Pages

Sunday, July 11, 2010

சரித்திரவீரன் சங்கிலி (பாகம் 23 – வெற்றி வேள்வி)

இன்று முதல் சிலர் புதிதாக இந்த வலைத்தளத்தை பின்தொடரக்கூடும். எனவே சங்கிலியன் தொடர்பற்றிய ஐயப்பாடுகள் இருப்பின், எதற்கும் ஒருமுறை முகவுரையை படித்து விட்டு கேள்விகளைத் தொடருங்கள். உங்களிடமிருந்து தொடர்பற்றிய ஆக்க பூர்வமான விமர்சனங்களை எதிர்பார்க்கின்றேன்.

அரசமாளிகையில் இராசமாதேவியும் அங்கயற்கன்னியும் பேசிக்கொள்கிறார்கள், “அரசர் போருக்குச் சென்று பதினொரு நாட்கள் ஆகிவிட்டது. இன்னும் ஒரு செய்தியையும் காணவில்லை. முதன் மந்திரி தனிநாயக முதலிக்கு கூட ஒரு செய்தியும் வரவில்லை” என கவலையுடன் மாதேவி கூறினாள்.
“அவர்கள் நிச்சயம் திரும்பி வந்து விடுவார்கள்” என தோழி ஆறுதல் கூறினாள். அப்போது வாயிற்காவலன் உள்ளே வந்து “தேவி வணக்கம்! போர்க்களத்திலிருந்து தூதன் வந்திருக்கின்றான்” எனத் தெரிவித்தான்.

மகிழ்ச்சியில் துள்ளியெழுந்த தேவி “உடனே அவனை வரச்சொல்” எனக் கூறினாள். உள் வந்த தூதனிடம் “சண்டையின் முடிவு என்ன? எங்களுக்கு வெற்றி தானே?” எனப் பரபரப்புடன் வினவினாள்.
“எங்கள் மகாராசா போருக்குச் சென்றிருக்கும் போது, அதனைக் கூறவும் வேண்டுமோ?” என தூதன் சிலாகித்தான். இதனால் பெரிதும் மகிழ்ந்த தேவி “சற்று விபரமாகத் தான் கூறேன்” என்றாள்.
“தாயே! போரில் தோற்ற பறங்கிகள் கோட்டையை விட்டும் ஓடிவிட்டார்கள். கைப்பற்றிய பொருட்களுடன் சங்கிலி மன்னன் தலைமையிலான எங்கள் படை தற்போது அரண்மனை நோக்கி வந்து கொண்டிருக்கின்றது. இந்த செய்தியை உடனே தங்களிடம் தெரிவித்து வரும்படி மன்னர் தான் என்னை அனுப்பி வைத்தார். மக்களெல்லோரும் வெற்றிப் படையை வரவேற்க வீதியோரமெங்கும் குழுமியிருக்கிறார்கள். நீண்ட நேரமாகின்றது. மன்னர் இப்போது நகர எல்லைக்குள் வந்திருப்பார். நான் வரும்போதே முதன் மந்திரி, அரசரை எதிர்கொண்டு அழைத்து வருகின்றார்” என்றான்.
“அப்படியா! நல்லது. நீ சென்று வா!” எனக் கூறிய தேவி, தோழியைப் பார்த்து “மன்னரை வரவேற்பதற்கான ஆயத்தங்களை செய்” என ஆணையிட்டாள்.

