக்கு வழியில் அவனைக் கொல்லத்திட்டமிட்டார். இதன்படி தனித்து வீடுவந்த கரைப்பிட்டி வன்னியனை நாள் பார்த்து முதுகில் குத்திக் கொன்றார்.

நடந்த சம்பவங்களை அறிந்த கரைப்பிட்டி வன்னியனின் மனைவி அம்மைநாச்சி அவமானம் தாங்கமுடியாமல் வாழ மனமற்று வாளால் வயிற்றில் குத்து தற்கொலை செய்து கொண்டாள். நடந்த விடயங்களை முழுமையாக அறியாத சங்கிலி தன் படையின் முக்கிய வீரர் ஒருவர் கொல்லப்பட்டதால் ஆத்திரமடைந்து வெகுண்டெழுந்து ஒரு கொடுங்காரியத்தைச் செய்து விட்டான். இதனால் அவன் வாழ்நாள் முழுவதும் வருந்த வேண்டியதாயிற்று.

சாதிக்க வருவான்…

சரித்திரவீரன் சங்கிலி (பாகம் 11 - வன்னியர் வருகை)


சித்திரையில் சிறுமாரி எனக்கூறுவார்கள். காலையில் மழை வராது என நினைத்துக் கொண்டு தொழிலுக்கும், அன்றாட அலுவல்களுக்குமாக புறப்படுவோர் பிற்பகலில் பெய்யும் மழையால் வீடு திரும்பமுடியாது திணறிவிடுவார்கள். யாழில் அது நிலவி வருகின்றது. இந்தக்காலகட்டத்தில் பாண்டி நாட்டில் வன்னியர்கள் குழுவாக ஆலோசனைகளில் ஈடுபடுகின்றனர்.

‘எமக்கு இங்கு இருப்பதினால் எந்தவொரு பிரயோசனமும் இல்லை. நாம் யாழ்ப்பாணம் சென்றால் கை நிறையச் சம்பாதிக்கலாம். எம்மையும் வளர்த்துக் கொள்ளலாம்’ என நினைத்த அவர்கள் சில படகுகளில் யாழ்ப்பாணம் நோக்கி வர ஆயத்தமாகினர். அதன்படி இரு மரக்கலங்களைப் பெற்று, ஒன்றினுள் ஐம்பது வன்னியர்களும் இன்னொன்றில் அவர்கள் மனைவிமாரும் பிள்ளைகளும், நம்பிகளும் (ஆண்டிகளில் ஒரு சாதி) புறப்பட்டனர். இவர்கள் ஆயத்தமானபோதே வானம் மேக மூட்டத்துடன் காணப்பட்டது. புறப்பட்ட பயணத்தை தள்ளிப்போடுதல் அவ்வளவு அனுகூலமாக இருக்காது என்ற காரணத்தினால் பயணத்தைத் தொடர்ந்தனர். திடீரென கடல் கொந்தளிக்கத் தொடங்கியது. பேரலைகள் எழுந்து வீழ்ந்தன. சூறைக்காற்று சுற்றிச்சுற்றி சுழன்று அடித்தது. வன்னியர்களது மரக்கலங்கள் சிறியவை, ஆதலால் சூழலுக்கு எதிர்த்து நின்று தாக்குப் பிடிக்க முடியாமல் போனது.

இரு மரக்கலங்களும் ஒன்றிலிருந்து ஒன்று பிரிக்கப்பட்டது. தமது கணவன்மார்களை பிரிந்திருந்த பெண்களும், தந்தையர்களை பிரிந்த குழந்தைகளும் “குய்யோ! முறையோ!” எனக் கத்திய சத்தம் கடலலைகளை ஊடறுத்து இந்து சமுத்திரம் எங்கும் எதிரொலித்தது. தமது மனைவி, பிள்ளைகளைப் பிரிந்த வன்னியர்களில் சில துணிச்சலானவர்கள் கடலில் குதித்து பேரலைகளை எதிர்கொண்டு நீந்தினார்கள். சில பயந்த வன்னியர்கள் ஒன்றுமே செய்ய இயலாமல் கண்ணீர் வடித்து இறைவனைப் பிரார்த்தித்துக் கொண்டார்கள். ‘கடலில் குதிப்பொமா அல்லது மரக்கலத்திலேயே இருப்போமா?’ என நினைத்த வன்னியரை தடுத்து நிறுத்திய அங்கிருந்த வயதானவர்கள் “உங்கள் இஷ்ட தெய்வங்களை வழிபடுங்கள், இனி அவன் விட்ட வழி தான்” என கூறினார்கள்.

இதேவேளை மற்றைய மரக்கலத்தில் இருந்தவர்களின் துயரத்திற்கு சொல்லி அளவில்லை. அங்கிருந்த நம்பிகள் குடும்பமாக இருந்ததினால் ‘வாழ்வோ, சாவோ! எதுவானாலும் எல்லோரும் ஒன்றாகவே முகங்கொடுப்போம்’ என்ற முடிவுடன் இருந்தனர். சில பெண்கள் மார்பிலும் வயிற்றிலும் அடித்துக் கொண்டார்கள். “ஐயோ!, உங்களைப் பிரிந்துவாழ எப்படித் தைரியம் வரும், புது இடத்தில் போய் எப்படி வாழமுடியும்.? உங்களுடன் மீண்டும் நாங்கள் சேராவிடின் குடும்பத்துடன் கடலில் விழுந்து உயிரை மாய்த்துக் கொள்வோம். இது கடற் கன்னி மீது சத்தியம்” எனக் கதறினார்கள்.

பிள்ளைகள் தாயின் சேலைகளைப் பிடித்துக் கொண்டு, “அம்மா அப்பா எங்கம்மா? அப்பா வருவாரா?” எனக் கண்ணீர் வடித்தார்கள். இவர்கள் எல்லோரையும் தாங்கிய மரக்கலம் நடுக்கடலில் நர்த்தனமாடியது. பல மணிநேர போராட்டத்தின் பின் இந்த மரக்கலமானது யாழ்ப்பாணத்தின் ஒரு கரையை வந்தடைந்தது. கரையில் இறங்கிய நம்பிகளும், பெண்களும், பிள்ளைகளும் செய்வதறியாது தவித்தனர். கண்ணுக்கெட்டிய தூரம் வரை சனநடமாட்டத்தையும், அவர்களது மற்றைய மரக்கலத்தையும் காணமுடியவில்லை. இதனால் சோகமே உருவாக என்ன செய்வதென்று அறியாது திறந்த வெளியில் இளைப்பாறினார்கள். அங்கு கிடைத்த காய்கனிகளை உண்டு தங்கள் பசியைப் போக்கினார்கள்.

