Pages

Wednesday, August 11, 2010

சரித்திரவீரன் சங்கிலி (பாகம் 25 காக்கை வன்னியன்)

சங்கிலியனின் வழி நடத்தலின் கீழான படைகளுக்கு முகம் கொடுக்க முடியாத பறங்கித் தளபதி பிரகன்ஸாவும் ஏனைய போர் வீரர்களும் ஊர்காவற்துறையில் நிலை கொண்டிருந்த காக்கை வன்னியனிடம் சென்றார்கள்.

“வலிய வந்து எங்களுக்கு மண்ணாசை காட்டிவிட்டு, இப்படி இங்கு சகல சௌபாக்கியங்களுடனும் ராஜா மாதிரி இருக்கிறாயே! உன் பேச்சை நம்பி, நாம் அடைந்த கதியைப் பார்த்தாயா?” எனப் பிரகன்ஸா சீறினான்.
“தளபதியாரே! சற்று அமைதியாக இருங்கள். எல்லாவற்றிற்கும் ஒரு காலம் உண்டு” எனச் சமாதானப்படுத்த முயன்றான் வன்னியன்.
“இவ்வாறு தான் அன்றும் கூறினாய், இன்று என் நிலையைப் பார்த்தாயா? எங்கள் சேனையில் பதினொராயிரம் வீரர்களும் சிறந்த கோட்டைத் தலைவனும் மாண்டது தான் நாம் கண்ட முடிவு”
“போர் ஏற்படின் உயிரிழப்புக்கள் ஏற்படுவது வழமை தானே!”
“ஏன் கூற மாட்டாய் வன்னியா? போரில் உயிரிழப்புக்கள் சகஜம் தான். ஆனால் எந்தவொரு பிணக்குகளுக்கும் போகாமல் அமைதியாக இருந்த எங்களை உங்கள் பிணக்கிற்கான நடுவில் இழுத்துப் பந்தாடி விட்டீர்களே! உதவிக்கு கூட ஒருவரும் வரவில்லை”
“பெரும் படை பலம் பொருந்திய நீங்கள் சமாளிப்பீர்கள் என எண்ணியிருந்தேன். நீங்கள் மண் கௌவி விட்டீர்களே! உங்கள் பீரங்கிக் குண்டுகளுக்கு கூட அவர்கள் பயப்படவில்லையா?”
“சங்கிலியின் படைகளின் கவண் கல்லுக்கும், எரியம்புகளுக்கும் முன் எங்கள் பீரங்களில் எந்த மூலைக்கு? அவர்களின் போர் தந்திரம் தான் என்ன!”
“நீங்கள் எமக்கு அறிவித்திருக்கலாமே! உதவியுடன் விரைந்து வந்திருப்போம்”
“நாங்கள் அறிவிக்கும் நிலையிலா இருந்தோம். அப்பா! அந்த சங்கிலி இருக்கிறானே, அவனைப் போல் ஒரு சுத்த வீரனை நான் இதுவரை கண்டதில்லை. உன்னைப் போல் கோட்டையில் அடைந்து கிடக்காமல் வீரர்களுடன் வீரர்களாக நின்று போரிடுகின்றான். பயமென்பது துளியும் அவன் உடம்பில் இல்லைப் போலும்”
“க்கும்… அது தெரிந்த விடயம் தானே!”
“இதை முன்பே கூறி அனுப்புவதில்லையா வன்னியா?”
“உங்கள் போர்த்திறனுக்கு முன் அவன் படை சுருண்டு விடும் என எண்ணினேன்”
“இப்பொழுது என்ன செய்வதாக உத்தேசம். எங்களுடன் நீயும் எங்களுர் வந்து விடுகிறாயா?” என பிரகன்ஸா இகழ்ச்சியுடன் வினவினான்.

