Pages

Friday, September 17, 2010

சரித்திரவீரன் சங்கிலி (பாகம் 28 -சிறையில் சங்கிலியன்)

மயக்கத்திலிருந்து விழித்த சங்கிலிக்கு தான் ஓர் புதிய இடத்தில் இருப்பதை உணர முடிந்தது. தலையை உயர்த்தி எதையும் பார்க்க முடியாமல் இருந்தது. உடலெங்கும் பயங்கரமாக வலியெடுத்தது. எழுந்திருக்க மனமில்லாமல் கல்மேடையிலேயே மல்லார்ந்து படுத்துக் கிடந்தான். சிறிது நேரத்தில் வெளியே ஆரவாரப்படுவதை அவனால் உணர முடிந்தது. 'அவன் வழித்து விட்டான்" என வெளியில் யாரோ சத்தமிடுவது சங்கிலியின் காதில் கேட்டாலும், அதை கணக்கிலெடாது பேசாமல் படுத்திருந்தான். சிறிது நேரத்தில் சிலர் தன்னை நோக்கி வருகின்றார்கள் என்பதை உணர்ந்து கொண்டான்.

'பார்த்தீரா தளபதியாரே! தன் பள்ளியறைப்பஞ்சணை போல் எவ்வளவு நிம்மதியாக உறங்குகின்றான். பயம் என்பது இவன் முகத்தில் கொஞ்சமாவது தெரிகின்றதா?" என்றான் ஒருவன். அவன் குரலை அடையாளம் கண்டு கொண்ட சங்கிலி, தன்னருகே காக்கை வன்னியனும், பறங்கித்தளபதி பிரகன்ஸாவும் நிற்பதை உணந்து கொண்டான். மெல்ல எழுந்து உற்கார்ந்தும் கொண்டான்.
நிமிர்ந்து வன்னியனைப் பார்த்த சங்கிலி, 'நண்பா! நீ இப்படி கயவர்களுடன் சேர்ந்து என்னைக் காட்டிக் கொடுப்பாய் என நான் கனவிலும் நினைத்திருக்கவில்லை" என்றான்.
'நீ என் இனத்திற்கு செய்த கெடுதலுக்கு உன்னை விட்டு வைத்ததே பெரிய விடயம். வன்னியர்களை யாழ்ப்பாணத்தில் இருந்து ஓட ஓட விரட்டினாய் அல்லவா? அதற்கான பலனை இப்போது அனுபவி" என்றான் காக்கை வன்னியன்.
'கோழைத்தனமாக என்னை கைது செய்திருக்கிறீர்களே! இது முறையா?"
'உன்னை மடக்குவதற்கு இதை விட வேறு வழி எங்களுக்குத் தெரியவில்லை"
'பிற்கால சந்ததி உன்னைத்தூற்றுமே! அதையாவது நினைத்துப் பார்த்தாயா?"
'இக்கால சந்ததி பற்றியே எனக்கு கவலை இல்லை. இதில் பிற்கால சந்ததி பற்றி நான் ஏன் கவலை கொள்ள வேண்டும்"
'நாங்கள் தமிழர்கள். இனத்தால் ஒன்று பட்டவர்கள். ஒரே இரத்தம். ஒரே உறவுகள். அடித்தாலும் பிடித்தாலும் அண்ணன் தம்பிகள் தான். ஆனால் நீ எங்கிருந்தோ வந்த பறங்கிகளுடன் உறவு வைத்திருக்கிறாயே. இது தகுமா?"
'யார் கூறியது நாங்கள் அண்ணன், தம்பியென? நீ அவ்வாறு நினைத்திருந்தால் அன்று எங்களை விரட்டியிருக்கமாட்டாய். இன்று இவ்வளவு கஷ்டத்தை எதிர்நோக்க வேண்டிய தேவையும் இல்லை"
'அன்று நடந்த சம்பவத்தை சரிவர விளங்கிக் கொள்ளாமல் முட்டாள் தனமாக உளறாதே! வன்னியர்கள் அன்று நாட்டினுள் கலகமூட்டினார்கள். ஒரு நாட்டுக்கு தலைவன் என்ற ரீதியில், அந்நாட்டின் நன்மை கருதி அவர்களை வெளியேற்ற வேண்டியதாயிற்று" என்றான் சங்கிலி.