இரண்டு நாட்களின் பின்னர் கடலில் குதித்து நீந்திய வன்னியன் ஒருவன் கரைவந்து சேர்ந்தான். அவனைக்கண்டதும் ஆவல் மேலிட கரையில் இருந்த அனைவரும் எழுந்து அவனை நோக்கி ஓடினார்கள். அந்த அதிஷ்டக்காரன் கரைப்பிட்டி வன்னியனே! அவன் வருகையைக் கண்ட அவன் மனைவி அம்மைநாச்சி பெரிதும் சந்தோஷமடைந்தாள். ஆனாலும் அதனை வெளிப்படுத்த முடியாத நிலைமை அவளுக்கு… மற்றயவர்களின் கதி..?
ஆவனைச்சூழ்ந்து கொண்ட கூட்டத்திலிருந்து “என் கணவன் எங்கே? என் கணவனைக் கண்டீர்களா? என் அப்பா எங்கே?” என ஏகோபித்த குரலில் பலர் கேட்டனர். இதனால் ஏற்கனவே இளைத்திருந்த வன்னியன் மிகுந்த களைப்புற்றான்.

கூட்டத்திலிருந்த பெரியவர் ஒருவர் அவனைச்சுற்றி நின்ற கும்பலை அகற்றிவிட்டு அவனுக்கு கிழங்கும் நீரும் கொடுத்தார். அதை அவன் ஆசையுடன் உண்டான். அதன் பின்னர் அவர் “தம்பீ! உன்னுடன் வந்தவர்கள் எங்கேயப்பா? அவர்களுக்கு என்ன நடந்தது?” என துக்கம் மேலிடக் கேட்டார். தன்னை ஆசுவாசப்படுத்திக் கொண்ட அவ்வன்னியன், “அந்த இக்கட்டான சூழ்நிலையில் பலர் கடலில் குதித்தனர். அவர்கள் தப்புவது மிகவும் கடினம். எஞ்சியவர்களும் ஒருவாறு தப்ப முயற்சி பண்ணிய போது ஒரு பேரலை எமது மரக்கலத்தை கவிழ்த்து சென்றது. இதனால் நாம் எல்லோரும் கடலில் தூக்கி வீசப்பட்டோம், கடலலைகளுக்குள் சிக்கித் திணறிய நான் ஒரு மரக்கட்டையின் உதவியுடன் ஒருவாறு நீந்திக் கரைசேர்ந்தேன். மற்றவர்கள் வருவதென்பது குதிரைக் கொம்பு தான்” எனக் கூறிமுடித்தான்.

அவனது கூற்றைச் செவிமடுத்த சிலர் மயங்கிச் சரிந்தனர். பலர் என்ன செய்வதென்று அறியாமல் மிரள மிரள விழித்தனர். ஒரு மாதத்திற்கு மேலாக அப்பகுதியில் தங்கிய வன்னியர்கள், அவ்விடம் அவர்கள் தொடர்ந்து வாழ தகுந்த இடமாக காணப்படாததால் குழுக்களாக வெளியேறத் தொடங்கினார்கள். அந்த ஒருமாத காலப்பகுதியில் கடலில் இருந்து எந்தவொரு வன்னியனும் மீண்டுவரவில்லை. இதனால் அவர்கள் இறந்தவர்களே எனத் தீர்மானித்து மிகுதியானவர்களும் கொஞ்சம் கொஞ்சமாக அவ்விடத்தை விட்டு அகன்றார்கள்.

அந்தவகையில் கரைப்பிட்டி வன்னியனும் அவன் மனைவியும் சில நம்பிகளும் கந்தரோடை எனும் இடத்தில் தங்கினார்கள். கரைப்பிட்டி வன்னியன் அரண்மனை சென்று ஏதாவது வேலை வாங்கலாம் என்ற எண்ணத்தில் நல்லூர் பகுதியை நோக்கிப் புறப்பட்டான்.

சாதிக்க வருவான்…

சரித்திரவீரன் சங்கிலி (பாகம் 10 – பறங்கியர் படையெடுப்பு)


பொற்பழம் போலிருந்த சூரியன் அக்கினிக் கனியெனச் சிவந்து அடிவான மடியில் அவரோகணமாகிக் கொண்டிருந்தான். ஒளிவற்றிச் சுருண்டு மிக லேசான இருள் தூற்றலிடத் தொடங்கும் வேளை அண்மித்துவிட்டது.

இந்த மாலைவேளையிலும் அவசர அவசரமாக அரச சபையை கூட்டவேண்டியதாயிற்று சங்கிலிக்கு. அந்த அவசரத்திற்கு காரணம் ஒற்றர்கள் கொண்டு வந்த செய்தி. பறங்கிகள் படையொன்று யாழ்ப்பாணம் நோக்கிப் படையெடுத்து வருவதா, இதனால் அரசசபையில் அன்று அனைத்துத் தலைவர்களும் கூடியிருந்தார்கள். லஸ்தர் விளக்குகளினாலும் மெழுகுவர்த்திகளாலும் வெளிச்சமூட்டப்பட்ட அந்த சபா மண்டபம், தேவர் சபைபோலக் காட்சியளித்தது. வேகமாகச் சங்கிலி அவையினுள் பிரவேசித்தான். எல்லோரும் எழுந்து வணக்கம் செலுத்திவிட்டு அவன் அரசுக்கட்டிலில் அமர்ந்ததும் அமர்ந்தனர்.

சபையில் உள்ளோரைப்பார்த்து சங்கிலியே பேச்சைத் தொடங்கினான். “பறங்கிகள் பெரும்படையுடன் யாழ்நோக்கி வருகின்றார்கள். நான் போருக்கு அஞ்சுவதில்லை. ஆனால் நாட்டு நலனுக்கு ஏற்ப உங்களுடனும் கலந்தாலோசிப்பதற்காக சபையைக் கூட்டியுள்ளேன். நாம் இப்போது வேண்டுமானாலும் போருக்கு புறப்படலாம். ஆனால் உங்கள் கருத்துக்களை கூறுங்கள். எமது படையை என்றுமே தயாராக வைத்திருக்கின்றார் நம் தளபதி இமையாணன்” என்றான்.