பறங்கித் தளபதியின் இகழ்ச்சியை கவனித்த காக்கை வன்னியன் தன் நிலைமையை எண்ணி ஏதும் சொல்ல இயலாதவனாக இருந்தான். அதனால் மீண்டும் தளபதி,
“என்ன வன்னியா வருகிறாயா?”
“அதில்லை… நாம் மீண்டும் அங்கு செல்ல வேண்டும்”
“எங்கு?”
“யாழ்ப்பாணம் தான்”
“ஐயோ, நாம் வாழ வழிகேட்டால்.. நீ சாக வழி சொல்கிறாயே. நாங்கள் அங்கு வரவில்லை”
“நீங்கள் பயப்படும்படி எதுவும் இல்லை. இம்முறை போரிடத் தேவையில்லை. சமயோசிதமாக அவனைக் வெல்ல திட்டம் தீட்டியிருக்கின்றேன். யாழ்ப்பாணத்தில் இருந்து ஒரு தூதனை எதிர்பார்த்திருக்கின்றேன். அவன் வந்த பின் தான் எனது முடிவைக் கூற முடியும்” என்றான்.

அச்சமயம் யாழ்ப்பாணத்திலிருந்து தூதன் ஒருவன் வந்திருக்கின்றான் என்ற செய்தி காக்கை வன்னியனுக்கு அறிவிக்கப்பட்டது. இதனால் ஓடிச் சென்று அவனை பிரகஸா இருக்குமிடம் அழைத்து வந்தான். அவன் முன்னிலையில் காக்கை வன்னியனது விசாரணை தொடர்ந்தது.
“என்ன விடயமாக வந்திருக்கின்றாய்”
“பரநிருபசிங்கன் ஓலை ஒன்றை அனுப்பியிருக்கின்றார்.”
“அப்படியா? நல்லது கொடு” என அவன் ஓலையை வாங்கிப் படித்ததும் அவன் முகம் பிரகாசமானது. அவ்வோலையை பறங்கித் தளபதிக்கும் காட்டினான்.

இதுவரையும் வெளிப்படாது இருந்தோம். இனி வெளிப்பட்டு கருமம் முடித்தல் வேண்டும். ஆயத்தமாக வருக.
பரநிருபசிங்கன்

மேற்கண்டவாறு குறிப்பிட்டு பரநிருப சிங்கனது இரகசிய முத்திரை குறிப்பிடப்பட்டிருந்தது.

ஓலையைக் காட்டிய வன்னியன் “பார்தாயா பிரகன்ஸா! நமக்கு காலம் கனிந்து வந்து விட்டது. இதற்காகத் தான் இவ்வளவு நாளும் காத்திருந்தோம். நீ மட்டும் சங்கிலியுடன் வாக்குவாதப் படாது இருந்திருந்தால் இந்நேரம் யாழ்ப்பாணம் எங்கள் வசம் வந்திருக்கும்” என்றான்.
“இப்போது என்ன செய்வது?”
“மீண்டும் போரிட வேண்டும்”
“என்னிடம் படை இல்லையே!”
“எனது படையின் சிறு பகுதியையும், உனது படையின் எஞ்சிய பகுதியையும் சேர்த்து யாழ்ப்பாணம் அழைத்து வா. ஆனால் அதற்குத் தேவை இருக்காது என நினைக்கின்றேன். இதில் ராஜ தந்திரங்கள் நிறையவே இருக்கின்றன” என்று காக்கை வன்னியன் கூறினான்.