யாழ் நகர வீதியெங்கும் மங்கள வாத்தியங்களுடனும், பூமாரியுடனும் வரவழைக்கப்பட்ட சங்கிலி, அரண்மனையை வந்தடைந்தான். அங்கு மாதேவி மங்கள ஆராத்தி எடுத்து சங்கிலியை வரவேற்றாள். அரசனைத் தொடர்ந்து இமையாணனும், மாப்பாணனும், தனிநாயக முதலியும் வேறு சில அமைச்சர்களும் பிரதான மண்டபத்தினுள் வந்தமர்ந்தனர். போர் வீரர்கள் தங்கள் தங்கள் இடங்களுக்குச் சென்றார்கள்.
“தங்களுக்கு வெற்றி கிடைக்கும் என்று எங்களுக்கு முன்னமே தெரிந்து விட்டது. வீரகாளியம்மன் எனக்கு பூ மூலம் காட்டிவிட்டாள்” என மகிழ்ச்சியுடன் தேவி கூறினாள்.
அன்புடன் அவளைப்பார்த்து புன்னகைத்த சங்கிலி “இந்த வெற்றி குறித்து வழக்கம் போல வீரகாளியம்மனுக்கு வேள்வி செய்ய வேண்டும். அதற்கான ஒழுங்குகளை செய்ய மறந்து விடக்கூடாது. தெரிகின்றதோ?” என முதன் மந்திரியை பார்த்துக் கூறினான். “ஓம் ஓம், இப்போதே போய் அதற்கான ஏற்பாடுகளைக் கவனிக்கின்றேன்” என்றார். அதற்கான ஏற்பாடுகளும் தடல் புடலாக இடம்பெற்றன.

ஓய்வு நேரமொன்றில் நண்பன் மாப்பாணனுடன் இருந்த சங்கிலி, “நண்பா! எல்லாம் செவ்வனே முடிந்து விட்டன. ஆனால் வடிவழகியைப் பற்றி நினைக்கும் போது தான் கவலையாக இருக்கின்றது. இனி அவளைச் சந்திப்பதென்பது முடியாத காரியம் போலிருக்கின்றதே! தேவி மிகவும் கவனமாய் இருப்பாள்” என்றான்.
“கஷ்டம் தான்”, என்றான் நண்பன்.
“நான் வடிவழகியுடன் காதல் கொண்டேன் என்ற செய்தியை இப்போது மறந்திருப்பாளோ?”
“மறந்திருக்க மாட்டார். பார்க்கின்ற அளவில் உங்களை அவர் மன்னித்து விட்டார் போலிருக்கின்றது. தேவி பெருங்குணம் படைத்தவர் என்பது உங்களுக்கு தெரியும் தானே!”
“ம்ம்… அது இருக்கட்டும். என்னால் வடிவழகியைச் சந்திக்காமல் இருக்கவும் முடியாது. தேவி கட்டளையை மீறி அவள் மனதை புண்படுத்தவும் முடியாது. இதனால் பெரும் அவஸ்தையில் சிக்கியிருக்கின்றேன். இதற்கு என்ன செய்யலாம் கூறு”
“செய்கின்றதென்ன…. ஒரு வழியாக தேவிக்கு இதனைத் தெரியப்படுத்துவது தான் தகும்”
“முடியுமா?”
“முயற்சி பண்ண வேண்டும்”
“எப்படி?”
“தேவியின் தோழி அங்கயக்கன்னியால் தான் இது ஆகவேண்டும். நான் அவளிடம் கூறி ஏதாவது முயன்று பார்க்கின்றேன்”
“தோழனுக்கு தோழி மேல் பிரியமோ” என்று கூறிச் சிரித்தான் சங்கிலி, இதனால் பெரிதும் வெட்கமுற்ற மாப்பாணன் பதில் கூறாது அங்கிருந்து வெளியேறிச் சென்றான். மனப்பாரம் பெரிதும் இறங்கிய சங்கிலி, பஞ்சணையில் புரண்டான். நித்திரை அவனை நன்றாகவே ஆட்கொண்டது.

