Pages

Saturday, July 31, 2010

சரித்திரவீரன் சங்கிலி (பாகம் 24 - துருவங்கள் சந்திப்பு)

பனிக்காலம், பொழுது புலர்ந்து ஒரு நாழிகை நேரமாகியும் பனி மூட்டம் இன்னும் கலையவில்லை. பகலவனும் முகம் காட்டவில்லை. எங்கெங்கும் வெண் பனித்திரை விரிந்து கவிந்திருந்தது. நீரணுக்கள் நிறைந்த கனத்த பனிப் புகையால் உலகின் தோற்றமே ஒடுங்கி மறைந்து விட்டிருந்தது. புல்லிதழ்களின் மடியில் வயிரமணிகள் உருண்டிருந்தன. மர இலைகளில் முத்துக்கள் காய்த்திருந்தன. பூமாதேவியின் இதயமே உறைந்து சுருங்கி விடத்தக்க குளிர். சகிக்க முடியாத தண்ணென்ற வரட்சிக் காற்று.

இத்தகைய பொல்லாப் பனியையும், காற்றையும் கொஞ்சமும் பொருட்படுத்தாமல் சங்கிலியின் அரண்மனைக்குள்ளே முக்காடிட்டு வந்த ஒரு உருவம் வாயிற் காவலனிடம் ஏதோ கூறியது. அவனும் அதற்கிணங்கி ராணி இராசமாதேவியை வந்தடைந்து வணக்கி நின்றான்.
'வணங்குகிறேன் தேவி"
'இருக்கட்டும்.. என்ன விடயம்?"
'உங்களைப் பார்க்க பெண்ணொருத்தி வந்துள்ளாள்"
'யாரவள்?"
'தெரியவில்லை"
'இந்த நேரத்திலா?"
'ஆம்..."
'வரச்சொல் பார்க்கலாம்"
மாதேவியிடம் இருந்து விடை பெற்றுச் சென்ற காவலன் அந்தப் பெண்ணை உள்ளே அனுப்பினான்.

உள்வந்த பெண்ணைக் கண்டதும் பெரிதும் சினப்பட்ட தேவி, 'யார்... அப்பாமுதலியின் மகள் வடிவழகியோ?"
'ஆம்!"
'இங்கு எப்படி வந்தாய்? வந்திருப்பது நீயெனத் தெரிந்திருந்தால், உன்னை உள்ளே வரவே அனுமதித்திருக்க மாட்டேன். ஒழுக்கங் கெட்டவளே! என்னருகில் வர உனக்கென்ன துணிவு. இது முதற்தடவையாக இழைத்த குற்றமாதலால் மன்னித்து விடுகின்றேன். பிழைத்துப் போ... இனி இந்த மாளிகைக்குள் காலடி எடுத்து வைக்கக் கூடாது. புரிந்ததா?... அங்கயற்கன்னி! இந்தச் சிறுக்கியை என் முன் நிற்கவிடாதே.. போகச் சொல்!" என தேவி ஆத்திரத்தில் கத்தினாள்.

தேவியின் குரலைக் கேட்டு பக்கத்தறையில் இருந்து ஓடி வந்த தோழி, அங்கு நின்ற இருவரையும் மாறி மாறிப் பார்த்து 'அழகில் இருவரும் சளைத்தவர்கள் அல்ல" என தனக்குள் கூறிக்கொண்டு வடிவழகி அருகே சென்றாள். இதனால் சற்று அப்பால் விலகிய வடிவழகி இராசமாதேவியைப் பார்த்து 'தேவி! நான் செய்தது குற்றம் தான். என்னில் கோபிக்க வேண்டாம். அரச வாழ்வுக்கும் எமக்கும் எட்டாப் பொருத்தம் என்பதனை இப்பொழுது நன்கு அறிந்து கொண்டேன். தெரியாமல் செய்த குற்றம். மன்னித்து விடுங்கள். நான் இப்போது இங்கு வந்தது வேறு காரியமாய். அது இரகசியம். நீங்களே அதைக் கட்டாயம் அறிதல் வேண்டும்" என விண்ணப்பித்துக் கொண்டாள்.

