Pages

Tuesday, September 28, 2010

சரித்திரவீரன் சங்கிலி (பாகம் 29 –துவண்ட கொடி)

பறங்கி வீரர்களால் சிறையில் தள்ளப்பட்டிருந்த சங்கிலி இரத்தம் அதிகமாக வெளியேறியதால் நினைவற்று மயங்கிக் கிடந்தான். இக்கொடுமையை காணச் சகிக்காத பகலவனும் தன் ஒளியை சிறிது சிறிதாகக் குறைத்துக் கொண்டு மேற்றிசையில் மறைந்து விட்டான். மெல்ல இருள் ஏறியதும், ஓர் உருவம் மெதுவாக சங்கிலியிருந்த சிறைக்கதவை ஓசைப்படாமல் திறந்து உள் வந்தது.

அங்கு, சங்கிலியனை கொஞ்ச நேரம்; வைத்த கண் வாங்காது பார்த்துக் கொண்டிருந்தது. பின்னர் குருதியில் தோய்ந்த அவன் ஆடைகளை உடல் வலிக்காதவாறு மெதுவாகக் கழற்றியது. வீரஞ்செறிந்த அவன் உடலின் நிலை கண்டு அவ்வுருவத்தின் கண்களில் இருந்து நீர் வழிந்தது. மெல்ல சங்கியது காயங்களை சுடுநீர் கொண்டு சுத்தப்படுத்தி பின் காயங்களுக்கு மருந்திட்டுக் கட்டியது. தான் கொணர்ந்த மாற்றுடையை அவனுக்கு அணிவித்து, உயர்ந்த மது வகை ஒன்றை அவன் வாய்க்குள் ஊற்றியது. சங்கிலியின் கடைவாயால் வழிந்தோடிய மதுவை ஆசையுடன் துடைத்து விட்டது. பின் நீண்ட நேரம் அங்கேயே உட்கார்ந்திருந்தது.

இந்த உபசாரங்களால் சிறிது சுய நினைவுக்கு வந்த சங்கிலி மெல்லக் கண் விழித்தான். உடம்பு, உயிரே போய்விடும் அளவிற்கு வலித்தது. தன் வாயருகே மது மணப்பது போல உணர்ந்ததால் சற்று அங்கும் இங்கும் கண்களைத் திருப்பியவன், பக்கத்தில் இருந்த உருவத்தைப் பார்த்ததும் “நீயா?” என வினவியதுடன் எழுந்திருக்கவும் முற்பட்டான். அது முடியாமல் போகவே மீண்டும் படுத்துக் கொண்டான்.
“ஆம் நானே தான்”
“இங்கு எப்படி வந்தாய்?”
“இதென்ன கேள்வி, என்னிடத்தில் நான் சுற்றித்திரிய யார் தடுப்பார்கள்?” என்று கூறியது அவ்வுருவம். அப்பொழுது தான் சங்கிலி, தன் காயங்கள் சுத்தப்படுத்தப்பட்டு மருந்திடப்பட்டு உடை மாற்றியிருப்பதை கவனித்தான். இதனால் சங்கடப்பட்ட சங்கிலி,
“எலியானா! இந்த உடைகளை மாற்றியது யார்?”
“ஏன்.. நான் தான்…”
“உனக்கு வெட்கமாக இல்லையா?”
“எதற்கு?”
“ஒரு ஆடவனின் உடையை மாற்றுவதற்கு”
“இதில் வெட்கமென்ன இருக்கின்றது. உங்களை என்றோ நான் கணவனாக வரித்து விட்டேன். ஒரு கணவனுக்கு மனைவி இதைக் கூடச் செய்யக் கூடாதா?” என நகைத்தாள்.
“விளையாடாதே எலியானா!”
“நீங்கள் விளையாடும் நிலையிலா இருக்கிறீர்கள்”
“உன் வேடிக்கைப் பேச்சுக்களை நிறுத்து, அது ரசிப்பதாக இல்லை”
“அப்படியானால் ருசிக்கும் படியாக ஒன்று தருகின்றேன்” என அவன் இதழ்களை தன்னிதழ்களால் அழுத்தி முத்தமிட்டாள்.
சிறிது நேரத்தில் நிகழ்ந்து விட்ட இந்தச் சம்பவத்தால் நிலை தடுமாறிய சங்கிலி, “என் நிலை தெரியாமல் விளையாடுகின்றாய். இது தகாது” எனக் கூறினான். “நன்றாகவே தெரியும். நீங்கள் உறங்குங்கள். நாளை உங்களை விடுவிப்பதற்கான ஏற்பாடுகளைச் செய்கின்றேன்” எனக் கூறிவிட்டுச் சென்றாள். சங்கிலி பேச சக்தியற்று வாயடைத்து நின்றான்.