இவர்கள் சம்பாஷணையை பார்த்துக் கொண்டு பேசாமல் இருந்த பிரகன்ஸா இடையில் புகுந்து, 'சவாலா விட்டாய் என்னிடம், இப்போது பார்த்தாயா உன் உயிர் என் கையில்" என்றான்.
'என் உயிரைத் தான் உன்னால் எடுக்க முடியும். என் மக்களின் அன்பையும், தேசப்பற்றையும் உன்னால் ஒருபோதும் பெற முடியாது" என சங்கிலி ஆவேசமாகக் கத்தினான்.
'சிங்கம் கூட்டில் இருந்தாலும் கர்ச்சிக்கின்றது" என கொக்கரித்தான் பிரகன்ஸா. பின், 'உன் திமிர் என்றும் உன்னை விட்டுப் போகாது. உனக்குத் தகுந்த பாடம் புகட்டுகின்றேன்" என்றான்.
'வீரமும், தேச பக்தியும் எம் இரத்தத்தில் இரண்டறக் கலந்துள்ளன. நாங்கள் சந்தர்ப்பவாதிகள் அல்ல. என் போன்ற ஆயிரமாயிரம் பேர் இன்னும் யாழ்ப்பாணத்தில் இருக்கின்றார்கள். அவர்கள் இருக்கும் வரை ஒரு துரும்பைக் கூட உன்னால் அசைக்க முடியாது"
'உன் அண்ணன், அங்கு எனக்கு கட்டுப்பட்டு ஆட்சி நடத்துகின்றான்"
'காலம் வரும்போது மக்கள் அவனுக்கு தக்க பாடத்தைப் புகட்டுவார்கள். பறங்கிகளே! நீங்கள் மீண்டும் ஓடத்தான் போகிறீர்கள். இது நிச்சயம்;" என சங்கிலி முழங்கினான்.
'நீ இருந்தால் தானே இதெல்லாம் நடக்கும். உனக்கு தக்க தண்டனை தருகின்றேன் பார்!" எனக் கூறிய பிரகன்ஸா வாயிலைப்பார்த்து, 'யாரங்கே?" என கூவி அழைத்தான். அவன் அழைப்பின் பேரில் ஐந்தாறு பறங்கி வீரர்கள் சட சட என ஓடி வந்தார்கள்.
'இவனை இழுத்துச் சென்று தூணில் கட்டி நூறு கசையடி கொடுத்து மீண்டும் சிறையில் அடையுங்கள். நீர் கூடக்கொடுக்க கூடாது" எனக் கட்டளையிட்டான்.

அதற்கமைய வீரர்களும் சங்கிலியை தர தரவென நிலத்தால் இழுத்துச் சென்று தூணில் கட்டினார்கள். ஒரு பறங்கி வீரன் நீண்ட சவுக்கொன்றால் தாறு மாறாக சங்கிலியை அடித்தான். எந்தவித எதிர்ப்பையும் காட்டாதிருந்த சங்கிலியின் உடலின் பல இடங்கள் வெடித்து அதிலிருந்து இரத்தம் வழிந்தோடியது. அவன் அணிந்திருந்த உடை இரத்தத்தினால் தெப்பமாக நனைந்திருந்தது. தலை துவண்டு தொங்கியது. விதிக்கப்பட்ட தண்டனை நிறைவடைந்ததும் சங்கிலி இழுத்துச் செல்லப்பட்டு மீண்டும் சிறையில் வீசப்பட்டான்.

மயங்கிய நிலையில் பல மணி நேரம் சிறையில் உறங்கிக் கிடந்த சங்கிலி, மயக்கம் தெளிந்து எழுந்ததும் தன்னருகே இருந்த உருவத்தைப் பார்த்து திகைப்படைந்து 'நீயா?" என்ற சொற்கள் அவன் வாயிலிந்து வெளிவரத் தொடங்கியது.

சாதிக்க வருவான். ..

0 comments:

Post a Comment