'சரி, உன் இரகசியத்தைக் கூறு" என்றாள் தேவி அலட்சியமாக.. தேவியின் கண்ணில் தெரிந்த அலட்சியத்தை அவதானித்த வடிவழகி, அங்கும் இங்கும் பார்த்து விட்டு 'தேவி! அரசருக்கு எதிராக பல சூழ்ச்சிகள் நடக்கின்றன. அவரை மிகவும் கவனமாக இருக்கச் சொல்லுங்கள். அவர் நலனுக்காக பாடுபடுவோர் போல பலர் வெளியில் காட்டித்திரிகிறார்கள். அவர்களை நம்பவேண்டாம். படு மோசம் பண்ணி விடுவார்கள்" என எச்சரித்தாள்.

சூழ்ச்சி மகாராஜாவிற்கு எதிராக என வடிவழகி கூறியவுடன் பதற்றமடைந்த தேவி சிறிது நிதானித்துக் கொண்டு, மிகக் கவனமாய் எழுந்து சென்று வடிவழகியின் கையைப் பிடித்து அழைத்து வந்து இருக்கையொன்றில் இருத்தி 'பயப்படாதே! ஏன் அப்படிச் சொல்கிறாய்? இந்த வஞ்சகச் சூழ்ச்சிகள் பற்றி உனக்கு ஏதோனும் தெரியுமோ? அஞ்சாமற் சொல்லு. உனக்கு நான் பாதுகாப்புத் தருகின்றேன்" என்றாள்.

'ஆம் தேவி! எல்லாமே எங்கள் வீட்டில் தான் நடக்கின்றது."
'அப்படியோ?"
'தேவி, உங்களை மன்றாடிக் கேட்டுக்கொள்கின்றேன். நான் இங்கு வந்தது ஒருவருக்கும் தெரியக் கூடாது. என்னைக் கடுங்காவலில் வைத்திருக்கிறார்கள். என்றாலும் ஒருவகையாகத் தப்பி வந்தேன். நான் வந்ததை அவர்கள் அறிந்தால் என் உயிருக்கே ஆபத்து."
'தெரியும். ஒன்றுக்கும் பயப்படாதே! உனக்குத் துணையாக நான் நிற்கின்றேன்" என ஆதரவாக அவள் தோளில் தட்டினாள் தேவி.
'தேவி! நான் இனி இங்கு நிற்க முடியாது. நேரமாகின்றது. வீட்டுக்குப் போய்ச்சேர வேண்டும்" என அவசரப்பட்டாள் வடிவு.
'சரி, அங்கயற்கன்னி... வடிவழகியை கவனமாக மாளிகையின் பின் பக்கக் கதவால் கொண்டு சென்று, அவள் வீட்டுப் பூந்தோட்ட வாயில் வரை சென்று விட்டு வா. ஒருவருக்கும் தெரியாமல் இருவரும் கவனமாகப் போங்கள்" எனக் கூறினாள்.

அவர்கள் சென்றதும், இராசமாதேவி ஆழந்த எண்ணத்தோடு அங்குமிங்கும் உலாவினாள். சிறிது நேரத்தில் அங்கயற்கன்னி திரும்பி வந்தாள்.
'என்ன தோழி! அதற்குள் திரும்பி வந்து விட்டாய். வடிவு எங்கே?"
'அவளைத் தக்க துணையுடன் அனுப்பி விட்டேன்".
'யாருடன்?"
'மன்னரின் தோழர் மாப்பாணனுடன்..."
'அவரை உனக்கெப்படி தெரியும்?"
பதில் கூற முடியாது வெட்கத்தில் தோழியின் கன்னம் சிவந்தது.
'அடி கள்ளி! எனக்குத் தெரியாமற் போய் விட்டதே. பரவாயில்லை. ஆனால் நாம் வடிவழகியைப் பற்றி எண்ணியவையெல்லாம் பிழையாகப் போய்விட்டது. அவள் மிகவும் நல்லவள்" என்றார் தேவி.
'நானும் அப்படித் தான் எண்ணுகின்றேன்" என்றாள் தோழி.

சங்கிலிக்கு எதிராக நடக்கும் சூழ்ச்சி பற்றி சங்கிலிக்கு தெரிவித்து உஷார் படுத்த முன்னமே, ஆபத்து கோட்டைக்குள் வந்து விட்டது.

சாதிக்க வருவான்...

0 comments:

Post a Comment