இதன்படி படையை செப்பனிடும் பணியைப் பிரகன்ஸா கவனத்துக் கொண்டான். படையைப் பின்னால் வருமாறு கூறிவிட்டு காக்கை வன்னியன் விரைந்து நல்லூரையடைந்து மாறு வேசத்தில் பரநிரபசிங்கனிடம் வந்தடைந்தான்.
“யார்? காக்கை வன்னியனா?”
“ஆம்”
“அடையாளமே தெரியவில்லையே”
“அது தான் மிகவும் நல்லது”
“உடனடியாகப் புறப்பட்டு வந்து விட்டாயே”
“இதற்குத் தானே காத்திருந்தோம்”
“ஆம்.. ஆம்”
“இப்போது என்ன செய்வதாக உத்தேசம்”
காக்கை வன்னியனை அருகில் அழைத்த பரநிருபசிங்கன் அவன் காதில் ஏதோ கூறினான். அதைக் கேட்ட வன்னியன் “ஆகா திட்டமென்றால் இதுவல்லவா திட்டம்” என்று பரநிருப சிங்கனைப் பாராட்டினான். பிறகு மாறுவேடத்திலேயே மீண்டும் மரக்கலமேறிச் சென்று பின்வந்த பறங்கியர் படைகளுடன் கலந்து கொண்டான்.

காக்கை வன்னியன் நகருக்கு வந்து சென்ற விடயம் யாருக்கும் தெரிய வாய்ப்பில்லை. ஆனால் பறங்கிப் படைகள் மீண்டும் வருவதை ஒற்றர்கள் வாயிலாக அறிந்த சங்கிலி கடுஞ்சினமடைந்து உடனடியாக அரச உயர்மட்டத்தனைக் கூட்டி சபா மண்டபத்தில் சந்தித்தான்.
“கோழை! புறமுதுகிட்டு ஓடிவிட்டு மீண்டும் வருகின்றான் பிரகன்ஸா. இவனை அன்றே தொலைத்திருக்கலாம். மானங்கெட்டவன். ஓடிவிட்டான்” என சங்கிலி சினந்தான்.
“அவன் ஆயுள் ரொம்பவே குறைவு போலிருக்கின்றது. அது தான் நம்மீது படை எடுக்கின்றான். இறந்தால் வீரனின் கையால் இறக்க வேண்டுமென அவன் நினைக்கிறான் போலிருக்கின்றது” எனக் கூறிய இமையாணன் இடியென நகைத்தான்.
“தளபதி அவர்களே! அவர்கள் மீண்டும் நம்மிடம் கண்ட தோல்விகளையெல்லாம் மறந்து வருகின்றார்கள் என்றால் அவர்களுக்கு ஒரு பெரிய துணையொன்று இருக்கின்றது. அவர்களை நாம் மட்டமாக எடை போடக் கூடாது. எதற்கும் மிகக் கவனமாக இருக்க வேண்டும்” என்றான் சங்கிலி.
“எது எவ்வாறாக இருந்தாலும் நம்மிடத்தில் வந்து போரிட்டு எவனும் மீண்டதாக சரித்திரமே இல்லை. நாம் பயப்பட வேண்டிய அவசியமில்லை” என்றான் வீரமாப்பாணன்.
“பரவாயில்லை. என்றாலும் தளபதியாரே! மீண்டும் நம்படைகளை பழைய பொழிவுடன் விரைவாகக் கட்டியெழுப்பும்” எனச் சங்கிலி கூறினான்.

படையணிகளோடு தனக்கு நடக்கவிருக்கும் ஆபத்தை அறியாத சங்கிலி கோட்டை வாயிலை வந்தடைந்தான். அங்கு அவனுக்கு அதிர்ச்சி மேல் அதிர்ச்சி காத்திருந்தது.

சாதிக்க வருவான்….

Saturday, July 31, 2010

சரித்திரவீரன் சங்கிலி (பாகம் 24 - துருவங்கள் சந்திப்பு)

பனிக்காலம், பொழுது புலர்ந்து ஒரு நாழிகை நேரமாகியும் பனி மூட்டம் இன்னும் கலையவில்லை. பகலவனும் முகம் காட்டவில்லை. எங்கெங்கும் வெண் பனித்திரை விரிந்து கவிந்திருந்தது. நீரணுக்கள் நிறைந்த கனத்த பனிப் புகையால் உலகின் தோற்றமே ஒடுங்கி மறைந்து விட்டிருந்தது. புல்லிதழ்களின் மடியில் வயிரமணிகள் உருண்டிருந்தன. மர இலைகளில் முத்துக்கள் காய்த்திருந்தன. பூமாதேவியின் இதயமே உறைந்து சுருங்கி விடத்தக்க குளிர். சகிக்க முடியாத தண்ணென்ற வரட்சிக் காற்று.

