Pages

Sunday, July 11, 2010

சரித்திரவீரன் சங்கிலி (பாகம் 23 – வெற்றி வேள்வி)

இன்று முதல் சிலர் புதிதாக இந்த வலைத்தளத்தை பின்தொடரக்கூடும். எனவே சங்கிலியன் தொடர்பற்றிய ஐயப்பாடுகள் இருப்பின், எதற்கும் ஒருமுறை முகவுரையை படித்து விட்டு கேள்விகளைத் தொடருங்கள். உங்களிடமிருந்து தொடர்பற்றிய ஆக்க பூர்வமான விமர்சனங்களை எதிர்பார்க்கின்றேன்.

அரசமாளிகையில் இராசமாதேவியும் அங்கயற்கன்னியும் பேசிக்கொள்கிறார்கள், “அரசர் போருக்குச் சென்று பதினொரு நாட்கள் ஆகிவிட்டது. இன்னும் ஒரு செய்தியையும் காணவில்லை. முதன் மந்திரி தனிநாயக முதலிக்கு கூட ஒரு செய்தியும் வரவில்லை” என கவலையுடன் மாதேவி கூறினாள்.
“அவர்கள் நிச்சயம் திரும்பி வந்து விடுவார்கள்” என தோழி ஆறுதல் கூறினாள். அப்போது வாயிற்காவலன் உள்ளே வந்து “தேவி வணக்கம்! போர்க்களத்திலிருந்து தூதன் வந்திருக்கின்றான்” எனத் தெரிவித்தான்.

மகிழ்ச்சியில் துள்ளியெழுந்த தேவி “உடனே அவனை வரச்சொல்” எனக் கூறினாள். உள் வந்த தூதனிடம் “சண்டையின் முடிவு என்ன? எங்களுக்கு வெற்றி தானே?” எனப் பரபரப்புடன் வினவினாள்.
“எங்கள் மகாராசா போருக்குச் சென்றிருக்கும் போது, அதனைக் கூறவும் வேண்டுமோ?” என தூதன் சிலாகித்தான். இதனால் பெரிதும் மகிழ்ந்த தேவி “சற்று விபரமாகத் தான் கூறேன்” என்றாள்.
“தாயே! போரில் தோற்ற பறங்கிகள் கோட்டையை விட்டும் ஓடிவிட்டார்கள். கைப்பற்றிய பொருட்களுடன் சங்கிலி மன்னன் தலைமையிலான எங்கள் படை தற்போது அரண்மனை நோக்கி வந்து கொண்டிருக்கின்றது. இந்த செய்தியை உடனே தங்களிடம் தெரிவித்து வரும்படி மன்னர் தான் என்னை அனுப்பி வைத்தார். மக்களெல்லோரும் வெற்றிப் படையை வரவேற்க வீதியோரமெங்கும் குழுமியிருக்கிறார்கள். நீண்ட நேரமாகின்றது. மன்னர் இப்போது நகர எல்லைக்குள் வந்திருப்பார். நான் வரும்போதே முதன் மந்திரி, அரசரை எதிர்கொண்டு அழைத்து வருகின்றார்” என்றான்.
“அப்படியா! நல்லது. நீ சென்று வா!” எனக் கூறிய தேவி, தோழியைப் பார்த்து “மன்னரை வரவேற்பதற்கான ஆயத்தங்களை செய்” என ஆணையிட்டாள்.

யாழ் நகர வீதியெங்கும் மங்கள வாத்தியங்களுடனும், பூமாரியுடனும் வரவழைக்கப்பட்ட சங்கிலி, அரண்மனையை வந்தடைந்தான். அங்கு மாதேவி மங்கள ஆராத்தி எடுத்து சங்கிலியை வரவேற்றாள். அரசனைத் தொடர்ந்து இமையாணனும், மாப்பாணனும், தனிநாயக முதலியும் வேறு சில அமைச்சர்களும் பிரதான மண்டபத்தினுள் வந்தமர்ந்தனர். போர் வீரர்கள் தங்கள் தங்கள் இடங்களுக்குச் சென்றார்கள்.
“தங்களுக்கு வெற்றி கிடைக்கும் என்று எங்களுக்கு முன்னமே தெரிந்து விட்டது. வீரகாளியம்மன் எனக்கு பூ மூலம் காட்டிவிட்டாள்” என மகிழ்ச்சியுடன் தேவி கூறினாள்.
அன்புடன் அவளைப்பார்த்து புன்னகைத்த சங்கிலி “இந்த வெற்றி குறித்து வழக்கம் போல வீரகாளியம்மனுக்கு வேள்வி செய்ய வேண்டும். அதற்கான ஒழுங்குகளை செய்ய மறந்து விடக்கூடாது. தெரிகின்றதோ?” என முதன் மந்திரியை பார்த்துக் கூறினான். “ஓம் ஓம், இப்போதே போய் அதற்கான ஏற்பாடுகளைக் கவனிக்கின்றேன்” என்றார். அதற்கான ஏற்பாடுகளும் தடல் புடலாக இடம்பெற்றன.