மறுநாளும் இரவு எலியானா சங்கிலி சிறைக்குள் வந்தாள். கூடவே கையில் ஓர் உடையையும் கொண்டு வந்தாள்.
“கிளம்புங்கள்”
“எங்கு?”
“உங்கள் ஊருக்குத் தான்”
“தளபதி கருணை அடிப்படையில் விடுவித்து விட்டானா?”
“தளபதியாவது விடுவிப்பதாவது”
“பிறகெப்படி செல்வது. தப்பிப் போகச் சொல்கிறாயா?”
“வேறு வழியில்லை”
“நான் மாட்டேன். நான் என்ன கோழையா?”
“இனியும் தாமதிப்பது எம் இருவருக்குமே ஆபத்து. உங்களை அவர்கள் நேர்மையாகவா பிடித்தார்கள். நீங்கள் தப்பிச் செல்வதில் எந்தவித தப்பும் இல்லை”
“நான் அதை விரும்ப மாட்டேன்”
“நீங்கள் இங்கிருந்து உயிரை விடுவது தான் மிச்சம். அங்கு உங்களுக்காக காத்திருக்கும் உங்கள் நாட்டு மக்களுக்காகவேனும் நீங்கள் தப்பிச் செல்லுங்கள்” எனக் கூறிய எலியானா முக்காடுடைய ஒரு சட்டையை எடுத்து சங்கிலியிடம் கொடுத்து அணிவித்தாள். சுpறையில் இருந்து மெதுவாக வெளியேறிய இருவருக்கும் காவலர்கள் தடை விதிக்கவில்லை. காரணம் எலியானா பிரகன்ஸாவின் காதலி. முக்காடிட்ட உருவம் யாரென்பது காவலாளிகளுக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை. சங்கிலியை மெதுவாக கோட்டையின் பின்புறம் அழைத்து வந்த எலியானா, அங்கு தயாராக இருந்த ஒரு குதிரை வண்டியில் அவனை ஏற்றி விட்டு குதிரை ஓட்டுபவனிடம், “வீரனே, இவரை கவனமாக நான் கூறியது போல கொண்டு போய் சேர்” என்றாள்.

பின்னர் சங்கிலியைப் பார்த்த போது, அவள் கண்களில் தெரிந்த ஏக்கத்தை அவன் கவனித்தான்.
“எலியானா! நீயும் என்னுடன் வந்து யாழிலே தங்கியிருக்கலாமே!”
“அது தவறு”
“எது?”
“நான் உங்களுடன் வருவது”
“ஏன்?”
“நீங்கள் திருமணமானவர். அத்துடன் காதலியும்…” என இழுத்தாள்.
“பரவாயில்லை! ஒரு உற்ற தோழியாக என் அரண்மையில் தங்கியிரு”
“நீங்கள் என் மீதுள்ள இரக்கத்தால் என்னை அழைக்கிறீர்களே தவிர, உங்களுக்கு என் மீது எந்தவித தனிப்பட்ட பற்றும் இல்லை” என கூறினாள். அதனைக் கேட்ட சங்கிலி பேசாதிருந்தான். அவள் விழிகளில் இருந்து நீர் வழிந்தது. அவள் கையை ஆதரவுடன் பற்றிய சங்கிலி அவள் நெற்றியில் முத்தமிட்டு, “எலியானா நீ நிச்சயம் வரலாறுகளில் பேசப்படுவாய். நீ செய்திருக்கும் உதவியை என்றுமே நான் மறக்க மாட்டேன்” எனக் கூறினான்.

பெருகி வந்த அழுகையை அடக்கிக் கொண்ட எலியானா, “நேரமாகிறது. புறப்படுங்கள்” எனக் கூறினாள். இதனால் சங்கிலி வண்டியும் மெல்ல மெல்ல நகர்ந்தது. அவன் வண்டி கண்ணிலிருந்து மறைந்ததும் அழுகையை அடக்க முடியாது வாய்விட்டழுதாள். பின்னர் மெல்லத் திரும்பி கோட்டையினுள் அடியெடுத்து வைக்க திரும்பிய போது, பின்னால் நின்ற பிரகன்ஸாவை கண்டு அதிர்ச்சியுற்றாள்.

“என்ன உன் காதலனை தப்புவித்து விட்டாயா? நல்லது. நான் அன்றே சந்தேகப்பட்டேன். இன்றும் சந்தேகத்தில் சிறை சென்று பார்த்த போது அவனைக் காணவில்லை. அவன் இப்போது எங்கள் கண்ணிலிருந்தே மறைந்து விட்டான். அவனைப் பிடிக்க எவ்வளவு கஷ்டப்பட்டோம் என்பது நீ அறியாததுமல்ல”
“அவர் வீரர். உன்னை மாதிரி கோழையல்ல முதுகில் குத்துவதற்கு”
“ஓகோ! அப்படியா சங்கதி. சந்தோஷம்! அவனைத் தப்புவித்ததற்கு உனக்கு நல்ல பரிசை நான் தர வேண்டாமா?” எனக் கூறிய படி பிரகன்ஸா தன் இடையில் செருகியிருந்த குறுவாளை எடுத்து அவள் மார்பில் ஓங்கிக் குத்தினான். எலியானா துவண்டு நிலத்தில் விழுந்தாள். அவளது வெள்ளை மேனியையும், பூமியையும் செந்நிறம் ஆட்கொண்டது. இது சங்கிலிக்கு தெரிய வாய்ப்பில்லை.

இதேவேளை, ஆவேசத்துடன் சங்கிலி யாழ்ப்பாணத்தின் கதியை நிர்ணயிப்பதற்காக கோட்டை நோக்கி சென்று கொண்டிருந்தான்.

சாதிக்க வருவான்…

2 comments:

ம.தி.சுதா said...

தங்களது இத்தொடர் மிகவும் ரசிக்கக் கூடிய ஒன்று நான் ஆரம்பத்திலிரந்த வாசித்து வருகிறேன்... எல்லாவற்றிலும் கருத்திட முடியவில்லை மன்னிக்கவும்.. ஆனால் வாக்கிடுகிறேன்...

KANA VARO said...

ம.தி.சுதா said...//

நன்றி நண்பா

Post a Comment