Pages

Thursday, July 1, 2010

சரித்திரவீரன் சங்கிலி (பாகம் 22 பதினொராம் நாட்போர்)

யாழ்ப்பாணத்தை ஆண்ட அரசன் சங்கிலியின் வரலாற்றை கற்பனையுடன் கூறும் தொடர்கதை இது. கடந்த ஆறு மாதம் இதனுடன் பயணித்த நீங்கள், இன்னும் சிறிது காலம் பயணிப்பீர்கள் என நம்புகின்றேன். சங்கிலி வரலாறு பற்றி மேலதிகமாகத் தெரிந்தவர்கள் அவற்றை தந்து உதவினால் நல்லது என நினைக்கின்றேன்.
பாகம் 22 - பதினொராம் நாட்போர்

பதினொராம் நாட்போரில் கிடைக்கவிருக்கும் முடிவை அறிய பகலவனும் கீழ்த்திசையில் ஆவலுடன் உதித்தான். போருக்காக, சங்கிலி படையில் கடுங்காயமுற்றவர்கள் ஓய்வெடுத்தார்கள். சிறு காயங்களுக்கு உள்ளானவர்கள் போர்க்களத்திற்கு வர சிறு பிள்ளை போல அடம்பிடித்தார்கள். இதனைக் கண்ணுற்ற சங்கிலி பெரிதும் வியந்தான். ஆனந்தக் கண்ணீர் வடித்தான்.

தன் படை வீரரில் சிறந்த நானூறு பேரைத் தெரிவு செய்து அவர்களை படையணிவகுப்பின் முன் நிறுத்தி, அவர்களை தானே முன்னின்று வழி நடத்திச் சென்றான். எஞ்சியவர்களை தளபதி இமையாணன் வழிநடத்திச் சென்றான். சங்கிலி படையில், பரநிருபசிங்கனும் சில மந்திரிகளும் போரில் எதுவித சிரத்தையையும் காட்டாததை அவதானித்த சங்கிலி,
“ஏன் அண்ணா! போர் உங்களுக்கு பிடிக்கவில்லை போலிருக்கின்றதே” என்றான். அவன் இகழ்ச்சிச் சொற்களை பரநிருபசிங்கன் அவதானித்தாலும்
“பறங்கியர்களது யுத்த முறை புதிதாக இருக்கின்றது. அதனால் திகைத்து விட்டேன்” என்றான்.
“உங்கள் வீரத்திறன் நன்றாக இருக்கின்றதே, இப்படிச் சொல்ல உங்களுக்கு வெட்கமில்லையா?” என்று கேட்டான். அத்துடன் “இனி எதற்கும் அஞ்சாதீர்கள். எல்லாவற்றுக்கும் நானிருக்கின்றேன். போரை தைரியத்துடன் எதிர் கொள்ளுங்கள். எம் வீரர்களையும் உற்சாகப்படுத்துங்கள்” என்று கூறிச் சென்றான்.

பதினொராம் நாள் போரும் ஆரம்பித்தது. பறங்கிகள் தம் போர் முறையை மாற்றினார்கள். இனி துப்பாக்கிக் குண்டுகள் பயனில்லை எனத் தெரிந்ததும், வாட்போருக்கு ஆயத்தமாகி நின்றார்கள். சிறப்பாக வாள், வில் போர்களுக்கு பயிற்சி பெற்ற சங்கிலி வீரர்களுக்கு இது வசதியாகப் போய்விட்டது. சங்கிலி ஒரு சிறுபடையுடன் பறங்கிகள் படையை ஊடறுத்துச் சென்று அவர்கள் பகுதியில் நின்று போரிட்டான். அவன் துணிச்சலைக் கண்ட பலரும் வியந்தனர். கண்ணிமைக்கும் நேரத்தில் பல பறங்கி வீரர்கள் தலைகள் தரையில் உருண்டன. சங்கிலியின் நீண்ட வாள் இரத்தத்தில் தோய்ந்திருந்தது. சங்கிலி படைக்குள் ஊடுறுவ எத்தணித்த பறங்கி வீரர்களை இமையாணன் தலைமையிலான படை வழிமறித்துத் தாக்கியது. இதிலும் பல பறங்கி வீரர்கள் மாண்டார்கள்.

இந்த நேரத்தில் எங்கிருந்தோ பாய்ந்து வந்த ஈட்டியொன்று சங்கிலியின் வலது தோற்பட்டையில் தைத்தது. அதனை இலகுவாகப் பிடிங்கி எறிந்து விட்டு வாளை இடது கைக்கு மாற்றிப் போரிட்டான். வலது கையிலிருந்து வெளியேறிய குருதியால் களைப்புற்று மயக்கமாகிய சங்கிலி குதிரையில் சாய்ந்தான். நன்றாக பழக்கப்பட்டிருந்த சங்கிலியின் குதிரையான பஞ்சகல்யாணி அவனைப் பத்திரமாகப் படை மத்தியில் இருந்து பாதுகாப்பாக அவனது பாசறைக்கு கொண்டு வந்து சேர்த்தது. அங்கு வைத்தியர்கள் சங்கிலிக்கு பச்சிலை வைத்துக் கட்டுப்போட்டார்கள்.