இதைக்கேட்ட முதன் மந்திரி தனிநாயக முதலி எழுந்து “மகாராஜா! பறங்கிகளுடன் போர் செய்வதற்கு முன் நாம் யோசித்துத் தொடங்குதல் சிறந்ததாகும். அவர்கள் தென்பகுதியிலும், இந்தியாவிலும் மிகுந்த பலத்துடன் இருக்கின்றார்கள்.” எனக் கூறினார். இதனை அவைக்களத்துப் புலவரும், மந்திரி அடியார்க்கு நல்லானும் ஆமோதித்தனர். அத்துடன் நல்லான் எழுந்து “அரசே! பறங்கியருடன் போரிடுவதற்கு முன்னர் நாம் சில உபாயங்களைச் செய்தல் வேண்டும். அவர்களுக்கு எல்லா திசைகளிலும் சிக்கல்களை ஏற்படுத்தி, அவர்கள் கவனத்தை திசை திருப்ப வேண்டும்.”
“என்ன செய்யலாம் கூறுங்கள்” சங்கிலி வினவினான்
தளபதி இமையாணன் எழுந்து “அரசே! வடக்கே தஞ்சை நாயக்கருக்கு ஓலை அனுப்பி அவர்களோடு சண்டையிட ஏற்பாடு செய்ய வேண்டும். கள்ளிக்கோட்டை சமோரினையும் அவ்வாறே பறங்கியருக்கு எதிராக போரிடுமாறு தூண்ட வேண்டும். தெற்கே கோட்டை இராஜ்ஜியத்தை கைப்பற்றி விட்டார்கள். அங்கே நீர்கொழும்பு, சிலாபம் முதலிய பகுதிகளில் உள்ள மக்களை பறங்கியருக்கு எதிராக கலகம் பண்ணும்படி தூண்டிவிடலாம். பறங்கியரை திணறச்செய்வதற்கு இவை நல்ல உபாயங்கள்” எனக் கூறினான்.

இதுவரை பேசாதிருந்த அப்பாமுதலி “அரசே! பறங்கியருக்கு மாறாக இவ்வளவு நடவடிக்கைகள் வேண்டுமா? அவர்கள் வயிற்றுப்பிழைப்புக்காக இங்கு வியாபாரம் நடத்த வருகின்றார்களாக்கும். அவர்கள் வயிற்றில் அடிக்கலாமா? நாம் அவர்களை வாழவைக்க வேண்டும். அந்தப் பெருமை எதிர்காலத்தில் உங்களையே வந்துசேரும்” என தன் போலி அனுதாபத்தைக் காட்டினார்.

எல்லாவற்றையும் கேட்டுக் கொண்டிருந்த சங்கிலி இறுதியாகத் தீர்மானமாக எல்லோரையும் பார்த்துக் கூறினான் “நான் மீண்டும் ஞாபகப்படுத்துகின்றேன், நான் போருக்கு அஞ்சவில்லை. அதனால் நாட்டுமக்கள் படும் துன்பத்தை நீக்க வேண்டும். எனவே எதற்கும் ஒருமுறை பறங்கித்தளபதிகளுக்கு ஒரு நல்லெண்ண முயற்சியாக போரைத்தவிர்க்கும் விதமாக தூதொன்றினை அனுப்பிப் பார்ப்போம்” எனக் கூறியதுடன் ஒரு மூலையில் இருந்த தன் நண்பனைப்பார்த்து “மாப்பாணா! நீதான் இதற்குப் பொருத்தமானவன். உடனே சென்று எனது விருப்பத்தை அவர்களுக்கு தெரிவித்து வா” எனக் கூறினான்.

அதன்படி வீரமாப்பாணனும் மன்னாருக்கு அருகில் உள்ள தீவுகளில் முகாமிட்டிருந்த பறங்கியத்தளபதிகளுடன் கலந்தாலோசித்துவிட்டு மீண்டும் சங்கிலியை வந்து சந்தித்தான். “என்ன மாப்பாணா! போன காரியம் எவ்வாறு முடிந்தது” சங்கிலி வினவினான். “வெற்றி தான், ஆனால் நாம் எமது பொக்கிஷத்தின் சிறுபகுதியை இழக்க வேண்டிவரும்” என்று கூறினான். “பூ! இவ்வளவு தானா? மனித உயிருடன் ஒப்பிடும் போது இது எவ்வளவு அற்பமானது” எனக் கூறி ஒரு தொகை திரவியங்களை அரச கஜானாவில் இருந்து படைவீரர்கள் மூலம் பறங்கிகளுக்கு கொடுத்தனுப்பினான்.

அந்தக்காலத்தில் யாழ்ப்பாணத்தில் சிங்களவர், சாவகர், வன்னியர் போன்றோர் ஒரு குடையின் கீழ் சங்கிலியின் ஆட்சியில் குறிப்பிட்ட பிரதேசங்களில் இருந்தனர். அடிக்கடி யாழ்ப்பாணத்தைச் சூழும் போர் மேகங்களால் பெரிதும் கவலையுற்ற சங்கிலி, இவர்களை இங்கு வைத்திருப்பது சிரமம் என யோசித்தான். அதை அரசசபையிலும் தெரிவித்தான். அதற்கு பலபேர் வரவேற்புத் தெரிவித்தனர்.

முதன் மந்திரி தனிநாயகமுதலி “அரசே! இவர்களது சனத்தொகை பெருகும் போது பறங்கிகள் போல் இவர்களும் எமக்கெதிராக போருக்கு எழுவார்கள். உள்நாட்டுப்போர் வெளிநாட்டுப் போரிலும் மிகக் கொடியது. இதனால் பல உயிர்சேதம் ஏற்படும்” என தன் ஐயத்தைத் தெரிவித்தார். அரசகேசரியும் “இவர்கள் கொஞ்சம் இடம் கொடுத்தால் மடத்தையே பிடிக்கக் கூடியவர்கள். இவர்களால் நாம் பரதேசிகளாக வாழவேண்டி நேரிடலாம்” எனக் கூறினார். அடியார்க்கு நல்லான் “மன்னா! அவர்களுக்கென்று சொந்த இடங்கள் இருக்கின்றது. இதனால் அவர்களை இங்கிருந்து வெளியேற்றினாலும்; பெரிதாகக் கஷ்டப்படமாட்டார்கள். நாட்டு நன்மை கருதி அவர்களை இங்கிருந்து வெளியேற்றுவதே சிறந்த முடிவாகும்” எனக் கூறினான்.

எல்லோரது ஆலோசனைகளையும் ஏற்ற சங்கிலி சிங்களவர், சாவகர், வன்னியர் போன்றோரை எந்தவித சேதமும் இல்லாமல் அவர்கள் சொந்தப்பிரதேசங்களுக்கு அனுப்பி வைத்தான்.

இந்த சமயத்தில் பாண்டி நாட்டிலிருந்து ஒரு அபாயம் யாழ் நோக்கி வந்துகொண்டிருந்தது.