ஓய்வு நேரமொன்றில் நண்பன் மாப்பாணனுடன் இருந்த சங்கிலி, “நண்பா! எல்லாம் செவ்வனே முடிந்து விட்டன. ஆனால் வடிவழகியைப் பற்றி நினைக்கும் போது தான் கவலையாக இருக்கின்றது. இனி அவளைச் சந்திப்பதென்பது முடியாத காரியம் போலிருக்கின்றதே! தேவி மிகவும் கவனமாய் இருப்பாள்” என்றான்.
“கஷ்டம் தான்”, என்றான் நண்பன்.
“நான் வடிவழகியுடன் காதல் கொண்டேன் என்ற செய்தியை இப்போது மறந்திருப்பாளோ?”
“மறந்திருக்க மாட்டார். பார்க்கின்ற அளவில் உங்களை அவர் மன்னித்து விட்டார் போலிருக்கின்றது. தேவி பெருங்குணம் படைத்தவர் என்பது உங்களுக்கு தெரியும் தானே!”
“ம்ம்… அது இருக்கட்டும். என்னால் வடிவழகியைச் சந்திக்காமல் இருக்கவும் முடியாது. தேவி கட்டளையை மீறி அவள் மனதை புண்படுத்தவும் முடியாது. இதனால் பெரும் அவஸ்தையில் சிக்கியிருக்கின்றேன். இதற்கு என்ன செய்யலாம் கூறு”
“செய்கின்றதென்ன…. ஒரு வழியாக தேவிக்கு இதனைத் தெரியப்படுத்துவது தான் தகும்”
“முடியுமா?”
“முயற்சி பண்ண வேண்டும்”
“எப்படி?”
“தேவியின் தோழி அங்கயக்கன்னியால் தான் இது ஆகவேண்டும். நான் அவளிடம் கூறி ஏதாவது முயன்று பார்க்கின்றேன்”
“தோழனுக்கு தோழி மேல் பிரியமோ” என்று கூறிச் சிரித்தான் சங்கிலி, இதனால் பெரிதும் வெட்கமுற்ற மாப்பாணன் பதில் கூறாது அங்கிருந்து வெளியேறிச் சென்றான். மனப்பாரம் பெரிதும் இறங்கிய சங்கிலி, பஞ்சணையில் புரண்டான். நித்திரை அவனை நன்றாகவே ஆட்கொண்டது.

திட்டமிட்டபடியே வீரகாளியம்மனது வேள்வி ஆரம்பமாகியது. போரில் பங்கு கொண்ட வீரர்களது ஊதியங்கள் இரு மடங்காக உயர்த்தப்பட்டதால் வீரர்கள் பெருஞ் சந்தோஷத்துடன் வேள்வியில் குடும்பங்களுடன் பங்கேற்றனர். போட்டி போட்டுக்கொண்டு வீரர்கள் வேள்விக்கான ஆயத்தங்களில் ஈடுபட்டதால் அவர்களுக்கிடையே சிற்சில கைகலப்புக்களும் உருவாகின. இதனைச் சங்கிலியும், தளபதியும் பூஜையில் கலந்து கொண்டதால் கவனிக்க முடியாது போயிற்று. சம்பவத்தை ஒரு வீரன் சங்கிலிக்கு தெரிவிக்கவே, கோபமாக எழுந்து வந்த சங்கிலி “இதற்காகவா நாம் வேள்வி நடத்துகின்றோம். நாட்டு மக்கள் எந்த கெடுதல்களுக்கும் ஆளாகமால் சந்தோஷமாக இருக்க வேண்டும் என நினைத்து வேள்வி நடத்தும் போது, நீங்களே சண்டை பிடிக்கலாமா? இதுவா நீங்கள் எனக்குத் தரும் மரியாதை? உங்கள் பாசம் புரிகின்றது. அதற்கு இப்படியா நம்முள் அடித்துக் கொள்வது? அதற்குரிய இடமா இது? இன்று இந்த வேள்வியைத் தொடர்வது மனக்கஷ்டத்தைத் தரும். ஆகவே வேள்வி நாளை தொடரும். நீங்கள் பக்தியுடனும் சகோதரத்துவத்துடனும் அதில் கலந்து கொள்ளுங்கள்” எனக் கூறிவிட்டு அரண்மனை சென்றான்.

ஆவலுடன் ஏற்பாடாகியிருந்த வேள்வி தடைப்பட்டதால் பெரிதும் மனக்கஷ்டமடைந்த வீரர்கள் தங்கள் அறியாமைக்காக வருந்தி மறுநாள் சிரத்தையுடன் வேள்வியில் கலந்து கொண்டார்கள். யாழ்ப்பாணமெங்கும் மக்கள் மிகுந்த சந்தோஷத்துடன் காணப்பட்டனர். அரண்மனையிலும் அப்படித்தான். மிகுந்த சந்தோஷத்துடன் அரண்மனையிலிருந்த இராசமாதேவிக்கு வீரன் ஒருவன் கொண்டு வந்த செய்தி துக்கத்தையும் ஆவேசத்தையும் உண்டு பண்ணியது.

சாதிக்க வருவான்…

0 comments:

Post a Comment