திட்டமிட்டபடியே வீரகாளியம்மனது வேள்வி ஆரம்பமாகியது. போரில் பங்கு கொண்ட வீரர்களது ஊதியங்கள் இரு மடங்காக உயர்த்தப்பட்டதால் வீரர்கள் பெருஞ் சந்தோஷத்துடன் வேள்வியில் குடும்பங்களுடன் பங்கேற்றனர். போட்டி போட்டுக்கொண்டு வீரர்கள் வேள்விக்கான ஆயத்தங்களில் ஈடுபட்டதால் அவர்களுக்கிடையே சிற்சில கைகலப்புக்களும் உருவாகின. இதனைச் சங்கிலியும், தளபதியும் பூஜையில் கலந்து கொண்டதால் கவனிக்க முடியாது போயிற்று. சம்பவத்தை ஒரு வீரன் சங்கிலிக்கு தெரிவிக்கவே, கோபமாக எழுந்து வந்த சங்கிலி “இதற்காகவா நாம் வேள்வி நடத்துகின்றோம். நாட்டு மக்கள் எந்த கெடுதல்களுக்கும் ஆளாகமால் சந்தோஷமாக இருக்க வேண்டும் என நினைத்து வேள்வி நடத்தும் போது, நீங்களே சண்டை பிடிக்கலாமா? இதுவா நீங்கள் எனக்குத் தரும் மரியாதை? உங்கள் பாசம் புரிகின்றது. அதற்கு இப்படியா நம்முள் அடித்துக் கொள்வது? அதற்குரிய இடமா இது? இன்று இந்த வேள்வியைத் தொடர்வது மனக்கஷ்டத்தைத் தரும். ஆகவே வேள்வி நாளை தொடரும். நீங்கள் பக்தியுடனும் சகோதரத்துவத்துடனும் அதில் கலந்து கொள்ளுங்கள்” எனக் கூறிவிட்டு அரண்மனை சென்றான்.

ஆவலுடன் ஏற்பாடாகியிருந்த வேள்வி தடைப்பட்டதால் பெரிதும் மனக்கஷ்டமடைந்த வீரர்கள் தங்கள் அறியாமைக்காக வருந்தி மறுநாள் சிரத்தையுடன் வேள்வியில் கலந்து கொண்டார்கள். யாழ்ப்பாணமெங்கும் மக்கள் மிகுந்த சந்தோஷத்துடன் காணப்பட்டனர். அரண்மனையிலும் அப்படித்தான். மிகுந்த சந்தோஷத்துடன் அரண்மனையிலிருந்த இராசமாதேவிக்கு வீரன் ஒருவன் கொண்டு வந்த செய்தி துக்கத்தையும் ஆவேசத்தையும் உண்டு பண்ணியது.

சாதிக்க வருவான்…

Thursday, July 1, 2010

சரித்திரவீரன் சங்கிலி (பாகம் 22 பதினொராம் நாட்போர்)

யாழ்ப்பாணத்தை ஆண்ட அரசன் சங்கிலியின் வரலாற்றை கற்பனையுடன் கூறும் தொடர்கதை இது. கடந்த ஆறு மாதம் இதனுடன் பயணித்த நீங்கள், இன்னும் சிறிது காலம் பயணிப்பீர்கள் என நம்புகின்றேன். சங்கிலி வரலாறு பற்றி மேலதிகமாகத் தெரிந்தவர்கள் அவற்றை தந்து உதவினால் நல்லது என நினைக்கின்றேன்.
பாகம் 22 - பதினொராம் நாட்போர்

பதினொராம் நாட்போரில் கிடைக்கவிருக்கும் முடிவை அறிய பகலவனும் கீழ்த்திசையில் ஆவலுடன் உதித்தான். போருக்காக, சங்கிலி படையில் கடுங்காயமுற்றவர்கள் ஓய்வெடுத்தார்கள். சிறு காயங்களுக்கு உள்ளானவர்கள் போர்க்களத்திற்கு வர சிறு பிள்ளை போல அடம்பிடித்தார்கள். இதனைக் கண்ணுற்ற சங்கிலி பெரிதும் வியந்தான். ஆனந்தக் கண்ணீர் வடித்தான்.