சாதிக்க வருவான்

சரித்திரவீரன் சங்கிலி (பாகம் 9 – சவேரியர்)


நிலம் குழைய, குளம் வழிய நல்ல மழை யாழில் பெய்து ஓய்ந்தது. மேற்றிசை வான்சரிவில் ஏழ்வண்ண வில்லோவியம் எழுந்து நின்றது. வானத்தில் நிற முகில்கள் பல்வேறு சித்திரங்களாக வடிவெடுத்து நின்றன.
தன்னை நோக்கி வந்த வீரமாப்பாணனை எதிர்கொண்டு வரவேற்ற சங்கிலி

“நல்ல சமயத்தில் தான் வந்தாய் தோழா! உன்னிடம் ஓர் ஆலோசனை கேட்க வேண்டும்.”
“என்ன விடயமாக?”
“வடிவழகிக்கும் எனக்கும் இருக்கும் தொடர்பு பற்றி தேவிக்கு சிறிது சந்தேகம் வந்திருக்கின்றது. இதற்கு என்ன செய்யலாம்”
“அதைத் தக்க தருணம் வரும் போது கூறிச் சமாளித்துக் கொள்ளலாம். இப்பொழுது வேறொரு பணி வந்துவிட்டது”
“என்ன அது?”
“சவேரியர் உன்னைக்காண வந்திருக்கின்றார்”
“யாரவர் சவேரியர்?”
விளக்கினான் நண்பன்.
**********************************************************************************
மன்னாரில் அறுநூறு பேருக்கு சிரச்சேதம் செய்ததால் அங்கு மதத்தைப் பரப்பிக் கொண்டிருந்த கிறிஸ்தவ குருவானவர் தப்பிக் கோவைக்குச் சென்றதை முன்னைய அத்தியாயம் ஒன்றில் வாசித்திருப்பீர்கள். அவர் நேரடியாக அங்குள்ள பிரதம குருவான சவேரியரிடம் சென்றார்.

“என்ன சிஷ்யா! திடீரென மன்னாரிலிருந்து இங்கு வந்து நிற்கிறாய். அங்கு எல்லோரையும் எங்கள் பக்கம் சேர்த்துக் கொண்டாயா?” சவேரியர் வினவினார்.
“குருவே! எங்கள் திட்டத்தில் எல்லாம் இடிவிழுந்து விட்டது. யாழ்ப்பாணத்திலிருந்து புயல்போல ஒரு அரசன் கிளம்பி வந்து மதம் மாறுவோரைத் தண்டித்தான். எதிர்த்த அறுநூறு பேருக்கு எந்தவிதக் கருணையும் காட்டாமல் சிரசைக் கொய்ய ஆணையிட்டான். அவன் தீவிர மதப்பற்றுடையவனாகத் தெரிகின்றான். அவன் இடத்தில் எங்கள் விளையாட்டுக்கள் எதுவும் பலிக்காது போலிருக்கின்றது.” எனப் பரிதாபமாகக் கூறினார்.

“ஓ! அப்படியா? சங்கதி, அதை நானும் ஒருமுறை பார்க்கின்றேன்.” என ஆவேசமாகக் கூறிக்கொண்டு மன்னார் வருவதற்கு ஆயத்தமானார். அதன்படி மன்னாரிலும் வந்திறங்கினார். அங்கு மதத்தைப்பரப்புவதற்காக மக்களைச் சந்தித்தார். அதற்காக சில சலுகைகளையும் வெளியிட்டார்.

“மகா சனங்களே! நீங்கள் எல்லோரும் எம்முடன் இணைந்து கொள்ளுங்கள். இப்பொழுது உழைத்துக் கொண்டிருக்கும் வருட வருமானத்தின் ஐந்து மடங்கை நாம் இனாமாகத் தருகின்றோம். உங்களை உயர் ராஜாங்க உத்தியோகங்களில் அமர்த்துகின்றோம். அத்துடன் உங்கள் பிள்ளைகளுக்கு உயர்கல்விக்காக உள்நாட்டிலும், வெளிநாட்டிலும் வசதிகளைப் பெற்றுத் தருகின்றோம்” என இவ்வாறான பல சலுகைகளை அறிவித்திருந்தார். மக்கள் எவருமே அதற்குச் செவிசாய்க்கவில்லை. சங்கிலியின் குணம் தெரிந்திருந்ததால் அவன் ஆணையைக் கடக்க எவரும் விரும்பவில்லை. இதனால் மன்னாரில் நின்று பயனில்லை என அறிந்த சவேரியர் 1548 இல் சங்கிலியை சந்திப்பதற்காக யாழ்ப்பாணம் வந்தார்.
************************************************************************************

அந்தவகையில் சவேரியரை ஒரு வெளிநாட்டுத் தூதர், அத்துடன் ஒரு மதகுரு என்ற வகையில் சிறந்த அரச மரியாதையுடன் வரவேற்று கோட்டை அரச சபா மண்டபத்தில் சங்கிலி சந்தித்தான்.

“வணங்குகின்றேன் அரசே! உன் புகழ் கடல் தாண்டி இந்தியாவிலும் அறியக் கூடியதாக இருக்கின்றது. இவ்வளவு வீரம் படைக்கப்பெற்ற நீ பறங்கி அரசர்களோடு நல்லுறவை வைத்துக் கொண்டால், உனக்கும் உன் நாட்டு மக்களுக்கும் பல நன்மைகள் கிடைக்குமே!” என ஆசை வார்த்தை கூறினார் சவேரியர்.

ஆனால் இதற்கெல்லாம் மயங்குகின்றவனா நம்மன்னன் சங்கிலி. சவேரியரது உள் நோக்கங்களைப்புரிந்து கொண்டாலும் அதை வெளிக்காட்டாமல் “ஆம் அவ்வாறே செய்யலாமே!” எனக் கூறினான்.
அதன்படி ஒரு ஒற்றனை அனுப்பி கோவையில் இருக்கும் அரசனுடன் கதைத்து அவன் விரப்பத்தைக் கேட்டு வரும்படி கூறினார் குருவானவர்.
அதற்கேற்ப சங்கிலியும் தன் அந்தரங்க தூதுவனொருவனை கோவைக்கு அனுப்பி வைத்தான். அதன்படி அவன் வரும்வரை சவேரியரை பாதுகாப்புடன் யாழ்ப்பாணத்திலேயே தங்க வைத்துக் கொண்டான். போன தூதனும் சில நாட்களில் கோவை பறங்கி அரசனது தகவலுடன் யாழ் வந்து சேர்ந்தான்.
அரச சபையிலே அரசனைச் சந்தித்து கோவை அரசன் நம நட்பை ஏற்றதாகவும் அதற்கு அடையாளமாக சில நினைவுச்சின்னங்களையும் அரசனுக்கு ஒரு நட்பு ஓலையையும் தந்ததாகக் கூறினான். இவ்வாறு சில நாட்கள் அமைதியாக ஓடின. ஒருநாள் சங்கிலியைச் சந்தித்த சவேரியர் மெல்ல தன் எண்ணத்தைத் தெரிவித்தார்.