இத்தகைய பொல்லாப் பனியையும், காற்றையும் கொஞ்சமும் பொருட்படுத்தாமல் சங்கிலியின் அரண்மனைக்குள்ளே முக்காடிட்டு வந்த ஒரு உருவம் வாயிற் காவலனிடம் ஏதோ கூறியது. அவனும் அதற்கிணங்கி ராணி இராசமாதேவியை வந்தடைந்து வணக்கி நின்றான்.
'வணங்குகிறேன் தேவி"
'இருக்கட்டும்.. என்ன விடயம்?"
'உங்களைப் பார்க்க பெண்ணொருத்தி வந்துள்ளாள்"
'யாரவள்?"
'தெரியவில்லை"
'இந்த நேரத்திலா?"
'ஆம்..."
'வரச்சொல் பார்க்கலாம்"
மாதேவியிடம் இருந்து விடை பெற்றுச் சென்ற காவலன் அந்தப் பெண்ணை உள்ளே அனுப்பினான்.

உள்வந்த பெண்ணைக் கண்டதும் பெரிதும் சினப்பட்ட தேவி, 'யார்... அப்பாமுதலியின் மகள் வடிவழகியோ?"
'ஆம்!"
'இங்கு எப்படி வந்தாய்? வந்திருப்பது நீயெனத் தெரிந்திருந்தால், உன்னை உள்ளே வரவே அனுமதித்திருக்க மாட்டேன். ஒழுக்கங் கெட்டவளே! என்னருகில் வர உனக்கென்ன துணிவு. இது முதற்தடவையாக இழைத்த குற்றமாதலால் மன்னித்து விடுகின்றேன். பிழைத்துப் போ... இனி இந்த மாளிகைக்குள் காலடி எடுத்து வைக்கக் கூடாது. புரிந்ததா?... அங்கயற்கன்னி! இந்தச் சிறுக்கியை என் முன் நிற்கவிடாதே.. போகச் சொல்!" என தேவி ஆத்திரத்தில் கத்தினாள்.

தேவியின் குரலைக் கேட்டு பக்கத்தறையில் இருந்து ஓடி வந்த தோழி, அங்கு நின்ற இருவரையும் மாறி மாறிப் பார்த்து 'அழகில் இருவரும் சளைத்தவர்கள் அல்ல" என தனக்குள் கூறிக்கொண்டு வடிவழகி அருகே சென்றாள். இதனால் சற்று அப்பால் விலகிய வடிவழகி இராசமாதேவியைப் பார்த்து 'தேவி! நான் செய்தது குற்றம் தான். என்னில் கோபிக்க வேண்டாம். அரச வாழ்வுக்கும் எமக்கும் எட்டாப் பொருத்தம் என்பதனை இப்பொழுது நன்கு அறிந்து கொண்டேன். தெரியாமல் செய்த குற்றம். மன்னித்து விடுங்கள். நான் இப்போது இங்கு வந்தது வேறு காரியமாய். அது இரகசியம். நீங்களே அதைக் கட்டாயம் அறிதல் வேண்டும்" என விண்ணப்பித்துக் கொண்டாள்.

'சரி, உன் இரகசியத்தைக் கூறு" என்றாள் தேவி அலட்சியமாக.. தேவியின் கண்ணில் தெரிந்த அலட்சியத்தை அவதானித்த வடிவழகி, அங்கும் இங்கும் பார்த்து விட்டு 'தேவி! அரசருக்கு எதிராக பல சூழ்ச்சிகள் நடக்கின்றன. அவரை மிகவும் கவனமாக இருக்கச் சொல்லுங்கள். அவர் நலனுக்காக பாடுபடுவோர் போல பலர் வெளியில் காட்டித்திரிகிறார்கள். அவர்களை நம்பவேண்டாம். படு மோசம் பண்ணி விடுவார்கள்" என எச்சரித்தாள்.