தன் படை வீரரில் சிறந்த நானூறு பேரைத் தெரிவு செய்து அவர்களை படையணிவகுப்பின் முன் நிறுத்தி, அவர்களை தானே முன்னின்று வழி நடத்திச் சென்றான். எஞ்சியவர்களை தளபதி இமையாணன் வழிநடத்திச் சென்றான். சங்கிலி படையில், பரநிருபசிங்கனும் சில மந்திரிகளும் போரில் எதுவித சிரத்தையையும் காட்டாததை அவதானித்த சங்கிலி,
“ஏன் அண்ணா! போர் உங்களுக்கு பிடிக்கவில்லை போலிருக்கின்றதே” என்றான். அவன் இகழ்ச்சிச் சொற்களை பரநிருபசிங்கன் அவதானித்தாலும்
“பறங்கியர்களது யுத்த முறை புதிதாக இருக்கின்றது. அதனால் திகைத்து விட்டேன்” என்றான்.
“உங்கள் வீரத்திறன் நன்றாக இருக்கின்றதே, இப்படிச் சொல்ல உங்களுக்கு வெட்கமில்லையா?” என்று கேட்டான். அத்துடன் “இனி எதற்கும் அஞ்சாதீர்கள். எல்லாவற்றுக்கும் நானிருக்கின்றேன். போரை தைரியத்துடன் எதிர் கொள்ளுங்கள். எம் வீரர்களையும் உற்சாகப்படுத்துங்கள்” என்று கூறிச் சென்றான்.

பதினொராம் நாள் போரும் ஆரம்பித்தது. பறங்கிகள் தம் போர் முறையை மாற்றினார்கள். இனி துப்பாக்கிக் குண்டுகள் பயனில்லை எனத் தெரிந்ததும், வாட்போருக்கு ஆயத்தமாகி நின்றார்கள். சிறப்பாக வாள், வில் போர்களுக்கு பயிற்சி பெற்ற சங்கிலி வீரர்களுக்கு இது வசதியாகப் போய்விட்டது. சங்கிலி ஒரு சிறுபடையுடன் பறங்கிகள் படையை ஊடறுத்துச் சென்று அவர்கள் பகுதியில் நின்று போரிட்டான். அவன் துணிச்சலைக் கண்ட பலரும் வியந்தனர். கண்ணிமைக்கும் நேரத்தில் பல பறங்கி வீரர்கள் தலைகள் தரையில் உருண்டன. சங்கிலியின் நீண்ட வாள் இரத்தத்தில் தோய்ந்திருந்தது. சங்கிலி படைக்குள் ஊடுறுவ எத்தணித்த பறங்கி வீரர்களை இமையாணன் தலைமையிலான படை வழிமறித்துத் தாக்கியது. இதிலும் பல பறங்கி வீரர்கள் மாண்டார்கள்.

இந்த நேரத்தில் எங்கிருந்தோ பாய்ந்து வந்த ஈட்டியொன்று சங்கிலியின் வலது தோற்பட்டையில் தைத்தது. அதனை இலகுவாகப் பிடிங்கி எறிந்து விட்டு வாளை இடது கைக்கு மாற்றிப் போரிட்டான். வலது கையிலிருந்து வெளியேறிய குருதியால் களைப்புற்று மயக்கமாகிய சங்கிலி குதிரையில் சாய்ந்தான். நன்றாக பழக்கப்பட்டிருந்த சங்கிலியின் குதிரையான பஞ்சகல்யாணி அவனைப் பத்திரமாகப் படை மத்தியில் இருந்து பாதுகாப்பாக அவனது பாசறைக்கு கொண்டு வந்து சேர்த்தது. அங்கு வைத்தியர்கள் சங்கிலிக்கு பச்சிலை வைத்துக் கட்டுப்போட்டார்கள்.