“அரசே! என்னையும் என்னுடன் வந்தவர்களையும் சேர்த்து நாங்கள் நிறைய ஆட்கள் யாழ்ப்பாணத்தில் தங்கியுள்ளோம்.”
“அது தெரியும் தானே”
“இல்லை எங்களுக்கு…”
“என்ன ஏதாவது குறைபாடா? அரச ஊழியர்கள் உங்களைச் சரிவரக் கவனிப்பதில்லையா? அவர்களைத் தண்டிக்கட்டுமா?”
“இல்லை அரசே! நாங்கள் வழிபடுவதற்கு இங்கு எங்களுக்கு தெய்வம் இல்லையே”
“இதில் என்ன வருத்தம் கடவுள் ஒருவர் தானே! நீங்கள் மானசீகமாக மனதால் வழிபட்டாலே போதுமே!” எனக் கூறினான்.
“அப்படியல்ல, எமக்கு இங்கு வழிபட ஒரு கோயில் அமைக்க இடம் தாருங்கள். அதற்கான செலவை நாம் தந்துவிடுகின்றோம்”. என சவேரியர் கூறினார்.
சவேரியரது உள் நோக்கங்களைப் புரிந்து கொண்ட சங்கிலி இப்பொழுது இவர்கள் கோயில் அமைக்க இடம் கேட்பார்கள். காலப்போக்கில் எங்கள் கோயில்களையும் அழித்துவிடுவார்கள் என தனக்குள் நினைத்துக் கொண்டான்.

“நான் ஆரம்பத்திலேயே நினைத்தேன். என்ன இன்னும் நமக்கு இவர்கள் தொல்லை தரவில்லையே என்று? இப்பொழுது புரிகின்றது உங்கள் உள் நோக்கங்கள். இனி உங்களை இங்கே வைத்திருப்பது வயிற்றில் நெருப்பை கட்டி வைத்திப்பது போன்றது. இனி நீங்கள் உங்கள் ஊருக்குச் செல்லலாம். வந்தோரை வரவேற்பது தமிழர் பண்பு. நாம் வரவேற்றோம். ஆனால் உங்கள் கபட நாடகத்திற்கு இங்கு இடமில்லை. நீங்கள் புறப்படலாம்” என கடுமையாக உத்தரவிட்டான்.

இனித்தன் தந்திரங்கள் பலிக்காது என அறிந்த சவேரியர் அவ்வளவில் மனம் சலித்து யாழ்ப்பாணத்தில் இருந்து புறப்பட்டு சீன தேசம் சென்றார்.
ஒரு அழிவில் இருந்து மீண்ட யாழ்மக்களை சிறிது காலத்தில் மாபெரும் அழிவுக்கான ஆயத்தங்கள் சூழ்ந்தன. இதிலிருந்து யாழ்ப்பாண மக்களைக் காப்பாற்ற சங்கிலி பெரும் பிரயத்தனம் மேற்கொள்ள வேண்டியதாயிற்று.


சாதிக்க வருவான்…

சரித்திரவீரன் சங்கிலி (பாகம் 8 – திண்டாட்டம்)


சங்கிலியின் அண்மைக்கால நடவடிக்கைகளில் சந்தேகம் கொண்ட பட்டத்து இளம்ராணி இராசமாதேவி சங்கிலியை கண்காணிக்க ஒரு ஒற்றனை ஏற்பாடு செய்திருந்தாள். அந்த மற்றைய சோடி கண்களுக்குரியவன் அவனே. அவன் நேராக இராசமாதேவி இருந்த நந்தவனத்திற்கு வந்தான். அங்கே இராசமாதேவியும் தோழி அங்கயற்கன்னியும் சிரித்துப் பேசிக்கொண்டிருந்தார்கள். அவர்களைச் சந்தித்து தான் ண்ட விடயத்தைக் கூறிப்போனான். இதைக்கேட்ட இராசமாதேவியின் கண்களிலிருந்து கண்ணீர் பொல பொலவெனக் கொட்டியது.


“பார்த்தாயா அங்கயற்கன்னி! அரசாங்க அலுவல் என அடிக்கடி கூறிக்கொண்டு சோழியர்புரம் பகுதி சென்று என்ன அலுவலைக் கவனித்திருக்கின்றார் என்று” தனது ஆதங்கத்தை நண்பியுடன் பகிர்ந்து கொண்டாள்.
“தேவி! நாம் தீர விசாரிக்காமல் ஒரு முடிவுக்கு வர இயலாது. ஆரசர் நல்லவர், ரொம்பக் கெட்டித்தனமுடையவர்” என்று கூறினாள் தோழி.
“பிற பெண்களை விரும்புவதிலும் அவர் கெட்டிக்காரர் தான்” என்று தன் கோபத்தை வெளிப்படுத்தினாள் மாதேவி.
“பெண்களை என்று ஏன் பொதுவாகச் சொல்கிறீர்கள், வடிவழகி ஒருத்தியைத் தானே!”
“சாட்சியுடன் இருப்பது இது ஒன்று, சாட்சியில்லாமல் எத்தனை காரியங்கள் நடந்தனவோ? யாரரிவார்?. அரசர் செல்லும் இடங்களுக்கெல்லாம் ஒன்றனை என்னால் அனுப்ப முடியுமா? அது தர்மமாகுமா?”
“விடுங்கள், அரசர் அப்படிச் செய்யக்கூடிய ஆளில்லை. அவர் மேல் குற்றம் கூறமுடியாது. அவருக்கு இடம் கொடுத்த வடிவழகியைத் தான் குற்றம் கூறவேண்டும், அரசர் கல்யாணமானவர் என்று தெரிந்துமா அவள் காதலிக்கத் துணிந்தாள்.” என்று சமாதானம் கூற முயன்றாள் தோழி.
“அவள் கூடாதவள் என்று நான் இதுவரை கேள்விப்பட்டதில்லையே”
“அப்படியெல்லாம் கூறமுடியாது. எல்லோரும் நல்லவர் போல் தான் நடிப்பார்கள். தக்க சமயம் வரும்போது தான் அவர்களது சுயரூபம் வெளிப்படும். ஆசைக்கும் அளவு இருக்க வேண்டும். கட்டிய மனைவி இருப்பது தெரிந்தும் ஓர் ஆடவனை வேறொரு பெண் காதலிக்கலாமா? இது தமிழர் பண்பாடாகுமா?” என பிரசங்கம் செய்தாள் அங்கயற்கன்னி.
“சரி இதைப்பற்றி பேசிப்பயன் என்ன? எல்லாம் ஆண்டவன் விட்ட வழிப்படி நடக்கட்டும். இருட்டுகின்றது நீ போய் வா! நான் அரண்மனைக்குச் செல்ல வேண்டும். நாளை உன்னை மீண்டும் சந்திக்கின்றேன்.” எனக் கூறிக்கொண்டு இராசமாதேவி நேராக மன்னன் பள்ளியறை நோக்கிச் சென்று பஞ்சணையில் தொப்பென்று விழுந்து தூக்கம் வராமல் புரண்டு புரண்டு படுத்தாள்.