சூழ்ச்சி மகாராஜாவிற்கு எதிராக என வடிவழகி கூறியவுடன் பதற்றமடைந்த தேவி சிறிது நிதானித்துக் கொண்டு, மிகக் கவனமாய் எழுந்து சென்று வடிவழகியின் கையைப் பிடித்து அழைத்து வந்து இருக்கையொன்றில் இருத்தி 'பயப்படாதே! ஏன் அப்படிச் சொல்கிறாய்? இந்த வஞ்சகச் சூழ்ச்சிகள் பற்றி உனக்கு ஏதோனும் தெரியுமோ? அஞ்சாமற் சொல்லு. உனக்கு நான் பாதுகாப்புத் தருகின்றேன்" என்றாள்.

'ஆம் தேவி! எல்லாமே எங்கள் வீட்டில் தான் நடக்கின்றது."
'அப்படியோ?"
'தேவி, உங்களை மன்றாடிக் கேட்டுக்கொள்கின்றேன். நான் இங்கு வந்தது ஒருவருக்கும் தெரியக் கூடாது. என்னைக் கடுங்காவலில் வைத்திருக்கிறார்கள். என்றாலும் ஒருவகையாகத் தப்பி வந்தேன். நான் வந்ததை அவர்கள் அறிந்தால் என் உயிருக்கே ஆபத்து."
'தெரியும். ஒன்றுக்கும் பயப்படாதே! உனக்குத் துணையாக நான் நிற்கின்றேன்" என ஆதரவாக அவள் தோளில் தட்டினாள் தேவி.
'தேவி! நான் இனி இங்கு நிற்க முடியாது. நேரமாகின்றது. வீட்டுக்குப் போய்ச்சேர வேண்டும்" என அவசரப்பட்டாள் வடிவு.
'சரி, அங்கயற்கன்னி... வடிவழகியை கவனமாக மாளிகையின் பின் பக்கக் கதவால் கொண்டு சென்று, அவள் வீட்டுப் பூந்தோட்ட வாயில் வரை சென்று விட்டு வா. ஒருவருக்கும் தெரியாமல் இருவரும் கவனமாகப் போங்கள்" எனக் கூறினாள்.

அவர்கள் சென்றதும், இராசமாதேவி ஆழந்த எண்ணத்தோடு அங்குமிங்கும் உலாவினாள். சிறிது நேரத்தில் அங்கயற்கன்னி திரும்பி வந்தாள்.
'என்ன தோழி! அதற்குள் திரும்பி வந்து விட்டாய். வடிவு எங்கே?"
'அவளைத் தக்க துணையுடன் அனுப்பி விட்டேன்".
'யாருடன்?"
'மன்னரின் தோழர் மாப்பாணனுடன்..."
'அவரை உனக்கெப்படி தெரியும்?"
பதில் கூற முடியாது வெட்கத்தில் தோழியின் கன்னம் சிவந்தது.
'அடி கள்ளி! எனக்குத் தெரியாமற் போய் விட்டதே. பரவாயில்லை. ஆனால் நாம் வடிவழகியைப் பற்றி எண்ணியவையெல்லாம் பிழையாகப் போய்விட்டது. அவள் மிகவும் நல்லவள்" என்றார் தேவி.
'நானும் அப்படித் தான் எண்ணுகின்றேன்" என்றாள் தோழி.

சங்கிலிக்கு எதிராக நடக்கும் சூழ்ச்சி பற்றி சங்கிலிக்கு தெரிவித்து உஷார் படுத்த முன்னமே, ஆபத்து கோட்டைக்குள் வந்து விட்டது.

சாதிக்க வருவான்...