சங்கிலி இல்லாத படையின் வழி நடத்தும் பொறுப்பை, இமையாணன் முற்றாக எடுத்துக் கொண்டான். வீரமாப்பாணனும் அவனுக்கு உதவி புரிந்தான். சங்கிலி படைவீரர்கள் புலியெனப் பாய்ந்து பறங்கி படைவீரர்களை வெட்டிச் சாய்த்தனர். இதனால் பயந்த பறங்கியர்கள், இனி போரிடுவதில் பயனில்லையென அறிந்து பின்வாங்க முற்பட்டனர். அச்சமயம் தரங்கம் பாடியிலிருந்து பறங்கிகளுக்கு துணைப்படையொன்று வந்து சேர்ந்தது. அதனால் உற்சாகமடைந்த பறங்கி வீரர்கள் போர்களத்திற்கு பக்கத்தே இருமருங்கும் உள்ள காடுகளில் மறைந்திருந்து துப்பாக்கியால் சரமாரியாக குண்டுகளைப் பொழிந்தனர். இதனை சற்றும் எதிர்பாராத சங்கிலி படை முதலில் திணறினாலும் பின்னர் சமாளித்துக் கொண்டு போரிட்டனர். அதுவும் சங்கிலி முழுப்பலத்துடன் போர்க்களத்திற்கு திரும்பி வந்ததைக் கண்டதும் உற்சாகமானார்கள். இரு மருங்கும் மறைந்திருந்து போரிட்ட வீரர்களை நோக்கி கவண்கல்லை மழையாக பொழிந்தனர். இதனால் திணறிய பறங்கி வீரர்கள் சுதாகரிப்பதற்குள் அவர்களை வெட்டிச் சாய்த்தனர்.

இதேசமயம் போர்க்களத்தின் மத்தியில் சங்கிலிக்கும் பறங்கி கோட்டைத் தலைவன் தொன்பிலிப்புக்கும் இடையில் உச்சக்கட்ட சண்டை நடைபெற்றது. இருவரது வாளும் பெரும் சத்தத்துடன் உராந்தன. நீண்ட நேர போராட்டத்தின் பின் சங்கிலியின் வாள் அவன் மார்பில் பாய்ந்தது. ஏற்கனவே பாரிய இழப்பைக் கண்டிருந்த பறங்கிய வீரர்கள், தலைவனை இழந்ததும் புறமுதுகிட்டு ஓடினார்கள். தாங்க முடியாத ஆத்திரத்தை பறங்கி வீரர்கள் மீது கொண்டிருந்த சங்கிலி வீரர்கள், அவர்களைத் துரத்தித் துரத்தி வெட்டினார்கள். பறங்கிகள் காட்டில் ஓடி மறைந்தார்கள். அவர்களைத் தொடர்ந்த சங்கலி வீரர்கள் பறங்கிகளது கோட்டையை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர்.

கோபாவேசத்தில் சென்ற சங்கிலியின் வீரர்கள் அங்கிருந்த பறங்கிப் பெண்களிடம் சேஷ்டை புரிய முற்பாட்டார்கள். அச்சமயம் அங்கு வந்த சங்கிலி “வீரர்களே! எமக்குத் தேவை வெற்றி, அது கிடைத்து விட்டது. இனி வன்முறை தேவையில்லை. இங்கிருக்கும் பெண்களும், குழந்தைகளும், வயோதிபர்களும் எதுவித பாவமும் செய்யாதவர்கள். அவர்களைத் தண்டிப்பது தகாத செயலாகும். எனவே அவர்களை பாதுகாப்பாக மரக்கலங்களில் ஏற்றி அவர்கள் இடங்களுக்கு அனுப்புவதற்கு நடவடிக்கைகளை மேற்கொள்ளுங்கள். இங்குள்ள திரவியங்களை ஏற்றி நம் கோட்டைக்கு அனுப்புங்கள்” எனக் கூறினான்.

சங்கிலி சொற்படியே சகலவற்றையும் நிறைவேற்றி முடித்த வீரர்கள் மீண்டும் நல்லூர் கோட்டை நோக்கி செல்ல ஆயத்தமானார்கள்.

சாதிக்க வருவான்…