அன்றைய அலுவல்களை முடித்துக்கொண்டு சங்கிலி தன் படுக்கையறை நோக்கி வந்தான். அரசன் வருவதை அறிந்த தேவி விருட்டென எழுந்து பஞ்சனையின் ஒரு மூலையில் உட்கார்ந்து தலையை மறுபுறம் திருப்பி வைத்துக் கொண்டாள். அறைக்குள் நுழைந்த சங்கிலி இடுப்பிலிருந்த உடைவாளைக் கழற்றி ஒரு மூலையில் வைத்துவிட்டு மேலங்கியையும் கழற்றி வைத்துவிட்டு பஞ்சணையில் திரும்பியிருந்த தேவியைப் பார்த்தான்.

இதுவரை வெளியில் எடுக்கப்படாதிருந்த வெண்பட்டு, மலரிலும் மென்மையான அவள் உடலை ஆசையுடன் தழுவி நின்றது. மார்பில் தொங்கிய கெம்புக்கல்லும் அவள் தலையில் செருகியிருந்த ரோஜாப்பூவும் அந்த வெண்பட்டுக்கு மாற்று வர்ணங்களாக அமைந்தன. சிலகணம் அவள் அழகைப்பருகிய சங்கிலி மெதுவாக அவள் பின்புறமாக வந்து அவளுக்குப் பின்னால் அமர்ந்து தனது வலது கையால் அவள் இடையைச் சுற்றிப்பிடித்தான்.
வெடுக்கென அவன் பிடியிலிருந்து விலகி மாதேவி எழுந்து நின்றாள். இதைச்சற்றும் எதிர்பார்க்காத சங்கிலி
“மகாராணிக்கு என் மேல் கோபம் போலிருக்கின்றதே” என யாதும் அறியாதவனாய்க் கேட்டான்.
“நீங்கள் செய்த செயலுக்கு உங்களை கட்டியணைத்து முத்தமிடவா முடியும்?” என முகத்தைத் திருப்பாமலே கேட்டாள்.
“ஏன் நான் என்ன தப்புச் செய்து விட்டேன்?”
“சோழியர்புர பகுதிக்கு ஏன் அடிக்கடி செல்கிறீர்கள்”
“அரசாங்க அலுவலாக…”
“அரசாங்க அலுவலா? அல்லது அப்பாமுதலியின் மகளா?” நடந்த விடயங்கள் எவ்வாறோ இவளுக்கு தெரிந்துவிட்டது. இனி கெஞ்சுவதைத் தவிர வழியில்லை என நினைத்துக் கொண்டான் சங்கிலி. ஒரு ஆண் என்ன செய்தாலும் பொறுத்துக் கொள்வாள். ஆனால் தன்னை விடுத்து வேறொரு பெண்மீது தன் கணவன் நாட்டங்கொண்டிருக்கின்றான் என்பதை எந்தப்பெண்ணும் தாங்கிக் கொள்ள மாட்டாள். பஞ்சணையில் இருந்து எழுந்து வந்த சங்கிலி மீண்டும் அவளை அணைத்து அவள் முகவாயைப்பிடித்து தன்னை நோக்கித் திருப்பி, உண்மையை மறைத்து



“நீ நம்புகிறாயா?” என ஒரு கேள்வியைக் கேட்டு அவள் இதழில் தன் இதழை ஆழமாகப்பதித்தான். இங்கு தான் இருக்கின்றது பெண்களின் பலவீனம். சற்று நேர இன்பத்தால் திக்குமுக்காடிப்போன தேவி கொஞ்சம் மனம் கனிந்து அவன் மார்பில் தன் முகத்தை புதைத்துக் கொண்டு விம்மத் தொடங்கினாள். அவளை மெதுவாகப் பஞ்சணையில் அமர வைத்த சங்கிலி அவள் குழல்களை ஆதரவாகத் தடவினான். கணவனது நெருக்கத்தால் பெரிதும் மகிழ்ந்து எல்லாவற்றையும் மறந்து கணவனுக்கு கீழ்ப்படிகின்ற குணம் மட்டும் பெண்களுக்கு இல்லையானால் அன்று சங்கிலி தப்புவது பெருந்திண்டாட்டமாய் போயிருக்கும். சிறிது நேரத்தின் பின் புன்றுவல் பூத்தாள் மாதேவி.
“ஏன் நகைக்கிறாய் தேவி?” என வினவிய சங்கிலி அவள் கைகளை நன்றாக அழுத்திக் கொடுத்தான்.
“ஒன்றுமில்லை” என்ற அவள் சற்றே அசைந்தாள்.
“பின் ஏன் நகைக்கிறாய்?”
“நகைக்கக் கூடாதா?”
“கூடாது”
“நகைத்தால் என்ன செய்வீர்கள்?”
“கன்னங்களைத் திருகி விடுவேன்”
“திருகுங்கள் பார்ப்போம்” அவன் கன்னத்தில் கைவிரல்கள் இரண்டை வைத்து அழுத்தினான். அவள் மேலும் நகைத்தாள்.
“இன்னும் உறைக்கவில்லையா?”
“இல்லை”
“இன்னும் அழுத்திக்கிள்ளுவேன்”
“கிள்ளுங்கள்” அவன் அவள் கன்னத்தை சற்று அழுத்தியே கிள்ளினான். அவள் பதிலுக்கு அவனுடன் அதிகமாகவே இழைந்தாள்.
“என்ன இவ்வளவு தான் கிள்ளுவீர்களா?” என்று கேட்டாள். அவன் அவள் கன்னத்தை திரும்பிப் பார்த்தான். கிள்ளிய இடம் சற்று சிவந்திருந்தது.
“சே! சற்று அழுத்திக் கிள்ளிவிட்டேன்” என்று வருந்தினான் சங்கிலி.
“பின் பொய்யாகவா கிள்ளுவீர்கள்”
“அப்படித்தான் கிள்ள நினைத்தேன்”
“அதிலென்ன பிரயோசனம்”
“வலிக்கக் கிள்ளினால் தான் உனக்குப் பிடிக்குமா?”
“ஆம்”
“ஏன்?”
“கணவன் கணவனாக இருக்க வேண்டும். கணவன் மனைவியை அடிப்பதும் இன்பம், கிள்ளுவதும் இன்பம், அணைப்பதும் இன்பம்”
“தூங்கு தேவி” உடலைத்தடவினான்.
“தூக்கம் வரவில்லை”
“எனக்கு மட்டும் வருமா தேவி?”
“எது?”
“தூக்கம்” இந்தப்பதிலை கேட்ட தேவி மெல்ல நகைத்தாள். இரகசியமாக
“உம் வராது… வராது” எனச் சொன்னாள். அவள் சொற்களில் குழைவிருந்தது. அடுத்து வந்த ஆனந்தத்தில் நிறைவிருந்தது. மறுநாள் ஓர் அவசர செய்தியுடன் சங்கிலியைத் தேடி நண்பன் வீரமாப்பாணன் வந்தான்.