சங்கிலி இல்லாத படையின் வழி நடத்தும் பொறுப்பை, இமையாணன் முற்றாக எடுத்துக் கொண்டான். வீரமாப்பாணனும் அவனுக்கு உதவி புரிந்தான். சங்கிலி படைவீரர்கள் புலியெனப் பாய்ந்து பறங்கி படைவீரர்களை வெட்டிச் சாய்த்தனர். இதனால் பயந்த பறங்கியர்கள், இனி போரிடுவதில் பயனில்லையென அறிந்து பின்வாங்க முற்பட்டனர். அச்சமயம் தரங்கம் பாடியிலிருந்து பறங்கிகளுக்கு துணைப்படையொன்று வந்து சேர்ந்தது. அதனால் உற்சாகமடைந்த பறங்கி வீரர்கள் போர்களத்திற்கு பக்கத்தே இருமருங்கும் உள்ள காடுகளில் மறைந்திருந்து துப்பாக்கியால் சரமாரியாக குண்டுகளைப் பொழிந்தனர். இதனை சற்றும் எதிர்பாராத சங்கிலி படை முதலில் திணறினாலும் பின்னர் சமாளித்துக் கொண்டு போரிட்டனர். அதுவும் சங்கிலி முழுப்பலத்துடன் போர்க்களத்திற்கு திரும்பி வந்ததைக் கண்டதும் உற்சாகமானார்கள். இரு மருங்கும் மறைந்திருந்து போரிட்ட வீரர்களை நோக்கி கவண்கல்லை மழையாக பொழிந்தனர். இதனால் திணறிய பறங்கி வீரர்கள் சுதாகரிப்பதற்குள் அவர்களை வெட்டிச் சாய்த்தனர்.

இதேசமயம் போர்க்களத்தின் மத்தியில் சங்கிலிக்கும் பறங்கி கோட்டைத் தலைவன் தொன்பிலிப்புக்கும் இடையில் உச்சக்கட்ட சண்டை நடைபெற்றது. இருவரது வாளும் பெரும் சத்தத்துடன் உராந்தன. நீண்ட நேர போராட்டத்தின் பின் சங்கிலியின் வாள் அவன் மார்பில் பாய்ந்தது. ஏற்கனவே பாரிய இழப்பைக் கண்டிருந்த பறங்கிய வீரர்கள், தலைவனை இழந்ததும் புறமுதுகிட்டு ஓடினார்கள். தாங்க முடியாத ஆத்திரத்தை பறங்கி வீரர்கள் மீது கொண்டிருந்த சங்கிலி வீரர்கள், அவர்களைத் துரத்தித் துரத்தி வெட்டினார்கள். பறங்கிகள் காட்டில் ஓடி மறைந்தார்கள். அவர்களைத் தொடர்ந்த சங்கலி வீரர்கள் பறங்கிகளது கோட்டையை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர்.

கோபாவேசத்தில் சென்ற சங்கிலியின் வீரர்கள் அங்கிருந்த பறங்கிப் பெண்களிடம் சேஷ்டை புரிய முற்பாட்டார்கள். அச்சமயம் அங்கு வந்த சங்கிலி “வீரர்களே! எமக்குத் தேவை வெற்றி, அது கிடைத்து விட்டது. இனி வன்முறை தேவையில்லை. இங்கிருக்கும் பெண்களும், குழந்தைகளும், வயோதிபர்களும் எதுவித பாவமும் செய்யாதவர்கள். அவர்களைத் தண்டிப்பது தகாத செயலாகும். எனவே அவர்களை பாதுகாப்பாக மரக்கலங்களில் ஏற்றி அவர்கள் இடங்களுக்கு அனுப்புவதற்கு நடவடிக்கைகளை மேற்கொள்ளுங்கள். இங்குள்ள திரவியங்களை ஏற்றி நம் கோட்டைக்கு அனுப்புங்கள்” எனக் கூறினான்.

சங்கிலி சொற்படியே சகலவற்றையும் நிறைவேற்றி முடித்த வீரர்கள் மீண்டும் நல்லூர் கோட்டை நோக்கி செல்ல ஆயத்தமானார்கள்.

சாதிக்க வருவான்…

2 comments:

Anonymous said...

good..

Unknown said...

i have just visit this site .
nice varo keep it up

Post a Comment