சாதிக்க வருவான்…

சரித்திரவீரன் சங்கிலி (பாகம் 7 – கண்டிப்பு)


அந்த இருசோடி கண்களில் ஒருசோடி கண்களுக்குரியவர் வேறு யாருமல்ல, வடிவழகியின் தந்தை அப்பாமுதலி தான். இவ்விடயத்தில் அவசரப்பட்டால் பெரிய ஆபத்தை உண்டுபண்ணிவிடும். எனவே அமைதியாக ஆராயலாம் என இருந்தார். ஒருநாள் மெல்ல தன் மனையியிடம் கதையைத் தொடக்கினார்.

“கனகம்! கனகம்! நீ கொஞ்ச நாளா எங்கட வீட்டில ஏதாவது வித்தியாசத்தை உணர்றியோ?” “என்னங்க புதிராப் பேசிறீங்க, அப்பிடியென்ன புதினத்தை கண்டுட்டீங்க?” “அப்பிடியில்லையப்பா, உன் மகளின் போக்கில் ஏதாவது மாற்றம் தெரியுதா? ஏதாவது விடயங்களில் தனது நேரத்தை போக்குகின்றாளா? ஏன் கேட்கிறணென்டால் உனக்குத் தெரியாமல் இந்த வீட்டில ஒண்டும் நடவாது. பிள்ளையை ஒருவன் கையில ஒப்படைக்கிற வரைக்கும் நாங்க தான் கண்கொத்திப் பாம்பாகப் பார்க்கோணும்.” “இதென்ன புதுக்கதை சொல்லுறியள், சத்தியமா எனக்கு ஒண்டும் தெரியவே தெரியாது. நீங்க தான் ஏதோ மறைக்கிறீங்க, அதை என்னெண்டு தான் சொல்லுங்கோவன்”. “என் நண்பன் முத்துலிங்க முதலியின் வீட்டுக்கு ஒரு காரியமாய்ப் போயிருந்தன். அப்போது தான் பேச்சுவாக்கில் அவன் என்னிடம் இந்தக் கதையைச் சொன்னவன். இவள் பிள்ளை வடிவழகியும் சங்கிலியும் ஒருவரை ஒருவர் மனதாரக் காதலிக்கினமாம். இவ்விடயத்தை இப்படியே விட்டால் எங்கள் தலையில இடியைப் போட்டுட்டு இவள் ஏதாவது செய்து விடுவாள். அது பெருத்த அவமானமாய்ப் போய்விடும்”. “இப்படியேதாவது நடந்திருந்தால் எனக்குத் தெரிந்திருக்கும்.” சிறிது யோசித்து விட்டு “எங்கள் வீட்டிற்கு பின்புறம் இருக்கும் தோப்பில் சில நாட்களாக சங்கிலி நடமாட்டம் தெரிகின்றது. இவள் பிள்ளையும் அடிக்கடி சோலைக்கு போகிறாள். சிலவேளை இது உண்மையாக இருக்குமா?” கனகம் அங்கலாய்த்தாள். “அது தானே பார்த்தேன். நெருப்பில்லாமல் புகையுமோ? நீ இனிக்கவனமாக இருக்க வேண்டும். உன் பெண்ணை தோப்புப் பக்கம் போகாமல் பார்த்துக்கொள். அவள் வந்த நல்ல புத்திமதிகளைச் சொல்ல அவள் மனத்தை மாற்ற முயற்சி பண்ண வேண்டும்”.


அவ்வேளை வடிவழகி வெளியில் இருந்து வீட்டினுள் நுழைந்தாள். அப்பாமுதலி பேச்சை நிறுத்திவிட்டு தனது மனைவிக்கு கண்ணைக் காட்டினார். உடனே மனைவி கனகம் மகளை நோக்கி “எடி! பிள்ளை… இஞ்சை ஒருக்கா வந்திட்டுப் போ” “என்னம்மா! என்ன விஷயம்?” “அது… வந்து… நான் நேரடியாக விஷயத்துக்கு வாரன். உனக்கும் சங்கிலிக்கும் ஏதாவது தொடர்பிருக்கோ? வெளியில் பலபேர் பலவிதமாக் கதைக்கினம். இறுதியில் எங்களுக்கு தானே அவமானம்”. திகைத்த வடிவு

“சங்…கிலி…யுடனா? இல்..லை… அம்மா…. நான் அவரைக் காண்பதே இல்லையே” வடிவழகி மென்று விழுங்கினாள். “இதோ பார்! அப்படி ஏதாவது எண்ணம் இருந்தால் இப்பொழுது இருந்து அதை மாற்றிக்கொள். உந்த இடம் சரிப்பட்டு வராது. சங்கிலியோ ஏற்கனவே திருமணம் ஆனவன். அவனுக்கு பட்டத்துத்தேவி இருக்கிறாள். நீ அவனைக் காதலித்து மணம் முடித்தால் அவன் ஆசை நாயகியாக தான் இருக்கலாம். அரசுரிமை உன் வாரிசுகளுக்கு கிடைக்கப்போவதில்லை. ஆகையால் உந்தத் தொடர்பை விட்டுவிடு. அப்பா உனக்கு எல்லா வகையிலும் ஏற்ற மாப்பிளை பார்த்திருக்கின்றார். அவரும் அரச குடும்பத்தைச் சேர்ந்தவர் தான்.” கனகம் கூறினாள்.

இதைக்கேட்ட வடிவழகியின் முகத்தில் இருள் குடிகொண்டது. கண்களில் கண்ணீர் சுரந்தது. அதை ஒருவாறு அடக்கிக் கொண்டு “யாரம்மா அவர்?” என்று கேட்டாள். சங்கிலியின் அண்ணன் மகன் பரராஜசிங்க முதலி” “பெயரைக் கேட்ட மாத்திரத்திலேயே “நான் மாட்டன்” என வெடுக்கென பதில் கூறினாள். அதுவரை சம்பாசனையை ஓரத்தில் இருந்து பார்த்துக் கொண்டிருந்த அப்பாமுதலி கோபம் கண்களில் கொப்பளிக்க திடீரென உட்புகுந்தார். “அவனுக்கென்ன குறைச்சல்?” “குறையொண்டும் இல்லைத்தான். ஆனால் எனக்கு அவரைப் பிடிக்கல. அவரை நான் திருமணம் செய்து கொள்ள மாட்டன்”. வடிவழகி உறுதியுடன் கூறினாள்.ஸ “ஓகோ! பேச்சு அப்படியும் போகுதோ… எங்களையே எதிர்த்துப் பேசுற அளவுக்கு நீ பெரிய மனுஷி ஆகிட்டாய். இதோ பார், நாங்க எது செய்தாலும் உன் நன்மைக்குத் தான் செய்வம். பேசாமல் எங்கள் பேச்சைக் கேட்டு நட” அப்பாமுதலி கூறிமுடிக்க வீட்டு வாயிலின் முன் அமளிதுமளிப்பட்டது. மனைவியையும் மகளையும் உட்செல்லப்பணித்துவிட்டு வாயிலை நோக்கிச் சென்று பின் பரநிரபசிங்கன் தலைமையிலான சிறு கும்பலுடன் உள் வருகின்றார்.


“வாருங்கள் அரசே, வந்து உட்காருங்கள்” “நான் என் தனிப்பட்ட விஷயமாக இவ்விடம் வந்தேன். உம்மையும் ஒருமுறை பார்த்துச் செல்லலாம் என வந்தேன்” கூறிக்கொண்டே இருக்கையில் அமர்ந்தார் பரநிருபசிங்கன். “மிக்க நல்லது” உள் திரும்பி “கனகம் அரசருக்கு குடிக்க ஏதாவது கொண்டு வந்து கொடு” என்று கூறிவிட்டு மீண்டும் பரநிரபசிங்கன் பக்கம் திரும்பி “நீங்கள் கண்டி சென்றீர்களே மருத்துவம் செய்விக்க, இப்போது அவர்களுக்கு சுகம் தானே?” “ஓம்! அவர்கள் மெத்த சுகம். சந்தோஷமாக இருக்கிறார்கள். ஆனால் அந்நேரம் எங்கள் குடும்பத்தில் தான் துக்கம் நடந்துவிட்டது.” என்ன பண்டாரத்தின் கொலை பற்றி கூறுகிறீர்களா? அது இருக்கட்டும் நீங்கள் அரச பதவி துறந்தது பற்றியும் ஒருகதை உலாவுகிறதே” என தனது கதையைத் தொடக்கினார் அப்பாமுதலி.

“என்ன மாதிரி?” “தாங்கள் செய்தது முறையல்ல என்று” “இல்லை.. இல்லை. அதுதான் சரி! என்னைவிட சங்கிலி ரொம்ப கெட்டிக்காரன், அவன் தான் அரசாளத் தகுதியானவன்”. “அது உண்மை தான். ஆனால் அப்பதவிக்கு அவன் தகுந்தவன் தானா என ஐயப்பட வைக்கிறது”. “ஏன் அப்படி?” “அவன் பட்டத்து ராணியின் மகனல்ல, அது தவிர ஒழுக்கத்திலும்…” “ஏன் ? அவன் யாரிடம் முறைதவறி நடந்தான். அவ்வாறு ஏதாவது நடந்திருந்தாலும் தனது நிலைக்குத் தக்கவாறு மாற்றிக்கொள்வான்”. “அவ்வாறெனில் பறவாயில்லை. ஆனால் அவர் நாட்டிலுள்ள பெண்களையெல்லாம் தொல்லைப்படுத்தித் திரிகிறார். அது மட்டுமல்ல என் குடும்பத்திலும்….” சொல்ல முடியாதவாறு போலிக்கண்ணீர் வடித்து பரநிருபசிங்கனிடம் முறையிட்டார் அப்பாமுதலி. “என்ன சொல்கிறீர்? உமது குடும்பத்திலேயா? கொஞ்சம் விளக்கமாகத் தான் சொல்லுங்கள் பார்க்கலாம்”. “நானோ? இந்த ஏழை சொல்லப் பயமாக இருக்கின்றது” “பரவாயில்லை. நான் இருக்கின்றேன். எதுவானாலும் வெளிப்படையாகக் கூறும்” “அரசே! என் மகள் வடிவழகி மீதும் கண் வைத்துத் திரிகிறார். இது கைகூடுமானால் என் குடும்பமே கெட்டுவிடும்”. எனக் கூறி பரநிருபசிங்கன் காலில் விழுகின்றார்.

“முதலியாரே! பயப்படவேண்டாம். நான் சங்கிலியின் மற்றக்குற்றங்களை பொறுத்தாலும், வடிவழகி விடயத்தில் வாய்கட்டி நிற்க மாட்டேன்.” “நீங்கள் அரச பதவியை ஏற்றிருந்தால் இந்தக் கெடுதி ஒன்றும் வந்திருக்காது. என்ன செய்வது? எங்கள் தலைவிதி அவ்வளவு தான்”. எனப் பெருமூச்சு விடுகின்றார். “போனதைப்பற்றி கவலைப்பட்டுப் பயனில்லை. உம் மகள் வடிவழகியை எனது மாளிகைக்குக் கொண்டுவந்து எனது பாதுகாப்பில் விடும். அவளுக்கு ஒரு துன்பமும் நேராது”. பரநிருபசிங்கன் அப்பாமுதலியின் வீட்டிலிருந்து கிளம்பினான். “தாங்கள் இங்கு வந்தது நான் செய்த பாக்கியமே” எனப் பெரும்பாரம் இறங்கியது போல அப்பாமுதலி கூறினார்.

மற்றைய ஒருசோடி கண்களுக்குரியவன் சங்கிலியின் வாழ்க்கையிலேயே சூறாவளியை உண்டு பண்ணிவிட்டான்.

சாதிக்க வருவான்